என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? - ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
- அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
- அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்கான சாத்தியக்கூறும் தென்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது மத்திய மந்திரி அமித்ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக தனது ஆதங்கத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க.வும் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
இந்த நிலையில் எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் சில ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7-ந்தேதி கூட்டி அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? விலகுவதா? என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா? என நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என கோஷமிட்டு கட்சியை வளர்த்தவர்கள். அதனால் விஜய்யுடன் இணைந்து பயணிக்க கொஞ்சம் நெருடலாக உள்ளது. இப்போதைக்கு இந்த முயற்சி இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றனர்.






