search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite plant"

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #kadamburraju #admk

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் நல திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் மணிராஜ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு காயல்பட்டினத்தில் 5 இடங்களில் ரூ. 90 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டியும், ரூ 1.90 கோடி செலவிலான சாலை பணிகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பயோகேஸ் திட்டம், நகராட்சியில் சேவை குறைபாடுகள் மற்றும் ஆலோசனை பதிவு மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    காலத்திற்கேற்ப மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை உணர்ந்து நிறைவேற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக இந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நோன்பு காலங்களில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும், ஹஜ் மானியம் அளிக்கப்படும் திட்டத்தையும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயல்படுத்தினார். ஜெயலலிதா வழியில் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, தாசில்தார் தில்லைபாண்டி , சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், பொறியாளர் சுரேஷ், நகராட்சியின் முன்னாள் தலைவர்கள் வாவு செய்யது அப்துர்ரகுமான், வகீதா, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அபுல்ஹஸன் கலாமி, வாவு சுலைமான், அமானுல்லா, நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது இப்ராகிம், பேரவை செயலாளர் அன்வர், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்ற நிலைபாட்டில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குளம்பிப்போய் உள்ளார். அவர் அந்த தீர்ப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் வலுவான மெகா கூட்டணியாக அமைந்து வெற்றிகளை குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kadamburraju #admk

    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என்றும் 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.

    கூட்டணி வி‌ஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவு சரியானது. அரசாணை வெளியிட்டது கொள்கை முடிவுதான். ஆலை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் செயல்படாது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.

    தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #sterliteplant #supremecourt

    தஞ்சாவூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எதற்காக மூட வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்க கூடியது. இந்த ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் நச்சுபுகையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக மாசு அடைந்து வருகிறது. ஆலையில் இருந்து நச்சுபுகை வெளியேற 4 புகைபோக்கி குழாய்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு புகைபோக்கி குழாய் தான் உள்ளது. இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் என்று வாதாடினேன்.

    இதற்கு நீதிபதிகள், இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து உள்ளனர். இது தூத்துக்குடி மட்டுமல்ல தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றி ஆகும். இன்று தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் ஆகும்.

    உண்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நீதி வென்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தீர்ப்புக்கு முன் மண்டியிட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மீது போடப்பட்ட வழக்கை அ.தி.மு.க. அரசு மூடி மறைத்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தம், இந்த ஆலையை மூட வைத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் வேறு எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். அ.தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி இந்த செயலில் ஈடுபட வைத்தது. பலியான 13 பேருக்கும் நெற்றிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்துள்ளது. இது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள், வருவதற்கு முன்னரே போலீசாரால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறி திசை திருப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த அன்று இரவே நான் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தேன். வேறு யாரும் அங்கு வரவில்லை. பொது மக்களுக்கு நான் தொடர்ந்து பாதுகாவலனாக இருப்பேன்.

    சமூக போராளி முகிலன், கடந்த 15-ந் தேதி சென்னையில் இருந்து மதுரை ரெயிலில் ஏறினார். இரவு 1 மணி வரை அவரது செல்போன் உபயோகத்தில் இருந்தது. அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்சு ஆப் ஆகி உள்ளது. தற்போது எங்கே இருக்கிறார்? என்று தெரிய வில்லை. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். இல்லையென்றால் கடத்தப்பட்டு இருப்பார். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், போலீசாரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் வகையில் வைகோ, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். #vaiko #sterliteplant #supremecourt

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். #DMK #MKStain #Sterlite
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த தீர்ப்பை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன். கோர்ட்டு தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகு முழு விளக்கத்தை சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStain #Sterlite
    ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.

    ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.

    இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.

    கடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்பு விவரம் வருமாறு:-



    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமி‌ஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,600 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #Sterlite #Judgement #SupremeCourt
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.

    இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடிக்கு வந்துள்ள வெளிமாவட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

    இந்த நிலையில் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

    இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் உச்சகட்ட பரபரப்பு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிரம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை ஆணையர் சுகுணாசிங் ஆகியோர் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்காக நேற்று மாலை முதல் நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சிப்காட், கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியை தொடங்கினர். அதே போன்று தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் தூத்துக்குடி நகர் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிகிறது. #Sterlite #Judgement #SupremeCourt 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #opanneerselvam #sterliteplant #vaiko

    சிவகிரி:

    நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் மனோகரன் எம்.எல்.ஏ.வின் தந்தை அய்யாச்சாமி உடல்நலக்குறைவினால் காலமானார். இதையடுத்து நேற்று மனோகரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அய்யாச் சாமி படத்திற்கு மாலைகள் அணிவித்து மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார்.

    இதில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மூர்த்திப்பாண்டியன், பேரவை செயலாளர் சாமிவேல், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், வட்டார நில வங்கியின் தலைவர் கார்த்திகை செல்வன், மாவட்ட மன்றச் செயலாளர் சின்னத்துரை, பேரூர் செயலாளர்கள் குமரேசன், கந்தராஜ், பொறுப்பாளர்கள் காசிராஜன், துக்காண்டி, முருகையா, முருகன், பரமேஸ்வரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி, மாநகர மாவட்ட நிர்வாகிகள் தலைவர் பரணி சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். மக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை செய்து கொண்டு சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வைகோ கூறி வருகிறார். இவை உண்மையில் பசுமை தீர்ப்பாயத்தின் படி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசுதான். இதனை திறக்க விடமாட்டோம். இந்த விசயத்தில் வைகோ தான் இரட்டை வேடம் போடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #opanneerselvam #sterliteplant #vaiko

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteCase #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.



    இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

    இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #SterliteCase #SupremeCourt

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியை சேர்ந்த மோகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பொது மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

    ஒரு மனிதன் தனது உரிமையை பெற போராடலாம் என சட்ட உரிமை கூறுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எவற்றிற்குமே போலீசார் அனுமதி தருவதில்லை.

    போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அழைக்கழிக்கபடுவதுடன் போலீசார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல பொய் வழக்குகளை பதிந்துள்ளனர். தூத்துக்குடி போலீசார் சட்டபடி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வக்கீல் குழு பணியில் இருக்க சட்ட உதவிமையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

    15.8.2018 முதல் 15.1.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யபட்டவர்களுக்காக மூத்த வக்கீல் அடங்கிய குழுவினை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 3 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு? எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (30-ந்தேதி) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை நாளை (30-ந் தேதிக்கு) ஒத்திவைத்தினர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வைகோ, போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். #vaiko #parliamentelection
    திருச்சி:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி தீர்ப்பு வருகிற செவ்வாய்க்கிழமை வருகிறது. அந்த  தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாக  வந்தால் அதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான். பள்ளி- கல்லூரிகளில் இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றார்.

    பின்னர் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த வைகோ, நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். #vaiko #parliamentelection 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக ஒருநபர் கமி‌ஷனை சேர்ந்த வக்கீல் தெரிவித்துள்ளார். #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் தனிஅலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஒருநபர் ஆணையம் தற்போது தூத்துக்குடியில் 4-ஆம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை நிலவரம் குறித்து ஒருநபர் கமி‌ஷனை சேர்ந்த வக்கீல் அருள்வடிவேல்சேகர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் கமி‌ஷன் இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 700 பேர் வரை விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிந்த பிறகே, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring
    ×