search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart City"

    • திருச்சியில் புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது.
    • திருச்சி தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் 83 பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை 38 பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இதில் பட்டவொர்த் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புராதன பூங்கா மற்றும் தெப்பக்குளத்தில் வண்ண விளக்குகளால் அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம் மற்றும் கிழக்கு புலிவால் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கனக வாகன முனையம் ஆகிய 3 முக்கிய திட்டப் பணிகள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் பூர்த்தி அடையும் என மாநகராட்சி என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.

    2023 மார்ச் மாதத்திற்குள் 45 பணிகளை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல வரலாற்று அடையாளங்கள் இடம்பெறுகின்றன. முக்கியமாக திருச்சி மாநகரில் கோலோச்சிய மன்னர்கள், மகாராணிகள் தொடர்பான விவரங்கள் இந்த பூங்காவில் இடம்பெறுகின்றன.

    தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு பணிகளும் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகன நிறுத்துமிடம் ரூ.14 கோடியில் அமைக்கப்படுகிறது.

    இந்த திட்டப் பணி மூலமாக காந்தி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் நிறுத்த கூடுதல் வசதி ஏற்படும். இதனால் மார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    பஞ்சப்பூர் சோலார் பிளாண்ட் தொடர்பான பணிகளும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
    • சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா இன்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்்.

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சென்ற அவர் அங்குள்ள ஆக்கி மைதானம், தடகள போட்டி மைதானம், மற்றும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு மழையின் போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழைநீர் உடனடியாக வடிந்து விடும்.

    சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    வ.உ.சி. மைதானத்தை பொருத்தவரை ஒரு தனி விளையாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்த மைதானத்தில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    சந்திப்பு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கனிமவளம் தொடர்பாக வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் சேரன்மகாதேவி தாலுகா அலுவலத்தில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள இ-சேவை மையத்தை பார்வையிட்டார். 

    • மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் பேரங்காடி கட்டுமான பணிகள், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பெரியார் பேருந்துநிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள், அருகில் உள்ள பயணிகள் சுற்றுலா தகவல் மையத்தில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சி ராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆணையாளர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலருக்கு உத்தர விட்டார்.

    முன்னதாக ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர்பாலம் பகுதியில் உள்ள கழிவு நீரேற்றுநிலையம், மேலப்பொன்னகரம் 8-வது தெருவில் பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையம் ஆகிய கழிவுநீரேற்று நிலையங்க ளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் ேசகர், மக்கள்தொடா;பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கிய சேவியர், தியாகராஜன், கந்தப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.

    ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமி‌ஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

    “ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.

    எஸ்.பி. வேலுமணி


    உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 6 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் மணிக்கு 5 ரூபாய் கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. #Metrotrain #SmartCity
    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் நல்ல உடல் ஆரோக்கியத்துக்காக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்மார்ட்’ பைக் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐதராபாத், டெல்லி, அமராவதி உள்ளிட்ட இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    சென்னையில் முதற்கட்டமாக 6 இடங்களில் 60 ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம், டவர் பூங்கா, அண்ணாநகர் கிழக்கு, சிந்தாமணி சந்திப்பு, வள்ளியம்மாள் உயர் நிலைப்பள்ளி, கந்தசாமி கல்லூரி ஆகிய இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 25 இடங்களில் 250 சைக்கிள்கள் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தில் ஸ்மார்ட் போன் ‘ஆப்’ மூலம் ‘கியூ ஆர்’ கோடு மற்றும் பாஸ்வேர்ட் மூலம் சைக்கிள்களை எளிதில் பெறலாம். மணிக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம், உடல் வலுவாக அமைய இந்த சைக்கிள்கள் பயன் உள்ளதாக அமையும். பொதுமக்களிடம் சைக்கிள்கள் குறித்த விழிப் புணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. #CycleSharing #Metrotrain #SmartCity
    தஞ்சையின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை காலி செய்ய முடியாது என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை வழங்கினர். அதனை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பூதலூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பூதலூரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் மகேந்திரன் தனது மனைவி வளர்மதி பெயரில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை தனது வீட்டு வேலை செய்ய அனுப்புகிறார்.

    மேலும் கிராம பஞ்சாயத்து பகுதியில் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து வருகிறார். பஞ்சாயத்தில் குடிநீர் வசதி செய்ய வழங்கப்படும் குழாய்களை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யாமல் தனது உறவினர்கள் 2 பேருக்கு பசுமை வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ளார்.

    இதன் மூலம் அவர் ரூ.5 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சை மேல அலங்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறி பிள்ளையார் பட்டியில் கட்டுபட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும்படி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேல அலங்கம், வட அலங்கம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களை ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்க பணி நடைபெறுவதால் இடத்தை காலி செய்து விட்டு பிள்ளையார் பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும் படி மாநகராட்சி அலுவலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

    எங்களது குழந்தைகள் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியில் பலர் வேலை பார்த்து வருகின்றனர். நாங்கள் இங்கிருந்து இடமாறி சென்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும். இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னேற்றத்திற்கான “ஸ்மார்ட் சிட்டி” திட்டப் பணிகளை நிறைவேற்றவிடப்படும் டெண்டர்களில், ஆழமான உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலையீடும், குறுக்கீடும் தாண்டவமாடுகிறது.

    ஒரு தனியார் கம்பெனி “மெட்டல் ஷீட்” தயாரிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட கம்பெனி என்றும், அந்த தனியார் கம்பெனிக்கு “மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப்” பணிக்கான டெண்டரை வழங்க இயலாது என்றும் டுபிட்கோ மறுத்திருக்கிறது.

    இதனால் டுபிட்கோவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகாந்த் காம்ப்ளே அதிரடியாக மாற்றப்பட்டார். ஏற்கனவே, சர்ச்சைக்குரிய இந்த தனியார் கம்பெனிக்கு சென்னை மாநகரத்தில் மின்னணு நிர்வாக ஒப்பந்தம் வழங்கியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் டுபிட்கோவின் கூடுதல் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மாநிலங்களவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுபிட்கோவின் இந்த “சீர்மிகு நகரங்கள்” டெண்டரிலும், சீர்கெட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரடியாக தனது பினாமி கம்பெனிக்காக தலையிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    அதிலும் குறிப்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் கம்பெனிக்கு “ஸ்மார் சிட்டி மின்னணு நிர்வாகம்” தொடர்பான பணிகளை அளிக்க அழுத்தம் கொடுப்பதும், தனது பதவியை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்வதும், லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்குரிய குற்றங்களாகும்.


    உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.வேலு மணியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் டெண்டர் முறைகேடுகள் தொற்றுநோய் போல் பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. எல்.ஈ.டி விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், அது அமைச்சர் வேலுமணியின் பினாமிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இந்த “சீர்மிகு நகரங்களின்” மின்னணு நிர்வாகம் தொடர்பான டெண்டர் விவகாரம் உள்ளிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் அனைத்திலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள டெண்டர்கள், அந்த டெண்டர்களை பெற்றுள்ள தனியார் கம்பெனிகளுக்கும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து “நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி” தலைமையில் ஒரு சிறப்புக் குழுவினை அமைத்து விசாரணை நடத்தி, அதனடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், அவருக்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin
    தமிழகத்தில் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டருக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #SmartCity #MadrasHC
    சென்னை:

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டடன. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக அரசு டெண்டர் விட்டு அதில் எல் அண்டு டி நிறுவனம் தேர்வாகியிருந்தது.

    சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்கவில்லை எனக்கோரி ஏஸ்டெக் மிஷனரி என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மகாதேவன், டெண்டரின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 
    ×