search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists"

    • ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
    • இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டு ரசித்து செல்வார்கள்.

    ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    ஏற்காடு:

    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 3-வது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண திரண்டு வந்தனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தகால சூழ்நிலையை இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

    பூத்துக் குலுங்க மலர்களையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவங்களையும் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்காட்டில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
    • மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
    • அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.

    தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பிரங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர்நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.

    சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடுஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புறபாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

    • ஊட்டியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
    • சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் மே 10 அன்று தொடங்கியது.

    மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர்.

    இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதனபடி 126வது மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது.
    • அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என அகில இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலையிலேயே மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

    சிறு தூறலாக தொடங்கிய மழை, நேரம் செல்லச் செல்ல பலமாக பெய்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. பின்னர் அது மழையாக மாறியது. இந்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது.

    காலையிலேயே மழை பெய்ததால், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சிலர் குடை பிடித்தபடி சென்ற போதிலும், மழையின் வேகம் அதிகமாக இருந்ததால் நனைந்த நிலையிலேயே சென்றனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று இரவும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாலமோரில் 51.4 மில்லி மீட்டரும், தக்கலையில் 42 மில்லி மீட்டரும், கோழிப்போர் விளையில் 23.2 மில்லி மீட்டர் மழையும், நாகர்கோவில் 10.2, ஆணைக்கிடங்கு 12 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.41 அடியாக உள்ளது. அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால், மதகுகள் வழியாக 538 கன அடி தண்ணீரும், உபரியாக 532 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிர பரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. இதனால் இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்பகுதியில் படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

    இதற்கிடையில் மழை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றங்கரையோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார். 

    • ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழை கொட்டியது.

    மேட்டூர் பகுதியில் நேற்று பிற்பகல் கன மழை கொட்டியது. மழையால் அந்த பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் போது பண்ணவாடி- பரிசல் துறை இடையே மீன் பிடித்து கொண்டிருந்த செட்டிப்பட்டியை சேர்ந்த குப்புசாமி மனைவி சுந்தரி (37) என்பவர் உயிரிழந்தார்.

    ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர், தென்னங்குடி பாளையம் உள்பட பல பகுதிகளில்நேற்று பெய்த கன மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. வாழப்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.

    இதனால் கோதுமலை வனப்பகுதிகளில் உள்ள சிறு நீரோடைகளில் மழை நீர் வழிந்தோடி கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது .

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி கோடை விழா தொடங்க உள்ள நிலையில் நேற்று காலை முதலே ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதனால் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகுகுழாம் உள்பட பல பகுதகிளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    ஏற்காட்டில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்ப ட்டது. மதியம் 1 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இரவு 7 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதை ஓரத்தில் மழை பெய்யும் போது திடீர் அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது . இதில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குளித்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 0.1, ஏற்காடு 28.6, வாழப்பாடி 31.6, ஆனைமடுவு 10, ஆத்தூர் 6, கெங்கவல்லி 20, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 22.6, வீரகனூர் 6, நத்தக்கரை 10, சங்ககிரி 14.4, எடப்பாடி 33, மேட்டூர் 16.2, ஓமலூர் 15.6, டேனீஸ்பேட்டை 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 293.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • நீலகிரியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
    • இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது. 1 லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களை கொண்டு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

    இந்த கண்காட்சியை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சி இன்றுடன் முடிவந்தது.

    இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மே 22 வரை ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    • சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகம்.
    • பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வர தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுருளி, கும்பக் கரை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தற்காலி கமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இது போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆன்மீக தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் குவிந்து உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இன்று அதிகாலையில் வருகை தந்தனர்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடினர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, தனுஸ்கோடி, அரிச்சல் முனை, கோதரண்டராமர் கோவில், ராமர்பாதம் மற்றும் முன்னாள் குடியர வை தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அதிகளவில் வருகையை முன்னிட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
    • மழை காரணமாக சுற்றுலா தலங்கள் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை நேரத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதையடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்கனவே 50ஆயிரம் பூந்தொட்டிகளில் ஜினியா, டேலியா, சால்வியா, கார்னேசன், ஜெர்பெரா, பெர்குன்யா, டெல்பீனியம், டிராகன் உட்பட 50 வகையான மலர்கள், 112 ரகங்களில் நடவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதேபோல் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பல்வேறு வகையான ரோஜாக்களும் நடவு செய்யப்பட்டு தற்போது அைவகளும் பூத்துக் குலுங்குகிறது.

    ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களை கண்டு ரசித்து போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடி குழந்தைகள் பொழுதை கழித்தனர்.

    படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அந்த பகுதியே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. படகு சவாரி செய்ய பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    தற்போது டிசம்பர் மாதத்தில் இருப்பது போன்ற சீதோசண நிலை இருப்பதால் ஏற்காடு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. ஓட்டல், பேக்கரி, பஜ்ஜி கடைகளில் சுடச்சுட சுற்றுலா பயணிகள் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.

    மேலும் ஏற்காட்டில் விளையும் காய்கறிகளையும் சுற்றுலா பயணிகள் வாங்கி சென்றனர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அடுத்த வாரம் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    • பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
    • 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வெளியேறி தங்கு தடை இன்றி அடிவாரத்தை நோக்கி வருகிறது.

    குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. அதேபோல் பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

    இதற்கிடையே செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்ட போது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    மேற்கண்ட இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்க ளாகவும் விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு முழு வதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்ய னார் கோவில் ஆறு, செண் பகத்தோப்பு பேயனாறு மற்றும் அதனைச் சார்ந்த நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ராஜபாளையம் அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதேபோல் அந்த பகுதியில் மலைப்பகுதியில் வேலைக்குச் செல்பவர்களும் பத்திரமாக சென்று வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வருகிறார். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்க ளில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    • சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கியதும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தினமும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் 17.4 மி.மீ. மழை பெய்தது. மேலும் ஏற்காட்டில் 6.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 8 மி.மீ. மழையும் என மாவட்டம் முழுவதும் 43 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மோகனூர்-34, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-4, திருச்செங்கோடு-11.20, கலெக்டர் அலுவலகம்-3.50, கொல்லிமலை-2. என மாவட்டம் முழுவதும் 66.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே பேரிடர் மேலாண்மை துறையிடம் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பெய்யும்மழையின் அளவினை பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவித்து உள்ளார்.

    ×