search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கம் தென்னரசு"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.

    ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.
    • மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம்.

    * மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    * கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது.

    * மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

    * நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது.

    * சில மாநிலங்களுக்கு அதிகமான வரி வருவாய் கொடுக்கப்படுகிறது.

    * பா.ஜ.க.ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    * தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.

    * மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    * நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

    * மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு வெறும் 3,273 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    * உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

    * கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணம் தொடர்பாக நிதி மந்திரியிடம் 72 பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
    • வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியுள்ளார்.

    இந்த மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் பாலங்கள், சாலைகள், பள்ளிகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எதிர்பார்த்ததை விட பெரிய பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது. எனவே இந்த நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசிடம் குறைந்த அளவே மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு விரைவாக நிவாரணம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது.
    • தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

    சென்னை:

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    டிசம்பர் 4-ம் தேதின்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை அனைவரும் அறிவீர்கள்.

    தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டது. புயல்-மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள்.


    நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.

    மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கடந்த 19-ம் தேதி அன்று விளக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதலமைச்சர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், 'இதுதொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?' என்று கேட்டார்கள். ஆம் என்றதும் அதனை வாங்கி வைத்துக் கொண்டார்கள். 'உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதைவிட எனக்கு வேறு பணி இல்லை' என்று பிரதமர் சொன்னார்கள்.

    தமிழ்நாட்டில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய 3 நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது ஆகும். 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்துப் பெய்கிறது என்று சொல்லத்தக்க மழையளவு ஆகும். எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்கள்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் கோரி உள்ளார்கள்.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்று முதலமைச்சர் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அதாவது ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தரவேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதலமைச்சரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் 'தேசியப் பேரிடராக அறிவிக்கமுடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை' என்று சொல்வதன் மூலம் தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.

    ஒன்றிய அரசின் அமைப்புகளின் சார்பில் என்னனென்ன மீட்புப்பணிகள் நடந்துள்ளது என்பதை எல்லாம் நிதி அமைச்சர் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். இது எதுவும் புதிய செய்தி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நெல்லையில் வைத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னவை தான். மத்திய பாதுகாப்புப் படையும், ராணுவமும் எந்த வகையில் ஒத்துழைத்து மீட்புப் பணியைச் செய்துள்ளது என்பதை முதலமைச்சரே விளக்கிச் சொல்லிவிட்டார். மத்திய பாதுகாப்புப் படை ஒத்துழைக்கவில்லை என்றோ, ராணுவம் வரவில்லை என்றோ நாங்கள் குற்றச்சாட்டை வைக்கவுமில்லை. நிதி அமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகளை வரிசையாகப் பார்த்தாலே மத்திய பாதுகாப்புப் படை குறித்த செய்திகள் அதிகம் உள்ளன.


    ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டுக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். 'நிதி கிடையாது' என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தரவேண்டும்?

    பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க மீடியாக்களை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி இருக்கிறார்.

    தமிழ்நாடு அரசு கேட்டது 21 ஆயிரம் கோடி. ஆனால் அதில் இதுவரை வந்திருப்பது 450 கோடி மட்டுமே. இதுவும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல்-மழை-வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.

    இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை 5 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும்.

    ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

    சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் NDRF-ல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்கவேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.

    2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் ஒன்றிய பாஜக அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே. அதாவது பாஜக தமிழ்நாட்டில் வைத்திருக்கும் வாக்கு சதவீதத்திற்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும். தமிழ்நாடு குறித்தும், வாழும் மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்காக நிருபர்கள் மீது பாய்ந்துள்ளார் நிதி அமைச்சர். அவரது கோபத்துக்குப் பின்னால் இருக்கும் குதர்க்கம் அனைவரும் அறிந்ததுதான்.

    நிதி அமைச்சர் தனது பேட்டியில், பிரதமர்-முதலமைச்சரது சந்திப்பையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். 'ஒருநாள் முழுக்க டெல்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்' என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்தியப் பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதலமைச்சர் அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் யாரிடமும், எந்தச் சூழலிலும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல.

    'மழை பெய்யும்போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?' என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். 'இந்தியா' கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். 'இந்தியா' என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத் தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தே தான் முதலமைச்சரின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. பற்றி எரிந்த மணிப்பூருக்கு ஒன்றிய மாண்புமிகுக்கள் ஒரு தடவையாவது போனார்களா? மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4-ம் தேதி புயல்-வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒருமுறை சென்னை வந்தாரா? என்று எங்களாலும் கேட்க முடியும். டெல்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர-அனைத்து நாட்களும் மக்களோடு மக்களாகத்தான் இருந்தார் முதலமைச்சர். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

    'ஒரே நாடு-ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.
    • ஓட்டு போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை விமர்சிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:-

    2011 டிசம்பரில் 'தானே' புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

    2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள்.

    2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த 'ஒக்கி' புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர்.

    2018ல் 'கஜா' புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.

    ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.

    அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.

    டெல்லியில் உள்ள தலைவர்களை போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் திமுக அரசு செயல்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு, உபரி நீர் திறப்பை முன்கூட்டியே கணித்து சரிவர கையாண்டோம். அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.

    யாருக்கு உதவி தேவையோ, அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

    கடந்த 2015ம் ஆண்டின் வெள்ளத்தின்போது 10,780 கோடி நிவாரண தொகையாக மத்திய அரசிடம் அதிமுக கேட்டிருந்தது.

    தற்போது 5 ஆயிரம் கோடி மட்டுமே நிவாரணம் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

    சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழையால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும்.

    ஓட்டு போடாதவர்கள் ஏன் நமக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அரசு தரப்பில் எந்த ஒரு விவரங்களும் மூடி மறைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்வோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம்.
    • மிச்சாங் புயலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிச்சாங் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் வரும் 18ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

    மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம் வழங்கியது.

