search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo"

    இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது. இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு, அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. #JactoGeo #Teachers
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஆசிரியர்களிடையே உள்ள சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அவர்களது 9 அம்ச கோரிக்கைகளில் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்தது. ஜாக்டோ-ஜியோ கோரிக்கையால் தமிழக அரசுக்கு எந்த அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதையும் தமிழக அரசு விளக்கமாக கூறியது.

    தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். நேற்று 8-வது நாளாக அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    “நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பணிக்கு வராத ஆசிரியர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து வேலைக்கு வராத ஆசிரியர்கள் யார்-யார் என்று கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    பொதுத்தேர்வு மற்றும் பயிற்சித்தேர்வு நெருங்குவதால் வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தி வகுப்புகளை நடத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து சுமார் 50 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுமார் 500 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு இடமாற்றம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதை ஏற்று மேலும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

    இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோர்ட்டில் தங்களுக்கு சாதகமான உத்தரவு வரும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் கோர்ட்டு புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அதற்கு பதில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் இனி எந்த பேச்சும் நடத்தப்பட மாட்டாது என்று அரசு அறிவித்தது.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்தால், அவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை இறுதி கெடுவாகவும் அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 97 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பினார்கள். இன்று (புதன்கிழமை) காலை மேலும் 2 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் 99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்துவிட்டனர்.

    99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதால் 8 நாட்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கின. மூடப்பட்டு கிடந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி தேர்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மட்டுமே இன்று பணிக்கு வரவில்லை. அவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டுமானால் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்றே சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர்களில் 1273 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிய வந்துள்ளது.

    இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு குடிமைப்பணி விதி 17(பி)ன் கீழ் குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-

    உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரை 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். நேற்றிரவு வரை பணிக்கு வராதவர்கள் மீது 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இன்று காலையில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு 17பி-ன்படி “மெமோ” வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மெமோவை பெற்றுக்கொண்டுதான் பணியில் அவர்கள் இன்று சேர முடியும். பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடங்கி விட்டது. இதுவரை 1082 ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்ட நிலை குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

    எங்களது போராட்டத்தை அரசு மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறது. முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் கவுரவம் பார்க்கிறார். சுயநலத்திற்காக போராடுவதாக முதல்-அமைச்சரே கூறியுள்ளார். அரசு ஊழியர்-ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவரது அறிக்கை உள்ளது.

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இன்று பிற்பகல் 3 மணி வரை அழைப்புக்காக காத்திருக்கிறோம்.

    முதல்-அமைச்சர் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குள்ளாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் இன்று (புதன்கிழமை) மாலை உயர்மட்ட குழு கூடி அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை செய்வோம்.

    மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை உள்ளது. 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க இருப்பதால் கடமையை உணர்ந்து பணிக்கு செல்கிறார்கள்.

    ஆனாலும் உரிமைக்காக போராடும் நிலையில் இருந்து அவர்கள் விலகவில்லை. மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதிருப்தியுடன்தான் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது இந்த அரசு அடக்குமுறையை கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் 5 ஆயிரம் பேர் மீது சஸ்பெண்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    ஆனாலும் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் டி.எம்.எஸ். அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Teachers

    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    புதுக்கோட்டை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தொடர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இவர்களை நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.  #JactoGeo
    திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 600 பெண்கள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். #Jactogeo
    திருவாரூர்:

    பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 22-ந் தேதி தொடங்கினர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்் சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துவேல், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகவடிவேல், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பெண்கள் உள்பட 1,000 பேரை கைது செய்தனர். #Jactogeo
    கோர்ட் உத்தரவால் திருச்சியில் அதிக அளவில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். #Jactogeo
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தூண்டியதாக 48 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நேற்று திருச்சி உறையூர் மாநகராட்சி பள்ளி உள்பட சில பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் பூட்டப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் வந்திருந்த ஒரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திண்ணைகளில் பாடம் எடுத்தனர். இன்று 8-வது நாளாக திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிட்டால் அந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் நேற்றைய கூட்டத்தை விட இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் இன்று காலை பணிக்கு திரும்பியிருந்தனர்.

    ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #Jactogeo
    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திருப்பூர்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 1626 பெண் ஊழியர்கள் உள்பட 1941 பேரை இரவில் விடுவித்தனர். ஆனால் முக்கிய நிர்வாகிகளான சம்பத்குமார், சாமி குணம், சிவம், வெள்ளிங்கிரி உள்பட 42 பேரை விடுவிக்கவில்லை.

    இவர்கள் 42 பேரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், வழிமறித்து தடுத்து இடையூறு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் 42 பேரையும் இன்று அதிகாலை கோவை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு வேலுசாமி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் செய்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கலெக்டர் பங்களா அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 566 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 63 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள 6 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இரவு 10 மணிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ், நிர்வாகிகள் கனகராஜ் உள்பட 45 பேரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர்களை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 45 பேரையும் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இன்று காலை அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த 2 போலீஸ் வாகனங்களில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Jactogeo
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Jactogeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி சேலத்திலும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் கடந்த 25-ந் தேதி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 45 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன்பு 45 பேரையும் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாமக்கல்லில் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 55 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர் வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 3,200 ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 8 இடங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

    கைதானவர்கள் வழக்கமாக மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் நேற்று முக்கிய நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கைது செய்யப்படலாம் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இரவு 9 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்கள் விடுவிக்கப்படாததால் மண்டபங்களில் தங்கி இருந்த அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    மண்டபங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஊழியர்களில் பலர் சர்க்கரை நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள், 6 அரசு ஊழியர்கள் என 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மற்ற பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அந்த 9 பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டனர். #Jactogeo
    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 97 ஆசியர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #JactoGeoStrike
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ சார்பாக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், ராஜசேகர், பவுல், பொன்னுசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 1200 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 42 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைதான ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JactoGeoStrike
    பொள்ளாச்சியில் போராட்டத்தை தூண்டும் வகையில் பேசிய வீடீயோ காட்சி பரவி வரும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #jactoGeo
    கோவை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    அன்றைய தினம் பொள்ளாச்சி கோட்டூர் ரமணமுதலிபுதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சினேக லதா என்பவர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதுடன், பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றார்.

    அப்போது பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்ற சினேகலதா அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அழைத்தார். போராட்டதுக்கான கோரிக்கைகள் குறித்து சினேகலதா சக ஆசிரியர்களுக்கு கூறியதோடு, ஆவேசமாகவும் பேசினார். அவரது இந்த பேச்சை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சினேகலதாவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் சினேகலதா மீது பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெள்ளிங்கிரி என்பவர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதன்பேரில் சினேகலதா மீது இந்தியதண்டனை சட்டம் 448-அத்துமீறி நுழைதல், 341- தடுத்து நிறுத்தி இடையூறு ஏற்படுத்துதல், 153- கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #jactoGeo
    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo
    கடலூர்:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர்.

    இதனால் அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #Strike
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரசு நடவடிக்கையால் இன்று அரசு பள்ளிகளில் 80 சதவீத ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்றும் 8-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் 68 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தன. #JactoGeo #Strike

    கும்மிடிப்பூண்டியில் 2 பட்டதாரி பெண்கள் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்தினர். #JactoGeo #Strike
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இங்கு பணியில் இருந்த 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    கல்வித்துறை சார்பில் பாதிரிவேடு மேற்கு அரசு பள்ளியில் இருந்து முருகன் என்ற ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அந்த வகுப்பறையில் பாடம் கற்பித்தார். மற்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம கல்விக்குழு நிர்வாகிகள், மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்வி கற்பதற்கான வழிமுறைகளை உடனடியாக செய்தனர்.

    அதே பகுதியைச்சேர்ந்த வாசுகி, கீதப்பிரியா என்ற 2 பட்டதாரி பெண்களை கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இதனைக்கண்ட மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே தங்களிடம் பழக்கமான தற்காலிக 2 பெண் ஆசிரியர்களிடம் பாசமுடன் கல்வி பயின்றனர். #JactoGeo #Strike

    ×