வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் தவறி விழுந்து பலி

புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான புவனேஷ்
பலியான புவனேஷ்
Published on

பேரூர்:

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com