என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு
- இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- அதிர்ச்சியான நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி ரமேஷை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவில் அடிவாரம் வந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6-வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்ததும், அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
இதுகுறித்து, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரமேசின் உடலை கைப்பற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்துபோன ரமேசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இறந்துபோன ரமேசுக்கு திருமணமாகி ரேவதி (32) என்ற மனைவியும், 7 வயதிலும், 4 வயதிலும் இரு மகள்களும் உள்ளனர்.