என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்.
- வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும்.
சென்னை:
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது, வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.
அவற்றின் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:-
* வீட்டை வாடகைக்குவிட்டால், அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.
* ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.
* வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.
* ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம்.
* வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.
* வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.
* வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.
* வீட்டு வாடகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பதிவு செய்வது எப்படி?
வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப்படும்.
- கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை:
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்ட என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
முன்னதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது.
- செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
- காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
- தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது.
மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்,
"பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த கூற்று ஏற்றுகொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி பூசல் என்பது வெறும் கண்துடைப்பு. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள், அதை நிறைவேற்றினார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும். திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எல்லா இடங்களிலும் போதைப்பொருள். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுப் போடுவார்களா?
யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. பீகார் போல இங்கும் மாற்றம் நிகழும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் எங்களுக்குதான் வரும். தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது. எண்பது வரலாறுகளில் கூட்டணி இல்லாமல் எம்ஜிஆர் எவ்வாறு வெற்றிப்பெற்றார்? அண்ணாமலை எங்கள் கட்சியில் இருந்தவர்.
கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கமாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எடப்பாடி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலவரத்தை தூண்டக்கூடிய கதாநாயகனாக சு.வெங்கடேசன் இருப்பார் என சந்தேகமாக இருக்கிறது. அப்படி கலவரம் நிகழ்ந்தால் சு. வெங்கடேசன்தான் பொறுப்பு. தீபம் ஏற்றுவதில் சு. வெங்கடேசனுக்கோ, அவரது குடும்பத்திற்கோ, அவர்சார்ந்த கட்சிக்கோ எதாவது பிரச்சனை இருக்கிறதா?" என தெரிவித்தார்.
- தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர்.
- நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம்.
திருப்பூர்:
காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம், திருப்பூர் உள்பட ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், பல்வேறு குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்கள், இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் டாஸ்மாக் மதுக்கூட உரிமம் பெற்று தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிபாட்டில்களை சேகரித்து கொள்ளும் உரிமம் பெற்று வருகிறோம். தற்போது எங்கள் கடையில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எங்களுக்கு உரிமம் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், எங்களது வியாபார நஷ்டத்தை சரி செய்து, சுமூகமான வியாபாரம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் காலிபாட்டில்களால் ஏற்படும் நஷ்டத்தை மட்டும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
- கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
- தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
- முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற் றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து சுகிதா சாரங்கராஜிக்கும் வழங்கப்பட்டது.
அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
டி.இ.ஆர்.சுகுமார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார். தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்து வரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்று உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டி.இ.ஆர்.சுகுமார், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு அச்சகப் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
- மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






