search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug-trafficking"

    • அதிமுக தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.
    • அ.தி.மு.க. நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்த தோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த தி.மு.க. அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க. தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.


    மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த தி.மு.க. அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    அ.தி.மு.க. நடத்திவரும் 'போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத தி.மு.க.-விற்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    • குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லியில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியாக செயல்பட்ட சதா என்கிற சதானந்தம் என்பவரை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அவருக்கு சொந்தமான போதைப்பொருள் குடோன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்தும் போதைப்பொருட்கள் பொட்டலம் போடப்பட்டு கடத்தப்பட்டு உள்ளன.

    இதையடுத்து மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான போதைப்பொருள் குடோனுக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இங்கிருந்து எந்தெந்த வழிகளில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டது? அதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் மூலம் குடோனில் பணி புரிந்தவர்களையும், ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுப ட்டவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், டெல்லியில், கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சென்னை மண்டல துணை செயலாளராக இருந்தார்.

    மற்றொரு சகோதரர் மைதீன், டைரக்டர் அமீர் இயக்கத்தில், ஜாபர் சாதிக் தயாரித்து வரும், `இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இவர்கள் 3 பேரும், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் பக்கபலமாக இருந்து உள்ளனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, நேற்று `லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் களமிறக்கும் ஏஜெண்டாகவும், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    சதாவின் சொந்த ஊர் திருச்சி ஆகும். அவர் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் தங்கி இருந்தார். ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்கு, சென்னையில் இவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது. தைப்பொருட்களை மிக்சிங் செய்வது, உணவு பொருட்களுடன் கலப்பது, பேக்கிங் செய்வது ஆகிய வேலைகளையும் சதா தான் செய்து வந்துள்ளார்.

    சென்னையில் இருந்தபடியே இந்த பணிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் குடோன் ஒன்றை வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சதாவிடம் விசாரணை மேற்கொண்டால் இதில் தொடர்புடைவர்கள் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கை சதாவையும் சேர்த்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களின் பெயர்களை தெரிவித்து வருவதால், அதன் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
    • ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர்சாதிக் தி.மு.க. அயலக அணியில் பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் இருந்து நியூலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்புவதாக கூறி போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாகவும் வெளியான தகவலையடுத்து அது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப் பொருட்களை கடத்தி சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஜாபர் சாதிக் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார் என்பதை பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் முடிவில் ஜாபர்சாதிக்கின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் முடக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பான விவரங்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் திரட்டியுள்ளனர்.

    இதனை வைத்து ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் பற்றிய பட்டியலும் தயாராகி வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு ஜாபர் சாதிக் பணத்தை வாரி இறைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தையே அவர் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் வாரி வழங்கியுள்ளார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிடம் பணம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளது.

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
    • அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகர்கோவில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க.

    இந்தியாவிலே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் தான், இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர் தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.

    ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காக பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

    2019-ல் 11,418 கிலோ, 2020-ல் 15,144 கிலோ, 2021-ல் 20,431 கிலோ, 2022-ல் 28,381 கிலோ, 2023-ல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    2022-ல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    2023-ல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த சரவணன், குமார் என்ற குணசீலன், மணிகண்டன், சத்யா என்ற சத்யராஜ், சென்னை 109-வது வட்ட தலைவர் ராஜேஷ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய நாராயணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் மணிகண்டன்,

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர் ராஜா, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் லிவிங்கோ அடைக்கலராஜ்,

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சிதம்பரம் என்ற குட்டி, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர் ராஜா, மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர் காசிராஜன் ஆகிய 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது.

    அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜனதா ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதை பார்க்கட்டும்.

    போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.

    இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாபர் சாதிக்கை பிடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
    • ஜாபர் சாதிக் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    சென்னை:

    டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் இருந்து சூட்டோ பெட்டரின் என்கிற போதைப்பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு தனது உணவு பொருள் ஏற்றுமதி குடோனில் இருந்து ஜாபர் சாதிக் அனுப்பி வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருட்களை அனுப்பி வைத்திருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதை தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்தனர். ஆனால் வீட்டை பூட்டி விட்டு ஜாபர் சாதிக் தலைமறைவானார். இருப்பினும் பூட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

    ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜாபர் சாதிக்கின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதன் அடிப்படையில் ஜாபர் சாதிக்கை பிடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் தனது பண பலத்தால் ஜாபர் சாதிக் ஏராளமான நண்பர்களை சம்பாதித்து உள்ளார். தமிழ் சினிமா டைரக்டர் ஒருவருடன் கை கோர்த்துக்கொண்டு செயல்பட்ட ஜாபர் சாதிக் அவரை பங்குதாரராக ஆக்கி தொழில்களையும் செய்து வந்துள்ளார்.

    இதே போன்று தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வாங்குவதற்கும் அரசியல் நண்பர்கள் பலரும் உதவி செய்துள்ளனர். இப்படி சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ள அதிகாரிகள் அடுத்தகட்டமாக சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்க உள்ளனர். இப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்துவதன் மூலமாக ஜாபர் சாதிக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஜாபர் சாதிக் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக்குமார் ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஜாபர் சாதிக் மிகப் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் பலமுறை கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். ஜாபர் சாதிக்குடன் அவரது நண்பர்கள் பலரும் கென்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கென்யாவில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக ஜாபர் சாதிக் அங்கு சென்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் கென்யா பயணத்தின் பின்னணி குறித்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுதையான விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.
    • மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு போலீஸ்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம்பெட்டமைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.

    போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற 'வாட்ஸ் அப்' எண் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
    • குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து தமிழகம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் எடப்பாடியார் ஒரு வீடியோ பதிவை கொடுத்துள்ளார்.

    அதில் கடைசி சொட்டு போதை ஒழிப்பு வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்படும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என எடப்பாடியார் மன உறுதியோடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதைப் பொருள் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், தி.மு.க.வை எச்சரிக்கின்ற வகையிலும் எடப்பாடியார் பல்வேறு ஆதாரங்களோடு குற்றச்சாட்டை எடுத்து வைத்து இன்றைக்கு இந்த தாய் தமிழ்நாட்டை இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பி வருகின்றார்.

    போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும், ஐ.டி. துறையினருமாகிய இளைய தலைமுறைதான். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனே 2021 செப்டம்பர் 15 அன்று குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும், இந்த வழக்கிலே சென்னையை சேர்ந்த கணவன், மனைவி முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

    2021 ஆண்டு மார்ச் 18-ந்தேதி லட்சத்தீவு படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டது. 2022-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

    கடந்த பிப்ரவரி 26-ந் தேதி ரூ.2000 கோடி மதிப்பில் போதை மருந்து கடத்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் மாபியா தலைவனாக உள்ளார். அதேபோல் 29-ந்தேதி மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த தான் எடப்பாடியார் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் அணி திரளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
    • ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

    பெற்றோர்களே... இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள்.

    மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் என்று கூறி விழிப்புணர்வு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

    • தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.

    இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய 8 வங்கிக்கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×