என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
- இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அந்த அதிகாரி கூறியபடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட் டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார்.
இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணை நடைபெறுகிறது.
- கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
- நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
சென்னை:
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் சர்வே எடுத்து வைத்து உள்ளார். இதில் சில தொகுதிகளில் உள்கட்சி பிரச்சனை, இணக்கமான சூழல் கட்சியினரிடம் இல்லாத நிலை இருப்பதாக தலைமைக்கு தெரிய வந்து உள்ளது.
அதன் அடிப்படையில் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.
'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று பரமக்குடி, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டார்.
இந்த சந்திப்பில் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் தொகுதி பார்வையாளர், மண்டலப் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமர வைத்து பேசினார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? ஏதும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா? என்பது போன்று பல விவரங்களை கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார். நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
மொத்தம் 74 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் நேற்று பகலில் சாரல்மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் நிலவியது. மாலையில் கனமழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை முதல் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது. இதனால் இன்றும் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.
இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
- குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
- ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
அந்த அதிகாரி கூறியபடி இன்று காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது.
இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
- 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
சென்னை:
தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி, இருக்கை வசதி கொண்டவை ஆகும். வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில், பார்சல் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில், சாதாரண ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாதாரண வந்தேபாரத் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே 16 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு ஐ.சி.எப்.பில் பல்வேறு சோதனைகள் நடத்தி முடித்து, ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று மேலும் சில தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ஐ.சி.எப்.புக்கு இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை 88 ரெயில்களை தயாரித்து கொடுத்து விட்டோம். இந்த ரெயில்கள் தெற்கு ரெயில்வே உள்பட பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் இயக்கப்படுகின்றன.
மீதமுள்ள 9 வந்தே பாரத் ரெயில்கள் இந்த நிதியாண்டுக்குள் தயாரித்து வழங்க முடிவு செய்து உள்ளோம். இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரெயில்களை 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வழங்குவோம். அடுத்த நிதியாண்டில் 24 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியை ஐ.சி.எப்.பில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களைப் பொறுத்தவரை முதல்கட்டமாக 50 ரெயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை ரெயில்வே வாரியம் ஐ.சி.எப்.புக்கு கொடுத்துள்ளது. இவை 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரெயில்களை இயக்கும் இலக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.
- பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
ஆழியார் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கனடி அடி நீர் வந்து கொண்டிருந்தது. 200 கன அடி நீர் பாசத்திற்காக திறந்து விடப்படுகிறது. மழை வலுக்கும்பட்சத்தில் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 4,334 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 4 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ஆற்றுக்கு குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதேபோல கோவை குற்றாலம் மற்றும் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
- அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
- அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்கான சாத்தியக்கூறும் தென்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது மத்திய மந்திரி அமித்ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக தனது ஆதங்கத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க.வும் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
இந்த நிலையில் எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் சில ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7-ந்தேதி கூட்டி அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? விலகுவதா? என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா? என நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என கோஷமிட்டு கட்சியை வளர்த்தவர்கள். அதனால் விஜய்யுடன் இணைந்து பயணிக்க கொஞ்சம் நெருடலாக உள்ளது. இப்போதைக்கு இந்த முயற்சி இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றனர்.
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கடுமையாக கண்டித்த நீதிபதியின் உத்தரவின் பேரியிலேயே கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் வழக்கில் சிக்கி இருக்கிறார். ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
கர்நாடக மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அவர். நாமக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோதும் ஒரு பிரச்சனையில் சிக்கி அதில் இருந்து விடுபட்டு வந்தார். தற்போது ஜெயராம் பணியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார்.
- ஐகோர்ட்டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் கார ணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ந்தேதி இரவு சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்த ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்றபோது ஆதரவாளர்கள் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும், போலீசார் விசாரணைக்கு சென்றபோது ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணைக்கு செல்லும்போது கூட்டமாக ஆட்களை திரட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் தனியாகவே செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்று பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. இன்று காலை 10 மணி அளவில் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆதரவாளர்கள் யாருமின்றி தனி ஆளாகவே பூவை ஜெகன்மூர்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். காதல் விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் உங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த மாதிர யான உதவிகளை கேட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார். பூந்தமல்லி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தான் களாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று காதல் ஜோடியை வீடு புகுந்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படியே கடந்த 6-ந்தேதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் காதல் ஜோடி அங்கு இல்லாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி உள்ளனர்.
அதுவே இப்போது பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படி காதல் விவகாரத்தில் அரங்கேற்றப்பட்ட கடத்தல் பின்னணி பற்றிய முழுமையான தகவல்களையும் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் இருவரும் போனில் பேசிய உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணை என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையிலான போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் முடிவிலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ஜெகன்மூர்த்தியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் சிறுவன் கடத்தல் வழக்கில் அவரது பங்கு என்ன? எப்படி திட்டம் தீட்டப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதனை மையமாக வைத்தே முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுடர் வடிவேலு (வயது 57).
இவருக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த தவமாரியம்மாள் என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது சுடர் வடிவேலு தனது குடும்பத்துடன் மனைவி ஊரான ஊத்து மலையில் வசித்து வந்தார். அவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது இளைய மகளுக்கு பாம்பு கடித்ததால் தவமாரியம்மாள் அவரை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் சுடர் வடிவேலு வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதில் அவரது கையும் துண்டானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சுடர் வடிவேலு பஸ் நிறுத்தம் பகுதியில் கடை வைத்திருக்கும் நிலையில் அதன் எதிர் திசையில் சாலையின் மற்றொரு புறத்தில் கார்த்திக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சுடர் வடிவேலு பூக்கடையை விரிவாக்கம் செய்தார். அப்போது சாலையை ஒட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கார்த்திக் அவரிடம் சத்தம் போட்டுள்ளார். அதற்கு சுடர் வடிவேலுவும் பதிலுக்கு சத்தம் போட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடனும், சுடர் வடிவேலு தனது ஆதரவாளர்களுடனும் என இருதரப்பாக பிரிந்து 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊரை சார்ந்த தன்னையே சுடர் வடிவேலு எதிர்க்கிறார் என்று கருதிய கார்த்திக், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது கூட்டாளிகளான அதே பகுதியில் வசிக்கும் கணேசன்(30), மணி வண்ணன் (28), அருள் பாண்டியன், உதயகுமார் ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு சுடர் வடிவேலு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக இருந்த சுடர் வடிவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரோட்டோரம் நின்ற மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ப ட்டது.
தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றி வருகிறார்கள். ஊட்டி-எமரால்டு சாலையில் ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பம் மீது விழுந்தது. இதன்காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவில் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.
சேரம்பாடி-சுல்தான் பத்தேரி சாலையில் கப்பாலா பகுதியில் நள்ளிரவு சாலையோரம் இருந்த பலாமரம் சாலையின் குறுக்கே சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததது. இதில் அந்த பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
சேரங்கோடு அருகே சின்கோனா பகுதியில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற பாரதிராஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.

கூடலூர் அருகே பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது. அந்த குடியிருப்பில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
தேவாலா, பாண்டியார் டான்டீ, தொழிலாளர்கள் குடியிருப்பில் சிவன் என்பவரின் வீட்டு சுவர் இரவில் இடிந்து சேதம் அடைந்தது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, சமூக பாதுகாப்பு திட்டம் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் கவுரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.






