search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் முறைகள் - தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை
    X

    கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் முறைகள் - தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை

    கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Summer #TuticorinCollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை காலங்களில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்க, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன் தலையில் துண்டு அணிய வேண்டும், தளர்வாக பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெப்பம் குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். தேநீர், காபி போன்ற சூடான பானங்களை கோடை காலத்தில் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.



    கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உப்பு கலந்த எலுமிச்சை சாறு அல்லது உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் ஆகியவற்றை குடிக்க வேண்டும். வெயில் நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் அருகே குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ விட்டு செல்லக்கூடாது. கோடை வெயிலில் வெப்பம் அதிகரிப்பதால் அதிகமான வியர்வை வெளியேறுவதால் உப்புச்சத்து, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்.

    களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுக்க வேண்டும். மயக்கம், உடல்சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும் அல்லது மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    மேலும், கோடை வெப்பத்தால் பொது இடங்களில் எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து காப்பாற்ற வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து நல்ல காற்றோட்டமான நிழல் பகுதியில் படுக்க வைக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு காத்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும். உடைகளை தளர்த்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும்.

    எனவே தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கோடை வெப்பத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Summer #TuticorinCollector

    Next Story
    ×