கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதலாக 40 பஸ் சேவை தொடங்கியது

பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதலாக 40 பஸ் சேவை தொடங்கியது
Published on

சென்னை:

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.

தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.

மேலும் மின்சார ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. எக்ஸ்பிரஸ் பாதையில் இந்த ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மின்சார ரெயில்களுடன் 5 பெட்டிகள் கூடுதலாக சேர்க்கும் போது பயணிகள் ஏறி இறங்குவதற்கு நடைமேடையில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் நிலையம் வரை இந்த சோதனை ஓட்டம் நடந்தது.

17 பெட்டிகளுடன் மின்சார ரெயில் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கி பிளாட்பாரம் வசதி உள்ள நிலையங்களில் நிறுத்தி சோதனை செய்தனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மின்சார ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com