search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்"

    • டி.எஸ்.பி., உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • திருச்சி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் பஸ் நிலையம். இதில் பயணிகளின் இருக்கை பகுதியில் ஒரு பெண் கை, கால் செயல் இழந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கேயே படுத்து கிடந்தார்.

    இந்த பெண்ணால் எழுந்து அருகில் உள்ள பாத்ரூம் செல்ல முடியாததால் அங்கேயே அணைத்து செயல்களையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இதனால் பயணிகள் இருக்கை பகுதி மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறவே பயணிகள் சாலையில் நின்று பஸ் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மனித நேயம் அன்பழகன், சமூக வலைதளத்தில், இப்பெண் குறித்து பதிவிட்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.

    இதனை அறிந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன், உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க திருவெறும்பூர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து காவலர்கள் ஜான்சன், பிரபு ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலர் சிவக்குமார் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சுத்தப்படுத்தி புதிய ஆடை அணிவித்தனர்.

    பின்னர் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    இந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் மனைவி ராஜேஸ்வரி (வயது 50) என்பதும், அவருக்கு ஒரு கை, கால் செயல் இழந்தவுடன், பராமரிக்க முடியாமல் கல் நெஞ்சம் கொண்ட அவரது மகன் இங்கே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    உடனடி நடவடிக்கை எடுத்த டிஎஸ்பிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
    • 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாலகுடாவில் உள்ள கல்லூரி அருகே வணிகவளாகத்தில் 4 வாலிபர்கள் நேற்று பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

    அதனை ஒரு வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    4 மணி நேரம் பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி வாலிபர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
    • சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருசநாடு:

    சென்னை திருநின்றவூர் புதிய சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் கடந்த 31-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு யாத்திரை குழுவினருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி சபரிமலைக்கு சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மலையை விட்டு இறங்கிய போது பம்பை ஆற்றங்கரையில் திடீரென சங்கர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    அப்போது சங்கர் மாலையை கழற்றி விட்டு இருமுடி இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து குருசாமி அவரிடம் கேட்ட போது அவர் போதையில் இருந்தது போல உளறியுள்ளார். அதன் பிறகு தேனி மாவட்டம் மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோவிலுக்கு அவர்கள் வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பார்த்த போது மீண்டும் சங்கர் மாயமானார்.

    சில மணி நேரம் கழித்து வந்த சங்கர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்து வண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டுச் சென்றனர்.

    போதை தெளிந்து எழுந்த சங்கர் செல்போனில் உடன் வந்த தனது நண்பர்களுக்கு போன் செய்தார். அப்போது தாங்கள் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறிவிட்டனர். இதனால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த சங்கர் தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்த சர்ச் முன்பு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது.

    இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது சகோதரி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய போது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரும் புத்தாண்டில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற சனோஜ் என்பவர், நடிகர் மம்முட்டி இறக்க வேண்டும் என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சனோஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் 2 நாட்களாக தூங்கவில்லை என்றும், தனது செயலுக்காக மம்முட்டி, அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார்.
    • அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சித்தாபுதூர் அருகே உள்ள புதியவர் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கோமளம் (வயது 66). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் கோமளம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டிற்குள் அதுமீறி நுழைந்தனர். இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் கோமளத்தின் கைகளையும், வாயையும் துணியால் கட்டினர். பின்னர் அவர் அணிந்து இருந்த செயின், கம்மல், வளையல் ஆகியவற்றை பறித்தனர். இதனை தொடர்ந்து வாலிபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    கோமளத்துக்கு அவரது சகோதரர் மனைவி அனிதா என்பவர் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல இரவு சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு கோமளத்துக்கு கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை யாரும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனிதா ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டிற்கு 2 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார். பின்னர் அனிதா வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் கதவை திறக்கும்படி கத்தினர். கதவை திறக்கவில்லை என்றால் கோமளத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த அனிதா கதவை திறந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை முகத்தில் தூவி விட்டு தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் 2 பேரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் (21), லிக்னேஷ்வரன் (25) என்பது தெரிய வந்தது.

    போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் தங்கி இருப்பதும், மூதாட்டி தனியாக வசிப்பதை கண்காணித்து கொள்ளையடிக்க வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
    • தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.

    இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி கணேஷ் காலனியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கலைச்செல்வன் (22). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கலைச்செல்வன் சுடுகாட்டுக்கு சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்தனர். அதற்கு கலைச்செல்வன் சிறிது நேரத்தில் வருவதாக கூறி உள்ளார். குடும்பத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் அருகில் உள்ள தோட்டத் துக்கு சென்ற கலைச் செல்வன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இளம்பெண்

    காரியாபட்டி அருகே உள்ள கழுவனச்சேரியை சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவரது மகள் முத்துஈஸ்வரி (வயது 17). இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.

    ஆனால் முத்துஈஸ்வரி அதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த முத்துஈஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
    • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர். அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மீரா அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில் மீரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை அவர் சரமாரியாக சுட்டிருக்கிறார்.

    இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

    பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது.

    அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

    • சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 12-ந் தேதி சிறுமியும், அவரது தாயும் ஆடுகளை மேய்க்க சென்றனர். அப்போது சிறுமி தனது தாயிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். சிறுமி வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை, வா பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி இல்லை.

    அவரை தேடி சென்ற போது சிறுமி வாலிபரின் வீட்டிற்குள் இருந்து அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

    இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×