என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புலம்பெயர் தொழிலாளிக்கு பீகாரில் வீடு உள்ளபோது, இங்கு வாக்காளர் ஆக முடியுமா? - ப. சிதம்பரம் கேள்வி
- புலம்பெயர்ந்த தொழிலாளி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
- சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் (அல்லது அவர்களது சொந்த மாநிலத்தில்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" என்று எப்படி கருதப்பட முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






