என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிசிசிஐ அனுமதியுடன் கோலி லண்டனில் உடற்தகுதியை நிரூபித்தார் .
- கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
இதனிடையே லண்டனில் இருந்தபடியே விராட் கோலி.உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை பிரூபித்துள்ளார்.
பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு என பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.
- செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
- தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அகராதியில் பொய் என்ற சொல்லுக்கு பெருமிதம் என்று புதிதாக பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் போலும். அதனால் முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி விட்டு, அதை பெருமிதம் என்று நினைத்துக் கொள்கிறார்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதாகக் கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பு நீடித்தது; ஆனால், அதில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர்கள் விளக்கியது அரை நிமிடம் தான். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான். இதைத் தான் விரிவான தரவுகளுடன் அமைச்சர் விளக்கியதாக முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இதைத் தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேர்மையான அரசாக இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் குறையே நாட்டிலும், அவரது அரசிலும் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாது என்பது தான். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தையும் உண்மை என்று நம்பி அவர் பேசிக் கொண்டுருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் உண்மை என்று நம்ப மாட்டார்கள். பொய்யுரைப்போருக்கு வழங்க வேண்டிய தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள் என கூறியுள்ளார்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.
மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
- தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
- மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை;
மழைநீரும் வடிந்த பாடில்லை;
அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;
இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
- கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின்படி வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடும் நிலநடுக்கத்தால் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடுபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா 21 டன் நிவாரண உதவிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், நீர் சேமிப்பு டேங்குகள், ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், சிறிய நீர் சுத்திகரிப்பான்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் உள்ளிட்டவைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா தொடர்ந்து அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறது. வரும் நாட்களில் கூடுதலாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார்.
- பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய உள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூயன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
- 10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை.
- 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை.
நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு இனி பாஸ்போர்ட், விசா தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இந்தியா வருபவர்களுக்கு நேபாளம், பூடான் குடியுரிமை சான்றிதழ், அல்லது அந்நாட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முக்கியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை என்றும், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள்.
- அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
புதுடெல்லி:
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப்பில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள். அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி அவர்களே மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது
- மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் அதன் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராமதாசுக்கு எதிராக அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக விவாதிக்க பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது சுமத்தப்பட்டது.
இதற்கு கடந்த 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது. அதில்அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சீலிட்ட கவரில் டாக்டர் ராமதாசிடம் வழங்கினார்கள்.
இந்த குழுவின் பரிந்துரைகளை கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை அறிவிக்க ராமதாஸ் திட்டமிட்டார்.
அன்புமணி மீதான நடவடிக்கை குறித்தான விவரங்களை நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே நாளை நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் அதிரடி முடிவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினரும், ராமதாசின் மூத்த மகளுமான ஸ்ரீகாந்தியும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொது செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள்ஸ்ரீகாந்தி உள்பட 22 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின் பரிந்துரை மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி விவகாகரம், கட்சி வளர்ச்சிக்காக தெரிவித்த பல்வேறு ஆலோசனைகள் சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் அன்புமணியை சஸ்பெண்டு செய்வதா? அல்லது மேலும் அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நாளை டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கிறார். அப்போது அவர் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.
- இதில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இந்தப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.






