என் மலர்
இந்தியா

4 மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணம் அறிவிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
- ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள்.
- அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
புதுடெல்லி:
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப்பில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள். அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி அவர்களே மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.






