search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    • பெண் குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது.
    • குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    பெண் குழந்தையின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தையுடன் அதிக பாசப்பிணைப்போடு வளரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிய தெளிவும், புரிதலும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ப்பில் பெரும்பாலும் தாயே அதிக பங்கு வகிக்கிறார். குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ற பொறுப்பு வகிக்கும் தந்தையின் பிம்பம் கண்டிப்பானவர் என்றே குழந்தைகளுக்கு உருவகப் படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையையும் ஈடுபடுத்தும் வழிகளை இங்கு பார்ப்போம்.

    நேரடித் தொடர்பு:

    குழந்தை பிறந்தது முதலே அதன் வளர்ப்பிலும். பராமரிப்பிலும் தந்தையின் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். டயப்பர் மாற்றுவது. குழந்தையுடன் விளையாடுவது. குழந்தைவைத் தூங்க வைப்பது ஆகிய செயல்பாடுகளில் தந்தையையும் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் மகளுக்கும், தந்தைக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்த முடியும் குழந்தை வளரும் பருவத்தில், அதன் சிறு சிறு தேலை களை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்தையி வசமே ஒப்படைப்பது அவசியமாகும்.

    நேரம் செல்விடுவது:

    வளரும் பருவத்தில் மகளுக்கு தந்தையின் அரவணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். தந்தை, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லது, வீட்டுப்பாடங்களை சொல்லிக் கொடுப்பது, இருவரும் இணைந்து தங்களுக்குப் பிடித்த உணவை சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகும். அதன்மூலம் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    பொறுப்பை ஏற்க வைப்பது:

    பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. அதை தவிர்த்து குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். குழத்தை வளர்ப்பு தொடர்பான முடிவை எடுப்பதில் தந்தையையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை, அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை தரலாம். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை தந்தையிடமே முழுமையாக ஒப்படைக்கலாம். இதன்மூலம் மகளின் நலன் மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களையும் தந்தை கவனித்து செய்ய முடியும்.

    உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். தனிப்பட்ட பல விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதில் தந்தை மகளுக்கு இடையே தயக்கம் இருக்கும். ஆனால் மகளின் உணர்வு சார்ந்த விஷயங்களில் கட்டாயம் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்கள் வளரும்போது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள் அந்த நேரத்தில் தந்தையின் வழிகாட்டல் இருந்தால், மகள் சமூக ரீதியான மாற்றங்களை எளிதாக அணுக முடியும்.

    • குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
    • உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.

    சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

     சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.

    புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    இயற்கை வழிமுறைகள்:

    1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.

    2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.

    3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.

    5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.

    6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.

    7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    • குழந்தைகள் தனித்துவத்தோடு பிறக்கிறார்கள்.
    • 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும். அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயகட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு முளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும். அவற்றை பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக...

     சதுரங்கம்:

    நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த விளையாட்டு, அன்று முதல் இன்று வரை உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்ககும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

    வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும். அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும். அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

    • 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர்.
    • தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுகிறது.

    ஹெபடைட்டிஸ் பி வைரசால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக அளவில் சுமார் 30 கோடி பேர் ஹெபடைட்டிஸ் பி வைரசால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருடம்தோறும் 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர். ஹெச்ஐவி வைரசை போலவே ஹெபடைட்டிஸ் பி வைரசும் ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியை பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்குத் தொற்று என பிறருக்குப் பரவுகிறது. எனினும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் பி தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருந்தால், குழந்தைக்கு பெரும்பாலும் பிரசவத்தின்போது நிகழும் தாய்-சேய் ரத்தக் கசிவினால், தாயின் ரத்தத்துடன் தொடர்பு ஏற்பட்டு, குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படுகிறது. தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று, கர்ப்பகாலத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு 10 சதவிகிதம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    மாறாக, கர்ப்ப காலத்தின் இறுதி 3 மாதங்களிலோ, பிரசவ காலத்துக்கு மிக அருகிலோ ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்குத் தொற்று ஏற்பட 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

    எனவேதான், கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனை பாசிடிவ் எனில், தாய்க்கு கல்லீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் 28 -30-வது வார கர்ப்பகாலத்தில் ஹெபடைட்டிஸ் பி எவ்வளவு உள்ளது போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். வைரஸ் லோடு மிக அதிகமாக இருப்பின் தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிராக சிகிச்சைத் தொடங்கப்படும்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் உடனடியாக ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோ குளோபுலின் ஊசியும் போட வேண்டும்.

    குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று பெரும்பாலும் பிரசவத்தின் போது நிகழும் தாய் - சேய் ரத்தக் கசிவின் போதுதான் ஏற்படுகிறது என்பதாலும், கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி வழியாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று 4 சதவிகிதத்துக்கு கீழாகவே ஏற்படுகிறதென்பதால், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் பிறந்தவுடன் உடனடியாக போடப்பட்டு விட்டால், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்றை 95 சதவிகிதத்துக்குக் குறைத்துவிடலாம்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலினில் ஹெபடைட்டிஸ் பி வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளதால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் போடப்பட்டுவிட்டால், தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்கு பிரசவ நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி கிருமி சென்றிருந்தால்கூட, அதை அழித்துவிடும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியை முடிந்தவரை பிறந்த 12 மணி நேரத்துக்குள்ளும், அதிகபட்சமாக 48 - 72 மணி நேரத்துக்குள்ளும் கட்டாயமாகப் போட வேண்டும்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியின் விலை ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படுகிறது.

    • பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது.
    • ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள்.

    பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.

    கர்ப்ப காலத்தில், சிசுவின் ஆற்றல் குளுக்கோசால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவுக்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்கு தடைப்படுவதால், தன் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க, தன் கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

    எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்துக்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள், தாழ்வெப்பநிலை, பிறக்கும்போது மூச்சுத் திணறல், ரத்த ஓட்டக் குறைவு மற்றும் சுவாசக்கோளாறு இருக்கும் பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அட்ரீனல் பற்றாக்குறை, ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு, குளுக்ககான் குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

     பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம்.

    நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    பிறக்கும்போது மூச்சுத்திணறல், மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    • ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும்போதே தடுப்பூசி போடப்படுகிறது.
    • தடுப்பூசி தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது.

    குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அட்டவணையில் பதிவிட்டு வழங்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசி மூலம் குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை தாக்கப்படும் நோய்களிலுருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதில் முக்கியமானது எந்தெந்த நாட்களில் தடுப்பூசிகளை போட வேண்டுமோ அதை தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது. அது போல ஒவ்வொரு தடுப்பூசியும் எதற்காக போடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    டிபிடி என்பது டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் வராமல் தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் பாக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களாக இருக்கிறது.

    டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவை காற்று, நீர், தொடுதல், இருமல், தும்மல் மற்றும் பிற முறைகள் மூலம் நபருக்கு நபர் பரவுகின்றன, அதேசமயம் டெட்டனஸ் பாக்டீரியா வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் என்றால் என்ன.?

    டிப்தீரியா தொண்டை பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

    டெட்டனஸ் ஒரு பாக்டீரியா தொற்று. இது தசைகள் வலிமிகுந்த இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தாடையனாது செயல்இழுக்கப்பட்டுவை திறக்க முடியாமல் செய்கிறது. டெட்டனஸ் உலகளவில் 10 சதவீதம் உயிரைக் கொல்கிறது. ஒழிப்பை இந்தியா நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கர்நாடகாவில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

    பெர்டுசிஸ் நோய் ஏற்பட்டால் குழந்தைகளால் சாதாரணமாக சுவாசிக்க முடியாது. தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் இருமலோடு வாந்தி பிரச்சினையையும் ஏற்படுத்தும். மேலும் இவை தொடர்ந்து நீடிக்கப்பட்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினை, உணவு சாப்பிடுவதில் பிரச்சினை போன்றவையே ஏற்படுத்தும். இவற்றை கவனிக்காம விட்டால் நுரையீரலில் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் நிமோனியா காய்ச்சல் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

    2 மாதங்கள், 4 மாதங்கள், 6 மாதங்கள், 15 முதல் 18 மாதங்கள், 4 முதல் 6 ஆண்டுகள் இந்த ஊசியானது ஐந்து அளவுகளில் வழங்கப்படுகிறது.

    பக்க விளைவுகள்:

    ஊசி போட்ட இடத்தில் சிவந்து போதல் அல்லது அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு காணப்படும்.

    காய்ச்சல், பசியின்மை, தூக்கம், எரிச்சல், வாந்தி, வலிப்பு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

    • 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன.
    • சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்த பற்கள் முளைக்கும். இருப்பினும் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

    குழந்தைக்கு பல் வளரும் வயது:

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத்தொடங்குகின்றன.

    அறிகுறிகள்:

    * வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்.

    * திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.

    * எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.

    * பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்.

    * வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல்.

    * வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல்.

    பல் வளர்ச்சி உதவும் உணவுகள்:

    பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அந்தசமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.

    ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

    குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

    எப்படி பராமரிப்பது:

    இந்த பால் பற்கள் குழந்தைக்கு முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும், இதன் காரணமாக குழந்தைக்கு கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போட்டு கடிக்கும். அந்த நேரத்தில் குழந்தைக்கு கேரட், ஆப்பிள் போன்றவற்றை கொரிக்க கொடுக்கலாம்.

    பல் முளைக்கும் நேரத்தில் குழந்தையின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஈறுகளில் வலி ஏற்பட்டு வலியின் காரணமாக காய்ச்சல் கூட ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது மிகவும் நல்லதாகும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு மெல்லிய மஸ்லின் அல்லது மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் பற்களை சுத்தம் செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு வகைகளை கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதற்கு பதிலாக அதிகளவு காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, குழந்தையின் உடல் நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தையின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி, பெரியவர்களின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இவற்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் பற்களை பராமரிக்கவும்.

