என் மலர்
நீங்கள் தேடியது "நீலகிரி மழை"
- மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.
கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.
ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.
மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. மேலும் மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
கனமழை எச்சரிக்கையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காரை மீட்டனர். ஊட்டி கார்டன் சாலை மழையால் சேறும், சகதியுமாக மாறியது. படகு இல்ல சாலையை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் செல்லக்கூடிய நகர பஸ்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ரெயில் நிலையம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊட்டி மார்க்கெட் பகுதிக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
காலையில் மழை இல்லாததால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் கனமழை பெய்ய தொடங்கியவுடன் பூங்காக்கள் உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அந்த பகுதிகளுக்கு சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழைக்கு எருமாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓவேலியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-
ஓவேலி-49, போர்த்திமந்து-47, பார்சன்வேலி-46, கீழ்கோத்தகிரி-45, தேவாலா-37, ஊட்டி-37.1, பந்தலூர்-30, நடுவட்டம்-25, சேரங்கோடு-22.
- கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரோட்டோரம் நின்ற மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ப ட்டது.
தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றி வருகிறார்கள். ஊட்டி-எமரால்டு சாலையில் ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பம் மீது விழுந்தது. இதன்காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவில் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.
சேரம்பாடி-சுல்தான் பத்தேரி சாலையில் கப்பாலா பகுதியில் நள்ளிரவு சாலையோரம் இருந்த பலாமரம் சாலையின் குறுக்கே சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததது. இதில் அந்த பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
சேரங்கோடு அருகே சின்கோனா பகுதியில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற பாரதிராஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.

கூடலூர் அருகே பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது. அந்த குடியிருப்பில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
தேவாலா, பாண்டியார் டான்டீ, தொழிலாளர்கள் குடியிருப்பில் சிவன் என்பவரின் வீட்டு சுவர் இரவில் இடிந்து சேதம் அடைந்தது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, சமூக பாதுகாப்பு திட்டம் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் கவுரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
- மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
- மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
- தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது.
குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொல கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.
இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி எந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதேபோல் இன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஊட்டியிலும் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர்.
- சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
- மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்கிறது. மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி , பர்லியார், கரும்பாலம், சின்னவண்டிச்சோலை, கேத்தி, காட்டேரி, சேலாஸ், வண்டிச்சோலை, எடப்பள்ளி, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை விட்டுவிட்டு மழை பெய்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மேலும் குன்னூர் நூலக கட்டிட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அங்குள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததுடன் மண்திட்டுகள் மழைநீரில் கரைந்து பஸ் நிலையத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக படிந்து பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையே குன்னூர் மார்க்கெட் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
ஓட்டுபட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல காந்திபுரம் பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டில் முன்புற தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தொடர்மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகே நள்ளிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.
குன்னூர் தாலுகாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சப்-கலெக்டர் மேற்பார்வையில் தாசில்தார் தலைமையில் 10 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குன்னூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் குழுவினர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு சென்று, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
குன்னூர் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொடர்மழை, சிறிதுநேரம் வெயில், பின்னர் நீர்ப்பனி என காலநிலை அவ்வப்போது மாறி வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மலைப்பாதைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மரங்கள் மற்றும் மண் திட்டுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகர் பிரதான சாலையில் இருந்த மே பிளவர் மரம் காற்றில் சாய்ந்து அருகில் சென்ற மின்கம்பியின் மீது விழுந்ததில் அந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
- குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையுடன் குளிரும் நிலவுகிறது. நேற்றும் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை எதிரொலியாக குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்கள் வெறிச்சோடியது.
கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்கள் கூட தெரிவதில்லை. அந்தளவுக்கு மேகமூட்டம் உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனமாக இயக்க போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நிலவிய மேகமூட்டத்தால் குன்னூர் மலைப்பாதையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில், டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடும் மேகமூட்டத்தால், குன்னூரில் இருந்து காட்டேரி கிராமத்திற்கு சென்ற பஸ், ஓட்டுனர் பிரேக் போட்டதால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
மேலும் கொலக்கம்பையில் இருந்து மானார், சுல்தானா, பால்மரா, மூப்பர் காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழங்குடியின மக்கள் வாகனங்கள் எதுவும் வராததால், தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
இன்று அதிகாலை மலைப்பாதையில் கடும் மேகமூட்டம்நிலவியது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த 3 நாட்களாக மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.






