search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளியங்கிரி"

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.
    • கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மலையேறி சென்று சுயம்பு லிங்கத்தை தரிசக்க உள்ளனர்.

    கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி பக்தர்கள் மலையேறுவற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.

    எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.

    வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வடவள்ளி:

    கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம் 12-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.

    இதனை தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(வயது57). டாக்டரான இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார்.

    பின்னர் வெள்ளிங்கிரி மலையடிவாரத்திற்கு வந்து மலையேற தொடங்கினார். 4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரும் தனது நண்பர்கள் 12 பேருடன் வெள்ளிங்கிரி மலையேறினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது.
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம், பூண்டி தாலுகா, வெள்ளியங்கிரி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் 'வெள்ளியங்கிரி' என்ற பெயர் பெற்றது. இம்மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம், இமயமலையில் உள்ள கைலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.

    கைலாய மலையப் போல வெள்ளியங்கிரி மலையிலும் சிவபெருமான் வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மலையின் உச்சிப்பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் சுயம்பு லிங்கமாக காட்சித் தருகிறார் வெள்ளியங்கிரி ஆண்டவர். இந்த மலையில் மொத்தம் 7 குன்றுகள் உள்ளன. கடுமையான இந்த மலைப்பாதைகளை கடந்து தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள், பக்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதை அமைக்க வழியுறுத்தி உள்ளார்கள். அந்த அறிவிப்பன்படி மலைப்பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.
    ×