search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School"

    • மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவை கொண்டாடி மகிழந்தனர்.
    • முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    திருப்பூர்

    திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டும் அவரது பிறப்பின் வரலாற்றைக் கூறும் விதமாக நாடகம் நடத்தியும் பாடல்கள் பாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் ,துணைசெயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா கலந்து கொண்டனர்.

    விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
    • மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம்.

    தாராபுரம்: 

    காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு-

    வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

    தொடர் மழையால் ஒரு சில இடங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும்.

    பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளில் சுற்றுவேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளிகிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

    மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.

    அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார்.

    பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு சர்வதேச கலாச்சார ஒற்றுமை குறித்து எடுத்து கூறப்பட்டது.

    இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சிறுவலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி
    • கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடுகூர் ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கருத்தாழன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள் தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    விருதுநகர்:

    அறிவியல், விஞ்ஞானம், விண்வெளி, நாகரீக வளர்ச்சி என்று நாடு முன்னேற்ற பாதையில் பயணித்தாலும், அவற்றையெல்லாம் படுபாதாளத்தில் தள்ளும் வகையிலான ஈனச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய செயல்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித கழிவுகளை கலந்து முன்னேற்றம் அடையாத சமுதாயம் என்பது முத்திரை குத்தப்பட்டது.

    உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., அறிவியல் பூர்வமான விசாரணை என்று நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அதனை நினைத்து பார்க்கக்கூடாது என்றிருந்த நிலையில் அதே சாயலில் விருதுநகர் அருகே மற்றொரு செயல் நடந்துள்ளது.

    விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பம் பட்டி கிராமத்தில் 200 பேர் கல்வி பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க அந்த ஊரைச்சேர்ந்த மாணவ, மாணவிகளே இங்கு படிக்கிறார்கள்.

    முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே இருந்த வசதியுடன் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டி ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டது.

    எந்தவித பாகுபாடும் இன்றி இதுவரை வயிறாற உணவுடன், தரமாமன கல்வியும் போதிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பூதாகரமாக புகுந்த கயவர்கள் சிலர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் அந்த தொட்டியில் இருந்து குடித்த நீரில் துர்நாற்றம் வீசியது. அதனை திறந்து பார்த்தபோது சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. சுத்தம் செய்பவர்கள் பெரிதுபடுத்தாமல் கழுவி தண்ணீர் ஏற்றினர். 3-ந்தேதியும் இதே செயல் நடந்தது.

    கிருஷ்ணஜெயந்தி விடுமுறைக்கு மறுநாளான நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தண்ணீரை பருகியபோது மீண்டும் அதில் சாணம் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரும் இதனை உறுதி செய்தனர்.

    இதுபற்றி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அங்கு திரண்டு ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளியில் உள்ளூர் மாணவர்களே படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற அசுத்தமான செயலை செய்திருக்கமாட்டார்கள். பக்கத்து ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்கு விளையாட வருவார்கள் என்று தெரிவித்தனர். அவ்வாறு வரும் மாணவர்கள் யார், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், விடுமுறை நாளில் பள்ளிக்கு விளையாட வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    சாதிய வன்கொடுமையை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    • போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏற்றனர்.

    அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பேசுகையில்.

    நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் சார்பாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 2000 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும்,15 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்தும், 300 கிலோ மேல் கஞ்சா பறிமுதல் செய்தும், மற்றும் குட்கா பான் மசாலா விற்பனை செய்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவை அனைத்தும் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறையின் சார்பாக நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியாகும் ஆனால் இது போதாது மாணவராகிய ஒவ்வொருவரும் போதைப் பொருளை தவிர்த்தல் வேண்டும், எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்று சொல்லி ற்கேட்ப அனைவரும் போதை பொருளை விட்டு ஒழித்தல் வேண்டும். மாணவராகிய நீங்கள் உடற்ப யிற்சியை மேற்கொண்டு உடலை வலுவாக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் டாக்டர், இன்ஜினியர் போன்ற பெரிய பதவிகளுக்கு அனைவரும் செல்ல வேண்டும்.

    போதைப் பொருட்களை தவிர்ப்போம் சிறப்பான வாழ்க்கை அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.
    • பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் வென்றனர்.

    நெல்லை:

    மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.2-ம் நாளான இன்று போட்டிகளை ஹென்றி ஜெரோம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் ஆல்பெர்ட் ஜோசப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றனர். மற்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் விவேக், நிர்வாகிகள் கபீர், பால் , ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், செயலாளர் பீர் அலி, தடகள கழக இணைச்செயலாளர் ஜாய், செல்வின், ரவீந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இன்று மாலை பரிசுகள், கோப்பைகள் வழங்கப்படுகிறது.

    • என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் தூய்மை பசுமையை வலியுறுத்தி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தினை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து தூய்மை பசுமையை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் என்.எஸ். எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் தேசிய பசுமை படை வழங்கிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன், தலைமை ஆசிரியர் கஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன் சூழல் ஒருங்கிணைப்பாளர் இமயசிவன், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புஷ்பராஜ் , கண்ணன், சங்கர் மற்றும் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    உறுதிமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சுகாதாரமான சூழல்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

    செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • தொடர்ந்து இந்த புதிய திட்டம் குறித்து விளக்கி பயன்பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித்தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார்.

    தென்காசி:

    சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் எஸ்.எஸ்.எம். செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெண்கள் அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த புதிய திட்டம்குறித்து விளக்கி பயன் பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித் தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மரிய செல்வம் சிறப்பு விருந்தினர் செல்வகுமாருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஆசிரியர் சுகந்தி வரவேற்று பேசினார். கீதா தன்னார்வலராக பங்கேற்றார்.

    ×