என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரட்டை இலையில் வாக்களித்தால் தேர்தல் முடிந்த பிறகு பட்டு பட்டுன்னு உங்கள் வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வரும் - கடம்பூர் ராஜூ
- சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான்.
- தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது.
கோவில்பட்டி:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள். திசை மாறி போனார்கள். இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலையை இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் பார்க்கப் போகிறோம்.
சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை கட்சியில் உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து வாக்களித்தால் ,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில ரூ.10 ஆயிரம் வந்து விழும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று பெரிய அறிவாளியாக இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க 2 பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த 2 பூஜ்ஜியத்திற்கு முன்னாடி 2 சேர்த்து 200 வாங்குவோம்.
தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை.
இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






