search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indians"

    மெக்சிகோவில் இருந்து படகு வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேரை அமெரிக்க கடலோர காவல்படை கைது செய்தது. #America
    நியூயார்க்:

    மெக்சிகோவில் இருந்து பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றி கொண்டு அமெரிக்க கடற்பகுதிக்குள் நுழைந்தது. இதனை வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான விமானம் ஒன்று கண்டறிந்தது.  இதுபற்றி அமெரிக்க கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த படகு அமெரிக்க கடலோர காவல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த படகில் 2 இந்தியர்கள் உட்பட மொத்தம் 19 பேர் இருந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த கடலோர காவல்படை, அதில் இருவர் கடத்தல்காரர்கள் என்பதையும் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #America
    பணி அனுமதிக்காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் எவ்வித தண்டனையும் இன்றி நாடு திரும்பும் பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. #UAEAmnesty2018
    துபாய்:

    எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் சுமார் 2.8 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். 

    இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. விசாக்காலம் முடிந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் அவர்கள் தாய்நாடு திரும்புவதிலும் சிக்கல் இருந்தது.



    இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.

    மேலும், வேலை இல்லாதவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் பொதுமன்னிப்பு அமலாகியுள்ளதால் பலர் தங்களது சொந்த நாடு திரும்ப தங்களது நாட்டு தூதரகத்தில் குவிந்தனர். இன்று முதல் நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்தனர்.

    மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஐக்கிய அமீரகத்தின் துபாய் லாட்டரியில் இந்தியர்களில் ஒருவர் ரூ.6.8 கோடியும், மற்றொருவர் பி.எம்.டபிள்யூ காரும் வென்றுள்ளனர். #DubaiLottery
    துபாய்:

    ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி அதிகம்.

    இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு ரூ.6.8 கோடி லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. “வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லாட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.

    மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
    இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.

    குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.

    இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.

    என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.

    பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த வி‌ஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.

    அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.

    அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

    அந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

    அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.

    40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
    நேபாளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்வால்லன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal
    காத்மாண்டு:

    நேபாளத்தில் பேடாடர் மலைப்பகுதியில் இருந்து கோஷி பகுதி வழியாக வந்துகொண்டிருந்த இந்திய பதிவு எண் கொண்ட வாகனம் திடீரென்று ஓட்டுனரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த வாகனம் அருகில் இருந்த ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal
    டிரம்ப்பின் புதிய எல்லை கொள்கையால் அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் இந்தியாவில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் அங்குள்ள ஆரேகான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஒருமாத காலத்தில் தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் சென்ற 123 பேர் அங்குள்ள ஆரேகான் மாநிலத்தில் உள்ள ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 50 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் குறுகிய தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை யாரும் சந்தித்து சட்ட உதவிகளை அளிக்கவும் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஆரேகான் இந்தியா பசிபிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  #Indianasylumseekers  #asylumseekersdetainedinUS
    அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போதுள்ள இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கு 151 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. எனவே இதை பெற அங்கு வாழும் வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் தற்போது கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்.

    2018-ம் ஆண்டு எப்ரல் 20-ந்தேதி நிலவரப்படி 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக குறுகிய காலத்தில் இ.பி.-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இதற்கே 6 ஆண்டுகளாகும்.

    இளங்கலை பட்டம் பெற்று இ.பி.-3 பட்டியலில் காத்திருப்போர் கிரீன்கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும். இந்த பட்டியலில் 54,892 இந்தியர்களும், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என 60,381 பேர் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் உள்ளனர்.

    இருந்தபோதிலும் இ.பி.2 பட்டியலில் கிரீன் கார்டு வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக பலர் காத்திருக்கின்றனர். இவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்கள். இப்போது கிரீன்கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்கள் கிரீன்கார்டு பெருவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் கிரீன்கார்டு கிடைக்காமல் அமெரிக்காவிலேயே இவர்கள் இறக்க வேண்டும். அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும்.

    தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன்கார்டு வழங்க கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 684 பேரும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் உள்ளனர்.

    மொத்தத்தில் ஆரம்ப நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேரும், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேரும் காத்திருக்கின்றனர். #US #GreenCard #Indians
    நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey
    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலாப் பயணிகள் குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை அரசு சமீபத்தில் வெளியிட்டது. 2017-ம் ஆண்டுக்கான இந்த ஆய்வறிக்கையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை விவரம், அதிக அளவில் வருகை தந்த சுற்றுலாப் பகுதி மற்றும் சுற்றுலா மூலம் கிடைத்த வருவாய் போன்ற புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வறிக்கையின்படி, நேபாளத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். 2017ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 217 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில் 17.1 சதவீதம் பேர் இந்தியர்கள். சீனா 11.1 சதவீத சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா 8.44 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியர்களே முதலிடம் பிடித்திருந்தனர்.



    நேபாளத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டும் 47 சதவீதம் ஆகும். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப்  பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

    81 சதவீத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலமாகவும், 19 சதவீத பயணிகள் தரைவழி போக்குவரத்து மூலமாகவும் (குறிப்பாக இந்தியர்கள்) நேபாளத்திற்கு வருகை தந்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey

    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×