search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birds eats fruit"

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், திருப்பதிக்கு வந்தபோது நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். #Nipahvirus

    திருப்பதி:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவை சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் சிகிச்சை அளித்து வந்தார்.

    இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திடீரென அந்த பெண் டாக்டருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உறவினர்கள் மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    காய்ச்சல் ஏற்பட்ட பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்ததால், உடனடியாக திருப்பதி ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பரிசோதனையில் பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் டாக்டரின் ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்பதால், பெண் டாக்டரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரூயா மருத்துவமனை இயக்குனர் பாப்ஜி, கண்காணிப்பாளர் நாயக், பெண் டாக்டருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கவனித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கேரள அரசிற்கும், ஆந்திர மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உயரதிகாரிகள் அனுமதியின்றி வேறு மாநிலங்களுக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த பெண் டாக்டர் அனுமதியின்றி ஆந்திராவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. கலெக்டர் பிரதியும்னா ரூயா ஆஸ்பத்திரிக்கு சென்று நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் வேறு யாருக்கும் பராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். #Nipahvirus

    கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விலை அதிகரித்ததுடன் நிபா வைரஸ் பீதி காரணமாக விற்பனையும் சரிந்தது. #NipahVirus

    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் பெருமாள்மலை, பேத்துப்பாறை, வில்பட்டி, செண்பகனூர், அட்டுவம் பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊடு பயிராக விளைவிக்கப்படுகிறது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் பிளம்ஸ் விளைச்சல் காலமாக உள்ளது.

    இந்த மாதங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் பிளம்ஸ் பழங்களை அதிக அளவு வாங்கி செல்வார்கள்.

    மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    கேரளாவில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய்க்கு முக்கிய காரணமாக வவ்வால் என்று சொல்லப்பட்டாலும் பழங்களை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் என்றும் விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    பிளம்ஸ் பழங்களுக்கு மருந்து தெளிப்பதில்லை. இதனால் இயற்கையாக விளையக்கூடிய இப்பழங்களில் நிபா வைரஸ் தாக்க சாத்தியம் இல்லை.

    இருந்தபோதும் கோடை மழை சமயத்தில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் பழம் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வருடத்தில் விற்றதை விட 2 மடங்கு அதிகமாகும். விலை உயர்வு காரணமாகவும், நிபா வைரஸ் பீதியினாலும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழங்களை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். #NipahVirus

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடுமையான காய்ச்சலுடன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள 2 நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. #nipahvirus
    திருச்சி:

    கேரளா மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 12 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வவ்வால்கள் மூலம் பரவும் ‘நிபா வைரஸ்’ ஏற்பட்டால் பெரும்பாலானோர் இறந்து விடுவதாக கூறப்படுவதால் கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் ‘நிபா வைரஸ்’ பரவுவதை தடுக்க எல்லை பகுதியில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடை பெற்று வருகிறது. மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கேரளாவில் சாலை அமைக்கும் பணிக்காக சென்ற திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கைகாட்டி, கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் பெரியசாமி (வயது 22) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த 20 பேரும் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் கேரளாவில் தங்கியிருந்து சாலை அமைக்கும் பணி செய்து வருகிறார்கள். அப்போது அவர்களுடன் இருந்த பெரியசாமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    காய்ச்சலுடன் கழுத்து வலி, தலைச்சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஏற்பட்டு சுவாசிப்பதிலும் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் கேரளாவில் அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

    நேற்று கேரளாவில் இருந்து திருச்சி கார்வாடிக்கு அனைவரும் ஊர் திரும்பினர். இந்நிலையில் வீட்டில் இருந்த பெரியசாமிக்கு உடல்நிலை மோசமடைந்தது. சுய நினைவு இழந்தார். இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அவரை அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பிறகு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பெரியசாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனிவார்டில் பெரியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கார்த்திக் என்ற மற்றொரு வாலிபரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியானது.

    இது குறித்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் அனிதாவிடம் கேட்ட போது, பெரியசாமி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு ஏற்பட்டிருப்பது ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் தான் என்பது உறுதி செய்யப்பட வில்லை என்றும் தெரிவித்தார்.

    இருப்பினும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சிகிச்சை வசதிகளும் இருப்பதால் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் கூறினார்.

    இதற்கிடையே பெரியசாமியின் ஊரைச் சேர்ந்த கார்வாடி, கைகாட்டி கிராம மக்கள் ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் பீதியில் உள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த பலர் கேரளாவிற்கு சென்று வந்ததால் தங்களுக்கும் பாதிப்பு இருந்து மற்றவர்களுக்கு பரவி விடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

    எனவே தங்கள் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தும்படி அப்பகுதி தாசில்தாரிடம் கிராம மக்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தரவின்படி மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் அப்பகுதிக்கு 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவை அனுப்பி வைத்தார்.