    • 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது.
    • தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதில் இணைய வழியாக பங்கேற்றார்.

    சென்னை:

    இணைய வழி விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.

    இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

    இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

    சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.

    மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்தி பார்ப்பவை அல்ல.
    • கோடிக்கணக்கானவர்களுக்கு-லட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத் தான் முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

    சென்னை:

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது முதல், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.

    'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க.வின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு நேற்றைய தினம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் சென்று 'திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லும் அவர், எந்த வகையில் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால் விரிவாக விளக்கம் அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்வதைப் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

    'திராவிடம்' என்ற சொல் ஒருகாலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். 'திராவிடம்' என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம் என்பது பண்டித அயோத்திதாசர் , சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தந்தை பெரியார், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தமிழினத் தலைவர் கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல் ஆகும். 'சாதி பேதமற்ற திராவிடர்கள்' என்று அழைத்தவர் பண்டித அயோத்திதாசர். தமிழ் என்பதே அதனை உச்சரிக்க முடியாதவர்களால் 'திரமிள' எனத் திரிந்து அழைக்கப்பட்டது என்பது மொழியியல் அறிஞர்கள் கருத்து. எனவே தான் தமிழ்-திராவிடம் என்பதை ஒரே பொருள் தரும் இருவேறு சொற்களாக பயன்படுத்தினார் தந்தை பெரியார்.

    இத்தகைய திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்பவை, சுயமரியாதை- சமூகநீதி -சமதர்மம்- மொழிப்பற்று- இன உரிமை-மாநில சுயாட்சி-இந்தியக் கூட்டாட்சி ஆகும். இதனை உள்ளடக்கியது தான் 'திராவிட மாடல்' ஆட்சியியல் கோட்பாடு ஆகும். தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் தனது இலக்காக முதலமைச்சர் குறிப்பிட்டு வருகிறார். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது?

    திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்தி பார்ப்பவை அல்ல.

    கோடிக்கணக்கானவர்களுக்கு-லட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத் தான் முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல். அதன் 10-வது அத்தியாயம் 44-வது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. "பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தநதம், கசம் இத்தேசங்களை யாண்டவர்களனைவரும் மேற்சொன்ன படி சூத்திர ராய்விட்டார்கள்" என்கிறது மனு. எது தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கம். இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    அவருக்கு 'தமிழ்நாடு' என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது. அவருக்கு 'திராவிட இயக்கம்' பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

    ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன-வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரசாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். 'ஆளுநர் பதவி-என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம்' என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார். கடந்த அரை நூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்பது தான் உண்மை.

    'ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது. அவர் இருந்தால் தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்' என்று முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
    • திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. செந்தில் பாலாஜியை தனிமைப்படுத்தி குற்றச்சாட்டுவதற்கான அவசியம் என்ன? குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

    அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநர் அதிகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்களா?. இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

    அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் சொல்லும் சட்டப்பிரிவுகள் சரியானதா?. உச்சநீதிமன்ற கருத்துக்களை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி நீக்கம் என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் மேற்கொள் காட்டிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தி.மு.க. எம்.எபி. வில்சன் கூறினார்.

    • அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.
    • தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை.

    சென்னை:

    கடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    அப்போது அவர், '10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், வள்ளலாரின் நூல்களை படித்து பிரமித்தேன். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.

    அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம். யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் காரல் மார்க்ஸ்'', என விமர்சித்திருந்தார்.

    கவர்னரின் இந்த கருத்துக்கு, தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், தா்ம ரட்சராக புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டிருக்கிறார்.

    தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ் சமூக நாகரிக சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன.

    மத்திய அரசின் தனிப்பெருங்கருணை, ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே கவர்னர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார்.
    • இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது

    சென்னை:

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?" என்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் "ஊரெங்கும் ஊழல்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.

    முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அ.தி.மு.க. ஆட்சியை மறந்துவிட்டு - அ.தி.மு.க. ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு புகார் கொடுக்கிறார். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் பழனிசாமி. அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிவிட்டு, நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் பழனிசாமி; தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் இந்தப் பழனிசாமி என்பதுதான் வரலாறு.

    "துப்பாக்கிச்சூடு" எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்தே நடந்தது என்பதை துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிவித்து, "பச்சைப் பொய் பழனிசாமியின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளதை ஏனோ எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டு, இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப, தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க "பேரணி" "புகார்" "அறிக்கை" என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.

    அ.தி.மு.க.வின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

    இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?

    கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

    2015-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு "அ.தி.மு.க. மாநாடு"! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!

    போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு!

    எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார். படுபாதாளத்தில் விழுந்து கிடந்த நிதி நிலைமையை சரிசெய்து வருகிறார். சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த விவகாரத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கிறார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொழில் தொடங்க "முதலீடு பெறுவதை" ஒரு முழு முயற்சியாகவும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்து வதை தினசரிப் பணியாகவும் செய்து வருகிறார்.

    இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

    ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து தரக்குறைவாக - அவதூறாக - கீழ்தரமாகப் பேசி - அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்து"; அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது என அனைத்திலும் "கரன்சி பெட்டிகளை" கொடுத்து, தங்கக் கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்திகளைப் படித்து அப்போதே ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்ததை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.

    முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற "பெட்டி பெட்டியாக" பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட "கான்டிராக்ட் ஊழல்" அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை.

    இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல,

    பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள், தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ எனப் பாராட்டப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாததை தற்போது செய்வீர்களா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றதாகவும், மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள் ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்து படம் வெளியிட்டுள்ளார், ஆனால் அவரின் வீரம் புலியின் வாயை பிடிக்காமல் வாலை பிடித்துள்ளதில் தெரிவதாகவும் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

    மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சர் அறிவித்துள்ளதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மக்களிடத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளதால், மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×