search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi collector"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது.
    • தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், உணவு, வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வடை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போன்டா, பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    வணிகர்களின் இதுபோன்ற பாதுகாப்பற்ற பழக்க வழக்கங்களால் பொது சுகாதார நலனிற்கு கேடு ஏற்படுகிறது.

    எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும்.

    அதன் அடிப்படையில் அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள 'கருப்பு மை' என்ற விழிப்புணர்வு குறும்படத்தை கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில் ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

    தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Summer #TuticorinCollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை காலங்களில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்க, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன் தலையில் துண்டு அணிய வேண்டும், தளர்வாக பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெப்பம் குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். தேநீர், காபி போன்ற சூடான பானங்களை கோடை காலத்தில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.



    கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உப்பு கலந்த எலுமிச்சை சாறு அல்லது உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் ஆகியவற்றை குடிக்க வேண்டும். வெயில் நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் அருகே குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ விட்டு செல்லக்கூடாது. கோடை வெயிலில் வெப்பம் அதிகரிப்பதால் அதிகமான வியர்வை வெளியேறுவதால் உப்புச்சத்து, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்.

    களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுக்க வேண்டும். மயக்கம், உடல்சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும் அல்லது மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    மேலும், கோடை வெப்பத்தால் பொது இடங்களில் எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து காப்பாற்ற வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து நல்ல காற்றோட்டமான நிழல் பகுதியில் படுக்க வைக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு காத்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும். உடைகளை தளர்த்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும்.

    எனவே தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெப்பத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Summer #TuticorinCollector

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்று பிரசாரம் செய்தார். #LSPolls
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து அவரும் மோட்டார்சைக்கிள் ஓட்டியபடி பங்கேற்றார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோரும் பேரணியில் பங்கேற்று இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர்.

    இப்பேரணிக்கு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி வாயிலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், டி.எஸ்.பி. பிரகாஷ், போலீசார் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். #LSPolls
    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.

    தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப ஆலையை திறக்க விடாமல் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
    ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15-12-18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்த உடன், முதல்-அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை.

    மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.



    நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். அரசு நடவடிக்கையால் 13 உயிர்களை இழந்து உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் வரை மக்களின் அமைதி வழி போராட்டங்கள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். யாரும் போராட வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரில் தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
     
    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர்.

    இதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector #avoidprotests #Sterliteprotests
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    சென்னை:

    ‘தினத்தந்தி’ அதிபராக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி காட்டிய வித்தகர் ஆவார்.

    பத்திரிகை துறையில் மட்டுமின்றி விளையாட்டு, கல்வி, ஆன்மிகம், சமூக சேவை ஆகிய துறைகளிலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏராளமான ஒப்பற்ற நற்பணிகள் செய்து சாதனை படைத்தார்.

    கால் பதித்த துறைகளில் எல்லாம் வரலாற்று தடம் எனும் முத்திரைப் பதித்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகள், பட்டங்கள் சிறப்பு சேர்த்தன. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மரணம் அடைந்தார்.

    சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லத்தின் ஒரு பகுதி “நினைவு இல்லம்” ஆக மாற்றப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒப்பற்ற உயர்வான சேவைகளை தமிழக மக்கள் என்றென்றும் போற்றி நினைவு கூற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையடுத்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. திருச்செந்தூரில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் திருச்செந்தூர்- தூத்துக்குடி பிரதான சாலையில் ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரிக்கு அருகில் சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 60 சென்ட் இடம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 78.41 சதுர மீட்டரில் கண்கவர் வகையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்திலும், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி வளாகத்திலும் ஒரே நேரத்தில் நடந்தது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் 60 சென்ட் பரப்பளவில் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்- அமைச்சர் தலைமை ஏற்று தங்கள் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டும்படி மெத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது மங்கல இசை இசைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் தனது தந்தை சி.பா.ஆதித்தனாரைப் பின்பற்றி 1959-ம் ஆண்டு தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய சேவையை பாராட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

    மேலும், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப்ஆகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என அறிவித்திருந்தார்.


    அதன்படி, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பணிகளை போற்றுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டணம் கிராமத்தில் 60 சென்ட் பரப்பளவில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நிறைவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் பொ.சங்கர் நன்றி கூறினார். அவர் கூறியதாவது:-

    பத்திரிகை துறையில் முத்திரை பதித்த மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருச்செந்தூர் வட்டம் வீர பாண்டியன் பட்டணத்தில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் அவர்களுக்கு எங்கள் துறைச் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    அதுபோல விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த துணை முதல்- அமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தலைமை செயலாளருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளதால் அதற்கான பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SivanthiAditanar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் இசை மேதை நல்லப்ப சுவாமிகள் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாள். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

    அதே போல் நல்லப்ப சுவாமிக்கு விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சத்தில் நினைவு தூண் கட்ட அரசாணை வந்துள்ளது. நல்லப்ப சுவாமி பிறந்த நாள் அமைச்சர் தலைமையில் அரசு விழாவாக இன்று மாலை கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் நேற்று கருத்து கேட்டனர். ஆய்வுக்குழுவிடம் மொத்தம் 2 ஆயிரத்து 500 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


    ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுவை அகற்ற அந்த நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை வாங்கக்கூடிய நபர்கள் வந்ததும் தாமிர தாது அகற்றும் பணி தொடங்கும்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மலேசிய மணல் இருப்பு உள்ளது. அதில் கோர்ட்டு உத்தரவுப்படி முதல் கட்டமாக 11 ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை நாளை தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SivanthiAditanar #thoothukudicollector #sandeepnanduri
    தூத்துக்குடியில் உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய முப்படைவீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற அலுவலர் நிலைக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 வகுப்பில் 60 சதவீத மதிப் பெண்கள் அல்லது அதற்கு அதிகமாக பெற்று, தேர்ச்சி பெற்று, தொழிற்படிப்பு படிக்கும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியானவர்கள் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்து அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 04612321678 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #ThoothukudiIncident #HighCourt #SterliteProtest
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக பல்வேறு காவல் நிலையங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது ஜனநாயக நாடா? போலீசாரின் அதிகாரத்திற்குட்பட்ட சர்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #ThoothukudiIncident #HighCourt #SterliteProtest

    தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 99 சதவீத ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு விட்டன. ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல். தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
    ×