    மருத்துவ குழுவினர் கார் வாடி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யாரும் பீதியடைய வேண்டாம் என வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பீதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #nipahvirus 
    நிபா வைரஸ் பீதியால் கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தமிழகதொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். #NipahVirus

    கம்பம்:

    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப்பகுதிகளான லோயர்கேம்ப், கம்பம் மெட்டு சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    லோயர்கேம்ப் பஸ் நிலையத்தில் தேனி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் அந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி மருந்து தெளித்து வருகின்றனர். காய்ச்சல் இருந்தால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக கம்பம், போடி அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். இதற்காக அவர்கள் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு சாலை வழியாக இடுக்கி மாவட்டத்திற்கு செல்கின்றனர்.


    நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏலக்காய், தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு செல்லும் தமிழக தொழிலாளர்கள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர்.

    நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் உயிரிழந்து விடுவதால் இதுகுறித்த தகவல் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் உள்ளதால் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சைகள் வழங்கியும், கூலித்தொழிலாளர்களின் அச்சத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். #NipahVirus

    கேரளாவில் வவ்வால் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது, பறவைகள் கடித்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #nipahvirus

    சென்னை:

    கேரளாவில் பரவும் ‘நிபா வைரஸ்’ காய்ச்சலுக்கு 16 பேர் பலியாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பாங்கான பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்தும் பழம் தின்னும் வவ்வால்கள் மூலமும் இது பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளா முழுவதும் நிபா வைரஸ் பீதி ஏற்பட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்களின் பீதியை போக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் கேரள அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

    கேரள மந்திரிகள் சைலஜா, டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மந்திரி சைலஜா கூறியதாவது:-

    நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. இரு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கணக்கெடுத்து அவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

    கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து தமிழக எல்லைப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அனைத்து துறையினருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.


    மூளைக்காய்ச்சல், சாதாரண காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழத்தின்னி வவ்வால்கள் மூலமும் மலைப் பாங்கான பகுகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் இருந்தும் தான் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் பன்றி வளர்ப்போர், பண்ணைகள் ஆகியவற்றில் உள்ள பன்றிகளை கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    வனப்பகுதியில் பழங்கள் காய்க்கும் மரங்கள் உள்ளிட்ட பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கேரள எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள்.

    பறவைகள் கடித்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    நோய்வாய்பட்ட பன்றிகள் இருக்கும் பகுதிகளில் புழங்க கூடாது. காய்கறிகள் பழங்களை நன்கு தண்ணீரில் கழுவிய பின்புதான் சாப்பிட வேண்டும்.


    வவ்வால் உள்ளிட்ட பறவைகள் கொத்திய பழங்களைச் சாப்பிடக் கூடாது, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவ மனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களுக்கு தாங்களே சுய மருத்துவம் கூடாது என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிபா வைரஸ் 5 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

    நோய் தீவிரம் அடையும் போது நோயாளி சுய நினைவை இழப்பார். அதைத் தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சலைப் போன்றே நிபா வைரஸ் பாதிப்புக்கும் தனியாக சிறப்பு சிகிச்சை முறைகள் கிடையாது. இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பூசியும் தடுப்பு மருந்துகளும் கிடையாது. என்றாலும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், உமிழ் நீர், வியர்வை உள்ளிட்டவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதன் மூலம் பாதிப்பை கண்டறிய முடியும். மாதிரிகளை புனே, மணிப்பால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நிபா வைரஸ் பெயர் வந்தது எப்படி?

    நிபா வைரஸ் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் தான் முதன் முதலில் பரவி அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக இறந்தனர். அவர்களின் ரத்தத்தை சோதனை செய்து பார்த்த போதுதான் இந்த வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதற்கு நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது. இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது. வவ்வால்கள், பன்றிகள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டது.

    வவ்வால்களின் சிறு நீரகம், உமிழ் நீர், முகம் ஆகிய இடங்களில் இருந்து நிபா வைரஸ் உற்பத்தியாகிறது. இந்த வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் போது மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது.

    வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் விலங்குகளின் சிறுநீர், உமிழ் நீர் படுவதன் மூலமும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கும் இந்த விலங்குகளுடன் பழகுவதன் மூலம் மனிதர்களுக்கும் நோய் தொற்று எற்பட வாயப்பு உள்ளது.

    1998-99-ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு வங்காள தேசத்திலும் பரவியது. இந்தியாவில் கேரளா உள்பட மலைப் பிரதேசங்கள் கொண்ட மாநிலங்களிலும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. #nipahvirus

    ×