search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo strike"

    திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். #JactoGeoStrike #TeachersProtest
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகள் முடங்கியுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    பணிக்கு வராமல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். மறியலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அரசின் கெடுபிடியால் தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தகுமார் கூறுகையில்,

    ஆசிரியர்கள் வருகை இல்லாத பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் சங்க பொறுப்பாளர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. மற்றவர்கள் வந்துவிட்டனர்.

    மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றார்.  #JactoGeoStrike #TeachersProtest


    கும்மிடிப்பூண்டியில் 2 பட்டதாரி பெண்கள் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்தினர். #JactoGeo #Strike
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இங்கு பணியில் இருந்த 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    கல்வித்துறை சார்பில் பாதிரிவேடு மேற்கு அரசு பள்ளியில் இருந்து முருகன் என்ற ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அந்த வகுப்பறையில் பாடம் கற்பித்தார். மற்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம கல்விக்குழு நிர்வாகிகள், மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்வி கற்பதற்கான வழிமுறைகளை உடனடியாக செய்தனர்.

    அதே பகுதியைச்சேர்ந்த வாசுகி, கீதப்பிரியா என்ற 2 பட்டதாரி பெண்களை கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இதனைக்கண்ட மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே தங்களிடம் பழக்கமான தற்காலிக 2 பெண் ஆசிரியர்களிடம் பாசமுடன் கல்வி பயின்றனர். #JactoGeo #Strike

    போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JactoGeoStrike #TeachersProtest
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.



    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்து வருகிறது. மாவட்ட தலை நகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக பணிக்கு வராத 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை ஈடுபட்டது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    முதுநிலை பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் முடங்கி உள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் 65 சதவீத அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் திருப்புதல் (ரிவிசன்) தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது.

    இதுபோன்ற நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நேற்றும் எச்சரிக்கை விடுத்தது.

    எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்றும் அவகாசம் அளித்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேரும், தொடக்கப்பள்ளியில் 70 சதவீதம் பேரும் இன்று பணிக்கு திரும்பியதாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

    சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்பட்டதாகவும். 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர் என்றும் சென்னை முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறினார்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தற்காலிக ஆசிரியர்களை கல்வித்துறை நியமித்து வருகிறது.

    ஏற்கனவே 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 602 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கல்வித்துறை பிறப்பித்தது. மொத்தம் 1002 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து 1002 பணியிடங்களை காலியிடமாக அறிவித்து அவற்றுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 3 இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். #JactoGeoStrike #TeachersProtest
    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். #JactoGeo #Temporaryteacher
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி இறுதி தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகளின் கல்விக்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JactoGeo #Temporaryteacher

    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju #Jactogeo
    மதுரை:

    மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

    இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.

    அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo

    வேலை நிறுத்தம் செய்யும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #JactoGeo

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான காரணம் ஆகும். இக்கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை புதிதாக அறிவிக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அப்போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யும் முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்தப் போராட்டத்தைக் கூட கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கப்போவதக அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதற்கு முன்பாக நவம்பர் 16ஆம் தேதி காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கியதால் திசம்பர் 4ஆம் தேதிக்கு தங்களின் போராட்டத்தை அவர்கள் ஒத்திவைத்தனர். அப்போதும் கூட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, போராட்டத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்க முடியுமா? என்று கேட்டதை ஏற்று முதலில் திசம்பர் 10ஆம் தேதி வரையிலும், பின்னர் ஜனவரி 7ஆம் தேதி வரையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் ஒத்தி வைத்தனர்.

    ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் பலமுறை அவகாசம் கொடுத்தும், அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து தான் தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக உயர் நீதிமன்றத்தில் அளித்திருந்த வாக்குறுதியை கடந்த 7ஆம் தேதி திரும்பப் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளது. போராட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டதால் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, இப்போராட்டத்தை அரசு தவிர்க்கச் செய்திருக்கலாம். ஆனால், என்ன காரணத்தினாலோ அதை செய்ய அரசு தவறி விட்டது.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட. புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். அரசு ஊழியர்களின் அடுத்த முக்கியமான கோரிக்கை ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது தான். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழு கடந்த நவம்பர் 27-ஆம் தேதியும், ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட சித்திக் குழு இம்மாதம் 5-ஆம் தேதியும் அறிக்கைகளை தாக்கல் செய்து விட்டன. அவற்றை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு அறிவித்திருந்தால் இப்போராட்டம் நடந்திருக்காது. அதைச் செய்யாமல் இச்சிக்கலில் முடிவெடுப்பதை அரசு தள்ளிப்போடுவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை.

    தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. நிதியாண்டு முடிவடையவுள்ளதால் அரசு அலுவலகங்களிலும் ஏராளமான பணிகள் இருக்கும். இத்தகைய சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை அரசு அழைத்துப் பேசி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×