மூதாட்டியை கொலை செய்து போலீசாருக்கு புகார் தெரிவித்து நாடகமாடிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மூதாட்டியை கொலை செய்து போலீசாருக்கு புகார் தெரிவித்து நாடகமாடிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.

கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.

இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com