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • வளரிளம் பருவம் மிக முக்கியமானது.
    • இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    பள்ளியிலிருந்து உங்கள் குழந்தையின் ஆசிரியர், உங்கள் மகள் அல்லது மகனை பற்றி புகார் கூறும் நிலை பல பெற்றோர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். இவ்வளவு நாளாக நன்றாக இருந்த உங்கள் மகன் இப்பொழுதெல்லாம் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை.

    எப்பொழுதும் மற்ற பிள்ளைகளிடமே பேசிக்கொண்டிருக்கிறான். கண்டித்தால் உடனே அழுது விடுகிறானே தவிர மாறுவது இல்லை.

    அவன் நண்பர்களிடமும் அடிக்கடி சண்டை போடுகிறான், அடித்தும் விடுகிறான் என்று குறை கூறுவார்கள். இதை கேட்ட பெற்றோர்களுக்கு தன் மகன் ஏதோ பெரிய பிரச்சினையில் இருப்பதாக நினைத்து பயந்து போவார்கள். இது பயப்பட வேண்டிய ஒன்றில்லை. ஆனால் இந்த வளரிளம் பருவம் பற்றி புரிந்து கொண்டால் இந்த காலத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

    டீன் ஏஜ், அடலசன்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் தான் குழந்தையாக இருக்கின்ற நாம் பெரியவர்களாக மாறுகின்ற காலம். இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    அசட்டு துணிச்சல் இருக்கும், நாம் யார் என நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோம், கனவுகள் அதிகம் வளரும், கூடவே குழப்பங்களும் பயமுறுத்தும், நண்பர்களோடு பயணிக்க ஆசைப்படும், பொழுதுபோக்குகளில் கவனம் செல்லும், பெற்றோர்களின் ஆசிரியர்களின் அதிகப்படியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனம் மறுக்கும், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ரகசியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

    இந்த பருவத்தை பெரியவர்களாகிய நாம் கடந்து வந்தாலும், நம் வீட்டு குழந்தைகள் இப்பருவத்தை கடக்கும் போது அவர்கள் நிலையிலிருந்து பார்க்காமல், அவர்களிடம் கண்டிப்பாக நாம் நடந்து கொள்வது சரியா? மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர்கள் கூறுவது என் பையன் அல்லது என் பெண் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாள்.

    எதை சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள். தான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறாள். மரியாதை இல்லை என்பதுதான்.

    உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த வளரிளம் பருவத்தில் குழந்தைகள் தங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களிடம் தங்களின் மன அலை சூழலை அப்படியே வெளிப்படுத்துகின்றனர். அதாவது தங்களுக்கு உள்ள குழப்பம், உலகை அறிந்து கொள்வதில்

    இருக்கின்ற ஆர்வம், கோபம் எரிச்சல் போன்றவற்றை பெற்ற தாய் தந்தையர்களை தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்? எனவே புரிந்து கொள்ளுங்கள்.

    அதேபோல் இந்த வயதில் நண்பர்களே பிரதானமாக தெரிவார்கள். அவர்கள் சொல்வதெல்லாமே சரியென்று தோன்றும். தன் நண்பன் சொன்னதை கேட்டு உங்களிடம் சண்டை போடுவார்கள். இது எதனால் என்றால் தன்னை பற்றி மதிப்பிடாமல் தன்னை அந்த நண்பன் ஏற்றுக்கொள்வதால்தான்.

    மற்றவர் தன் மேல் கொள்ளும் மதிப்பீட்டை பற்றி அதிகம் கவலைப்படும் வயது இது என்பதால் தன்னைப் போலவே இருக்கும் தன் நண்பர்கள் கூறுவதும் செய்வதும் இவர்களுக்கு தேவ வாக்காக இருக்கும்.

    உங்கள் குழந்தைகள் மேற்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இயல்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறில்லாமல் மிக அமைதியாக இருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த குழந்தை தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அல்லது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயந்து அடக்கி கொண்டுஉங்களுக்கு ஏற்றது போல் நடிக்க வேண்டும்.

    குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடாது. இந்த வயதில் ஏற்படும் எந்த பழக்கமும் பொதுவாக தொடராது. பல மாதங்களாக எதிர்மறை நடத்தை இருந்தாலோ அல்லது அது தவறான விளைவுகளுக்கு வழிவகுத்தாலோ மட்டுமே அதை நாம் மாற்ற வேண்டும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சரியாக புரிந்து கொண்டால் எப்படி சண்டித்தனம் பண்ணும் குழந்தையையும் மிக இயல்பாக வழிக்கு கொண்டு வர முடியும்.

    • குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும்.
    • குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்திச் செல்வது அவர்களை சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்.

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாகக் கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடை முறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    சமூக வளர்ச்சி

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை களைப் பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைத்தான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மன வளர்ச்சி

    பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களைப் பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பிடூ

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

    நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச்சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.

    ×