என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா"
- பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
- மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.
திருவனந்தபுரம்:
பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:
இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.
கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.
மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.
- வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன.
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கரிப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கேரள மாநிலத்தில் பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையத்தில் ஒன்றாக கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சு வாகனம் உள்ளிட்டவைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. விமான நிலையம் அருகில் என்பதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக மஞ்சேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அதிநவீன தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன.
தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 4 பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு உள்ளிட்ட 5 வாகனங்களும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது தெரியவில்லை.
தீப்பிடித்த 4 பஸ்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் இருந்து முனையத்திற்கும், முனையத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானத்திற்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். அந்த வாகனத்தை இயக்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
பஸ்களுக்கு யாரேனும் மர்மநபர்கள் தீ வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க, விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
உன்னிகிருஷ்ணன் போற்றி மீது துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை சன்னதி படிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அத்துடன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான கோவர்தன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜைகளை செய்ததாகவும், அங்கு சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நடிகர் ஜெயராம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவரிடம் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதன் மூலம் வருகிற நாட்களில் நடிகர் ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தெரிகிறது.
- விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக மணியன்பிள்ளை ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.
- நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
சபரிமலையில் தங்கம் கொள்ளை போன விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிறையில் உள்ள தந்திரி கண்டரரு ராஜீவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.
இந்த பணத்தை தந்திரி திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தந்திரி முதலீடு செய்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடப்பட்ட நிதி நிறுவனத்திலும், அதை நடத்தி வந்த என்.எம்.ராஜு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ராஜு ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன்மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள். பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.
- கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
- 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,620 கடன்களை அரசே செலுத்தும்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட உள்ளன. அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தது.
எனினும், மத்திய அரசு இந்த விதியைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை நீதிமன்றம் 'மனிதாபிமானமற்றது' என்று குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார்.
மேலும் இப்போது, கேரள அரசு, ரூ.18,75,69,037.90 மதிப்புள்ள கடன்களின் பொறுப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 555 கடன் வாங்கியவர்களின் முழு கடனையும் அரசே செலுத்தும். இந்தக் கடனுக்கான நிதி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்படும்." என தெரிவித்தார்.
முன்னதாக, மாநில அரசின் கீழ் இயங்கும் கேரள வங்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
- நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதானத்திற்கு இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருக்கிறது.
அந்த சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்கவசம் மற்றும் சன்னிதான நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிட அனுப்பி வைக்கப்பட்டது.
பின்பு அவை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 4.54 கிலோ கிராம் தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் தங்கம் மாயமான விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவை செப்பனிட கொண்டு செல்லப்பட்ட இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிந்து கேரள தேவசம்போர்ட்டின் முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தினமும் பல புதிய தகவல்கள் கிடைத்து வந்தது மட்டுமின்றி, பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் கடந்த 19-ந்தேதி அதிரடி சோதனை நடத்தியது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 100 கிராம் தங்க கட்டி மற்றும் வழக்கு தொடரபான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்க தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்றனர்.
அவரிடம் தங்கம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணனுடனான தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. புனரமைக்க கொண்டு செல்லப்பட்டிருந்த துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் தங்கத்தகடு உள்ளிட்டவைகள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின.
ஆகவே அவரும் தங்க கொள்ளை வழக்கு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும் அவரை இந்த வழக்கில் சாட்சியாக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமுலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். அப்போது தனக்கு உன்னிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சபரிமலைக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தகடை வீட்டில் பூஜைக்காக வைத்தால் செழிப்பு ஏற்படும் என்பதால் தனது வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும், மேலும் காவலில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டதாகவும் நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமீன் கோரி ஷிம்ஜிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
- விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன்படி, கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் உரையாற்றினார். அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
சுதாரித்துக்கொண்ட அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், மயங்கிய அமைச்சரை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டனர்.
அமைச்சருக்கு சுயநினைவு வராததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
- பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.
கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.
இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.
இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.
- குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது.
- கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள புத்திரிக்கண்டம் மைதான திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். லட்சக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்பு பலனளித்துள்ளது. எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, திருவனந்தபுரம் மக்களுக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் மரியாதையுடன் தலைவணங்க விரும்புகிறேன்.
இன்று இங்கு ஒரு புதிய ஆற்றலையும், ஒரு புதிய நம்பிக்கையையும் நான் காண்கிறேன். உங்கள் ஆற்றல் கேரளாவில் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது.
1987-ம் ஆண்டுக்கு முன்பு, குஜராத்தில் பா.ஜ.க. ஒரு சிறிய கட்சியாக இருந்தது. 1987-ம் ஆண்டில் முதல் முறையாக பா.ஜ.க. அகமதாபாத் மாநகராட்சியில் வெற்றி பெற்றது.
குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி ஒரு நகரத்தில் இருந்துதான் தொடங்கியது. அதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. பெற்ற வெற்றியால் குஜராத்தில் ஆட்சியை பிடித்ததைபோல கேரளாவிலும் நடக்கும். திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது.
கேரளாவில் பா.ஜ.க. அரசாங்கத்திற்கான அடித்தளத்தை திருவனந்தபுரம் அமைத்துள்ளது. இந்த வெற்றி 'வளர்ச்சியடைந்த கேரளா'வை உருவாக்கு வதற்கானது. இது இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஊழல் ஆட்சியில் இருந்து கேரளாவை விடுவிப்பதற்கான உறுதிமொழியின் வெற்றியாகும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க திருட்டு வழக்கில் குற்றவாளிகள் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் தப்ப முடியாது. கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், சபரிமலை தங்க இழப்பு குறித்து விசாரிக்கப்படும். குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது எனது உத்தரவாதம்.
இவ்வாறு மோடி பேசினார்.






