search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"

    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
    • வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.

    சென்னை:

    நாளை மறுநாள் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். அந்த 12 ஆவணங்கள் விவரம் வருமாறு:-

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,

    * புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,

    * தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,

    * வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,

    * தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

    * புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

    * மத்திய, மாநில அரசுகள்/பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

    * பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,

    * இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது.
    • தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு போடுவதற்கு பதில் "விருப்பம் இல்லை" என்று வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறைக்கு "நோட்டா" என்ற பெயர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மின்னணு எந்திரங்களில் நோட்டாவுக்கு வாக்காளிப்பதற்கு என்று வசதிகள் செய்யப்பட்டன.

    நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது. சிலர் தேர்தல்களில் நோட்டாவுக்கு என்று தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் நோட்டா எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பிறகு கடைசியில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கும்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டா அறிமுகம் ஆன போது நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அதாவது வாக்களித்தவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 8 லட்சத்து 17 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 570 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கணிசமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்திலும் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    சில தொகுதிகளில் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கூடமாறலாம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இளைய தலைமுறை மற்றும் முதல் முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களை பிரசாரத்தின் மூலம் கவர்ந்தால் மட்டுமே அவர்களை நோட்டாவில் இருந்து தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களுக்காக சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    • வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 ஓட்டுகளில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.

    மொத்த வாக்காளர்களில் 21.61 சதவீதத்தினர் இளைஞர்கள். இதில் 20 முதல் 29 வயதுக்குள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 388 பேரும், 19 வயதிற்குள் முதல் முறையாக 28 ஆயிரத்து 28 ஆயிரத்து 921 பேரும் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

    இதனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் யாரை வெற்றி பெற வைப்பது என்பதை முடிவு செய்யும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்களின் ஓட்டுகள் யாருக்கு? என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகள் விஷயத்தில் இளைஞர்களிடம் புரிதல் இருந்தாலும், எந்த கட்சி மீதும் அபிமானம் இல்லை. இதனால் யாருக்கு வாக்களிப்பது என அவர்களுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது. இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள புரட்சி ஆயுதமாக ஓட்டு மாறியுள்ளது.

    இதில் இளைஞர்கள் பலரும் ஓட்டு போடாமல் இருக்கவும் நோட்டாவுக்கு வாக்களிக்கவும் திட்டமிடுகின்றனர். இதை தவிர்த்து வேட்பாளருக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சியில் புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

    பாண்லே பால் பாக்கெட்டுகள், செல்பி கார்னர், மல்லர் கம்பம் விளையாட்டு, தப்பாட்டம், பெற்றோர்களுக்கு கடிதம், சிலிண்டர் விநியோகத்துடன் நோட்டீஸ் என 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.

    அதேநேரத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது, ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எப்.எம். ரேடியோக்களில் மாவட்ட தேர்தல் துறை தீவிர விளம்பரமும் செய்து வருகிறது.

    முதலில் ஓட்டு போடு, அப்புறம் ஓ போடு எனவும், அங்கே என்னடா? உங்க அப்பாவும், எங்க அப்பாவும் வரிசையில் நிற்கிறார்கள் என ஒரு மாணவர் கேட்க, மற்றொருவர் தேர்தல் பற்றி தெரியாமல் இருக்கலாமா, வாடா நாமும் ஓட்டுபோட வரிசையில் நிற்போம் எனவும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

    இந்த முறை அதிகபட்ச வாக்கு சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் துறை தீவிர பணியாற்றி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இளைஞர்கள் ஓட்டை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அவர்களை குறி வைத்து போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் அரசியல் கட்சியினருக்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டு அளிப்பார்கள் என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி ஆவர். 85 வயதிற்கு மேல் 6,13,991 வாக்காளர்கள் உள்ளனர். 4,61,730 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர்.

    * இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் பணியில் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.

    * 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

    * ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    * இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.33.31 கோடி. வருமானவரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

    * 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    * தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் விசுவாசம் என்ற 87 வயது முதியவர் வீட்டிற்கு நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12-டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.

    மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்

    மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது.

    மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநிலத்தில் மொத்தம் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதைய மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.
    • கேரள மாநிலத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் 57.75 சதவீதம் பேர் உள்ளனர்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா. சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் இங்கு இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மேலும் எங்கு பார்த்தாலும் மரங்கள், செடிகள், மலைகள் என அனைத்து வளங்களும் நிறைந்து பசுமையான மாநிலமாகவும் கேரளா திகழ்கிறது.

    இத்தகைய சிறப்புமிக்க கேரளாவில் மற்ற மாநிலங்களை போன்றே மக்களவை தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 40 நாட்கள் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் தேர்தலை எதிர்நோக்கி மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, பாலக்காடு, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலத்தூர், திருச்சூர், கோட்டயம் ஆகிய 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

    இந்த தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி கேரள மாநிலத்தில் மொத்தம் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதைய மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

    தேர்தலில் ஓட்டுபோட இருக்கும் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதாவது மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 1.14 கோடி வாக்காளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 50 முதல் 59 வயது வரை 50,96,910 வாக்காளர்கள்(18.80%), 60 முதல் 69 வயது வரை 36,98,157 வாக்காளர்கள் (13.64%), 70 முதல் 79 வயது வரை 19,91,143 வாக்காளர்கள் (7.34%), 50 வயதுக்கு மேல் 5,69,227 வாக்காளர்கள் (2.43%) என 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,13,55,437 பேர் உள்ளனர்.

    இது மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 42.21 சதவீதம் ஆகும். இதேபோல் 40 முதல் 49 வயது வரை 58,20,433 பேர் (21.48%), 30 முதல் 39 வயது வரை 53,70,134பேர் (19.81%), 20 முதல் 29 வயது வரை 41,74,789 (15.40%) வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    மேலும் 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 2,88,533பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கேரள மாநில மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 1.06 சதவீதமே ஆகும். இவர்கள் வருகிற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் 57.75 சதவீதம் பேர் உள்ளனர். அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 42 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதேபோல் மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 51.64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்களில் 52.11 சதவீதம் பேர் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

    மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக உள்ளனர் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை கூட இவர்கள் நிர்ணயிக்கும் நிலை இருக்கிறது.

    • மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
    • தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம், நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலின வாக்காளர்கள் 152 பேர் அடங்குவர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளது. தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    100 வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் உள்ளனர். தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 13 வாக்குச்சாவடிகள் கவனிக்கத்தக்கதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.

    இந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 203 பேரும் உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 126 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டயறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 8,873 பேரும், முதல் தலைமுறை வாக்காளர்கள் 22 ஆயிரத்து 492 பேரும் உள்ளனர்.

    • தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்.
    • 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்வு.

    2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019ம் ஆண்டின் மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

    18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்.

    இதில், ஆண் வாக்காளர்கள்- 49.72 கோடி பேர், பெண் வாக்காளர்கள்- 47.15 கோடி பேர் உள்ளனர்.

    • கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் புதிததாக 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 950 வாக்காளர்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தமிழகத்திலேயே 2-வது பெரிய தொகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.

    மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 வாக்காளர்களுடன் வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 93 ஆயிரத்து 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். மற்ற 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    40 ஆயிரத்து 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என 85 ஆயிரத்து 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 27 ஆயிரத்து 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்கள் 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக ஓட்டுச்சாவடி எண்ணிக்கையும் 2,048 என கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் 435, கோவை வடக்கு 298, கோவை தெற்கு 251, சிங்காநல்லூர் 323, பல்லடம் 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தேர்தல் தேதி அறிவித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு அவற்றினை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.

    ×