என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார்.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டத்தில் கார் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறார்கள்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முபின் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளரான உமர்பாரூக்கின் நெருங்கிய கூட்டாளியான கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். 14-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹாநசீருக்கு எதிராக பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜெயிலில் அடைத்ததற்கு பழிவாங்கும் நோக்கில் கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக கார் குண்டு முன்கூட்டியே வெடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார். அவருடன் தாஹாநசீரும் இணைந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட முபின் வீட்டுக்கு தாஹாநசீர் சென்று சதிச்செயலுக்கு திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, ஒருமைப்பாட்டுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பலமுறை கோவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 3 முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
- வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.
கோவை:
மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.
வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
- எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
மேலும் வனப்பகுதியில் உள்ள நீருற்றுகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் வனத்தில் உள்ள மரங்கள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது.
இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மற்றும் வேவரலி எஸ்டேட் பகுதிகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து உள்ளதாகவும், வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
- காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.
கவுண்டம்பாளையம்:
கோவையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. சில நாட்களாக கோவையில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகள், வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரையும், அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வருகிறது.
வனவிலங்குகளின் தாகத்தை போக்குவதற்காக வனத்துறை சார்பில் வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் தாகத்திற்காக தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளனர்.
அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை ஊர் பொதுமக்கள் நிரப்பி வைத்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அந்த தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு சென்று வருகின்றன.
நேற்று மாலை குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.
அந்த யானைகள் ஊர் எல்லையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஆனந்தத்துடன் அதனை நோக்கி ஓடி வந்தன. பின்னர் யானைகள் தண்ணீரை குடித்ததுடன், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்து கொண்டது.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
கோவை:
கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.
மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை
- ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது - அண்ணாமலை
இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவையில் 'எங்கள் ஓட்டை காணவில்லை' என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேர்தலில் ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
- அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை :
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.
ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட் டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
- 25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி.
கோவை:
தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதமராக பணியாற்றி வருகிறார்.
50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்துள்ளது. அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் வேற்றுமையை விதைப்பது காங்கிரஸ் தான்.
பிரதமர் மோடிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.
பெண்ணுரிமை என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை.
ஆனால், இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல விசாவில் தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான். அதேபோன்று முஸ்லிம் பெண்கள் பாராட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு தான் கொண்டு வந்தது.
எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஏதோ இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் போலவும், பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக இருப்பது போல சித்தரித்து இந்த தேர்தலை முன்னெடுத்து செல்ல முயல்கிறார்கள்.
ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்து பறிபோய் விடக்கூடாது என்று தான் பிரதமர் சொன்னார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 1 கோடி ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்த அரசு ரேஷன் கார்டு வரை கொடுத்துள்ளது. நம் நாட்டு மக்களின் சொத்துக்கள் பறி போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் சொன்னாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.
ஆனால் காங்கிரஸ் இதனை தேர்தலுக்காக திசை திருப்ப முயற்சிக்கிறது.
25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு 45 லட்சம் உயிர்களை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு.
இப்படி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால் காங்கிரஸ் வேண்டும் என்றே பாரதிய ஜனதா மீது குறை கூறுகிறார்கள். நாட்டின் முக்கியமான தேர்தல் நடக்கும்போது ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.
வட மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.
ஒருவேளை இந்தி எதிர்ப்பு பிரச்சனை ஏற்படுமோ என்ற காரணத்தினால் இருக்கலாமோ? அல்லது அங்கு சென்றால் எந்த பிரயோஜனம் இருக்காது என்பதாலும் இருக்க வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரச்சனைகளையும் மீறி பா.ஜ.க வெற்றி பெறும்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
சென்னையில் நான் போட்டியிட்ட தொகுதியில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்காளர்களின் வாக்குகள் சில மாதங்களில் காணாமல் போய் விட்டது.
மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுப்பவர்களை பார்த்து தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று கூறினால், நீங்கள் தான் தோல்வி பயத்தில் அமைதியாக உள்ளீர்கள் என்று சொல்வோம். ஏனென்றால் எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நிச்சயமாக நான் உள்பட பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
மாநில உரிமையை பறித்து விட்டார்கள், அதனை மீட்க நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் இங்கு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? அவர்களது கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.
இவர்கள் அமைதி காப்பதன் மூலம் இந்த சம்பவங்கள் வேண்டும் என்றே நடந்து போல தோன்றுகிறது. இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.
தமிழ்நாட்டில் அரிசியிலும் அடிதடி நடக்கிறது. அரசியலிலும் அடிதடி நடக்கிறது. ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி விற்கிறார்கள்.
தமிழகத்தில் கஞ்சா, போதை கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதனையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமரை மட்டுமே குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தக்கூடாது.
தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் என்றும் உள்ளது. பத்மவிபூஷன் விருது படிப்படியாக ஒவ்வொருவருக்காக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Coimbatore, Tamil Nadu: On PM Modi's statement, BJP candidate from South Chennai, Tamilisai Soundararajan says, "...First of all, our Prime Minister's schemes are of inclusive growth. Sabka Saath Sabka Vikas; nobody has been excluded...For the past 50 years, almost half… pic.twitter.com/oTqbdQlI9T
- எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
- ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).
இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.
பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
- ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.
மாபெரும் கருத்தரங்கம்
ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
பங்கேற்பாளர்கள்
Dr.பிரசாத் அவர்கள். முதன்மை விஞ்ஞானி.
ஒருங்கிணைப்பாளர். AICRPS. IISR. கோழிக்கோடு.
Dr. கண்டி அண்ணன் முதன்மை விஞ்ஞானி
IISR. கோழிக்கோடு.
Dr. முகமது பைசல். முதன்மை விஞ்ஞானி
ICAR-IISR. மடிக்கேரி. கர்நாடகா.
திரு. சிமந்தா சாய்கியா. துணை இயக்குனர்
இந்திய நறுமணப் பயிர்கள் வாரியம்.போடிநாயக்கனூர்.
திரு. கனக திலீபன் அவர்கள். உதவி இயக்குனர்.
இந்திய நறுமண பயிர்கள் வாரியம். ஈரோடு.
இடம்: புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர்.
நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு
முன்பதிவு அவசியம்
94425 90079, 94425 90081
பயிற்சி கட்டணம் ₹200
- பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
- 10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வெளியில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
வியாபாரிகள் அதிகளவில் பணம் எடுத்துச்செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அவ்வாறு முறையான ஆவணங்களை காட்டாதவர்களின் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.
பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாகவும், அதனை கண்காணிக்கவும், கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. இதில் போலீசார், வருவாய்த்துறை, 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால், பறக்கும் படை எண்ணிக்கையை 90-ல் இருந்து 10 ஆக குறைத்துள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை பறக்கும் படையில் இடம் பிடித்து இருந்த அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பி பணியை தொடங்கினர்.
10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4-ந் தேதி வரை இந்த பறக்கும் படையினர் பணியில் இருப்பார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்