என் மலர்tooltip icon

    இந்தியா

    • மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சவாலை ஏற்றார்.
    • ஜெய்தீப் கர்னிக் திடீரென அதிரடி காட்டினார்.

    யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்றார்.

    ஜெய்தீப் கர்னிக் என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் தன்னுடன் மல்யுத்தத்திற்கு வரும்படி ராமதேவ் சவால் விடுத்தார். ஜெய்தீப் மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சவாலை ஏற்றார்.

    போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினாலும் ஜெய்தீப் கர்னிக் திடீரென அதிரடி காட்டினார்.

    பாபா ராம்தேவ் ராம்தேவை ஜெய்தீப் கர்னிக் தரையில் தள்ளி போட்டியில் வென்றார். இருவரும் தரையில் விழுந்தாலும், சிரித்தபடியே எழுந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதன் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.
    • அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்த 68 வயது முதியவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ.23.5 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் காவல் துறை அதிகாரிகள் என்றும், அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

    அவரை வீட்டிலேயே 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இந்த மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், அவர்கள் கேட்டபடி பல தவணைகளாக மொத்தம் 23.5 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இது குறித்து தற்போது கல்யாண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

    • சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
    • அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.

    அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
    • இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

    MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

    அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.

    மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.

    இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.

    இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.  

    • நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.

    இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • ​விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.
    • விமான விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.

    2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும். இந்த விபத்தில் 241 உயிர்கள் பரிபோனது.

    2025ம் ஆண்டு ஜூன் 12 அன்று மதியம் 1:39 மணியளவில், ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்துக்குள்ளானது.


    குஜராத்தின் அகமதாபாத் (சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்) முதல் லண்டன் (கேட்விக் விமான நிலையம்) வரை விமானம் புறப்பட்டது.

    விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. சரியாக 32 விநாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. விமானம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

    விமானத்தில் இருந்தவர்கள் மொத்தம் 242 பேர் (230 பயணிகள் + 12 ஊழியர்கள்). இதில் 241 பேர் உயிரிழந்தனர். அதிசயத்தக்க வகையில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.


    தரையில் இருந்தவர்கள்: விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அதன்படி, இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.

    விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால், விமானிகளால் விமானத்தை மீண்டும் ஓடுதளத்திற்குத் திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க போதிய நேரம் கிடைக்கவில்லை.

    இந்த விபத்து நவீன ரகமான 'டிரீம்லைனர்' விமானங்களின் பாதுகாப்பு குறித்து உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

    அகமதாபாத் நகரமே இந்த விபத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கின.

    • சிறுவர்கள் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
    • குழந்தைகளை வளர்ப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது பெற்றோரிடமே உள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள புடான் நகரில், 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து 4 மாணவர்கள் சேர்ந்து ஆபாசமாக பேசி கிண்டலடித்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட மாணவி அவளது தந்தையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர்களின் இந்த செயல் தொடர சிறுமியின் குடும்பத்தினர் உசேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து சிறுவர்கள் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து இந்த சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்துள்ளனர் போலீசார். இதுதொடர்பாக காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் பால் சிங் கூறுகையில், "நான்கு சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். சிறுவர்கள் 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

    இந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் மீண்டும் துன்புறுத்தினர். சிறுவர்கள் ஒழுக்கமில்லாமல் இருப்பதும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் என்றும் அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது. குழந்தைகளை வளர்ப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது பெற்றோரிடமே உள்ளது. இந்தத் தெளிவான செய்தியை பெற்றோருக்குத் தெரிவிக்க தாய்மார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார். 

    தொடர்ந்து, கைது செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கு தொடர்பான அறிவிப்புகள் சிறுவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதுபோன்ற வழக்குகளில், சிறார்களுக்கு எதிராக குற்றங்கள் பதிவு செய்யப்படும்போது, அவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சிங் மேலும் தெளிவுபடுத்தினார். நான்கு சிறுவர்களின் தந்தையர்களும் உத்தரபிரதேசத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள். அவர்கள் வீடு திரும்பியதும் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

    நான்கு பெண்களும் கைது செய்யப்பட்ட பிறகு, அதே நாளில் அவர்கள் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

    • இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்
    • தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்

    டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். 

    இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,. 

    இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.


    • நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது.

    கடந்த 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிக நிதி வசூலிக்கும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இந்தநிலையில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த பிறகு தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது.

    அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி வரை ரூ.6654 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.

    பா.ஜ.காவால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    ரூ.6654 கோடி நன்கொடை பெற்ற இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

    கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது. தற்போது அந்த கட்சியின் நன்கொடை 68 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

    பா.ஜ.க-வுக்கு கிடைத்த நன்கொடைகளில் ரூ.3744 கோடி தேர்தல் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது. எஞ்சிய தொகை பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கிடைத்து உள்ளது.

    தேர்தல் அறக்கட்டளை நன்கொடையில் புரூடென்ட் அறக்கட்டளை ரூ.2180 கோடி அளித்துள்ளது.

    தேர்தல் அறக்கட்டளையை தவிர்த்து நன்கொடை அதிகம் அளித்தவர்களில் முதல் 30 இடங்களில் பெருநிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சீரம் தனியார் நிறுவனம் (ரூ.100 கோடி), ரங்டாசன்ஸ் தனியார் நிறுவனம் (ரூ.95 கோடி), வேதாந்தா நிறுவனம் (ரூ.67 கோடி) உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    பஜாஜ் குழுமத்தின் 3 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து ரூ.66 கோடியை அளித்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் ரூ.35 கோடியும், திலீப் பில்கான் குழுமம் ரூ.29 கோடியும், ஹீரோ குழுமம் ரூ.23.65 கோடியும் பங்களித்துள்ளன.

    தனி நபர்கள் அனைவரும் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். நிறுவனங்கள் காசோலை, வரை வோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் வாயிலாக பணத்தை கொடுத்துள்ளன.பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் நன்கொடையை அளித்துள்ளனர்.

    நன்கொடைபெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு காணப்பட்டது. அந்த கட்சிக்கு ரூ.522.13 கோடியே கிடைத்தது. கடந்த 2023-24-ம் ஆண்டில் அந்த கட்சிக்கு ரூ.1129 கோடி கிடைத்தது. இது 43 சதவீத சரிவாகும்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.184.08 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்தது. இது பெரும் சரிவாகும். கடந்த ஆண்டு ரூ.618.8 கோடி கிடைத்து இருந்தது. பாரத் ராஷ்டிரீய சமிதி (பி.ஆர்.எஸ்.) நன்கொடை ரூ.580 கோடியில் இருந்து ரூ.15.09 கோடியாக குறைந்தது. இது பெரும் வீழ்ச்சியாகும்.

    அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் நன்கொடை அதிகரித்து உள்ளது. அந்த கட்சி ரூ.39.2 கோடி நன்கொடையாக பெற்றது. கடந்த முறை ரூ.22.1 கோடிதான் கிடைத்தது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.85.2 கோடியும் (முன்பு ரூ.274 கோடி), பிஜூ ஜனதா தளத்திற்கு ரூ.60 கோடியும் (ரூ.246 கோடி) கிடைத்தன.

    காங்கிரஸ் பெற்ற நன்கொடையை விட பா.ஜனதா 12.5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.

    காங்கிரஸ் மட்டுமல்ல அதன் ஒட்டு மொத்த கூட்டணியிலும் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே மொத்தம் வெறும் ரூ.1343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால் கூட பா.ஜ.க 4½ மடங்கு அதிக நிதியை வசூலித்து இருக்கிறது.

    • பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
    • பள்ளிகளில் பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது.

    கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜனநாயக உணர்வு மிக்க கேரளாவில் பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.

    • ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
    • பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 

    "சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போதிலிருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? அதுபோல இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள்; இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு. 

    நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் நாடு ஒரு இந்து நாடு. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல. 

    நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படி ஏதாவது (முஸ்லிம்களுக்கு எதிராக) நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். (ஆர்எஸ்எஸ் பற்றி) புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்தார். 

    • இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
    • நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்

    சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.

    நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது

    அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.

    ×