search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babysitting"

    • ஆட்டிசம் நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.
    • குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள்.

    உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப்புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டிசம் என்பது நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.

    இந்தியாவில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

    மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களுக்கு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் முழு பொறுப்பு. இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகுவது தான். மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும்.

    குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, தனியாக இருப்பதை விரும்புதல், சொற்களை திரும்ப திரும்ப பேசுதல், பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது, மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.

    நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர்களுக்கென தனி சிறப்பு பள்ளிகள் உள்ளன.

    அரசின் சார்பில் இவர்களுக்கு அனைத்து தெரபிகளும் வழங்கும் மையங்கள் மருத்துவ கல்லூரிகள் என்ற அளவில் தான் உள்ளது. அரசானது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிகிச்சைகளும் எளிமையாகும், விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    • மூளை வளர்ச்சியை தூண்ட சில விளையாட்டுகள் உதவும்.
    • விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயக்கட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு மூளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

     வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும், அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

     சதுரங்கம்:

    உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில், இது முதன்மை இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்கும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     இசை:

    சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு வகையான இசைகளை அறிமுகப்படுத்துங்கள். இசைக்கு, நினைவாற்றலை வளமாக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல, ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். இந்த பயிற்சிகூட கற்றல் திறனை மேம்படுத்தவும், படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவும். தெய்வீக பாடல்களை அவ்வப்போது வீட்டில் ஒலிக்க செய்து அதனை குழந்தை கேட்குமாறு செய்யலாம்.

     5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

    ஒன்றரை வயது தொடங்கி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பில்டிங் பிளாக் விளையாட்டுகள் சிறப்பானதாக இருக்கும். அதேபோல, செம்மையான இயக்க திறன்களை (பைன் மோட்டார் ஸ்கில்ஸ்) வளர்க்க, வண்ணம் தீட்டுதல், வண்ணங்களை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும்.

    வட்டம், சதுரம் போன்ற எல்லைகளுக்குள் வண்ணம் தீட்ட பழகுவதால், புத்திக்கூர்மை அதிகமாகும். மேலும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுத வைப்பது, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் இருவேறு வேலை கொடுப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இது அவர்களது வலது-இடது மூளைகளை தூண்டி, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற உதவும்.

    • சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

    கார் வைத்திருப்போர் குழந்தைகளுக்கான இருக்கையை தொடர்ந்து உபயோகிக்க நேர்ந்தால் இருக்கை சரிவர பொருத்தப்பட்டு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இவ்விதம் பொருத்தவில்லை எனில் குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக முதுகுத்தண்டுவடம் பாதிப்பு சிறு குழந்தையாக இருக்கும்போதே ஏற்படுவதற்கு கார்களின் இருக்கை முக்கியக் காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

    அதிலும் சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான உடல் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாக சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக காரின் இருக்கைகள் மிகவும் கடினமானவையாக உள்ளன.

    இந்த குறையை சரிசெய்ய தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இருக்கையை காரில் பொருத்தித்தர ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கன கச்சிதமாக எவ்வித மனிதத் தவறும் இன்றி பொருத்துகின்றன. இதன் மூலம் குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இந்தியாவில் உள்ள கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளை சரிவரப் பொருத்தும் நுட்பம் பெரும்பாலான நிறுவனங்களில் வரவில்லை. ஆனால், விரைவில் வரலாம். இருந்தாலும், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

     குழந்தைகளுக்கான இருக்கை என்பது கை குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக, கூடுதலாக வழங்கப்படும் இருக்கை ஆகும். கூடுதல் குஷின்களுடன் வழங்கப்படும் இந்த பிரத்யேக இருக்கை அமைப்பானது முன் இருக்கையின் பின்னால் பின் இருக்கைக்கு நேரெதிராக வழங்கப்படுகிறது.

    விபத்து ஏற்பட்டாலும், சாலை பயணம் முழுவதும் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த இருக்கைகள் சீட்பெல்ட்களை பயன்படுத்தி இருக்கையில் கட்டப்படுகின்றன. குழந்தைகள் இருக்கைகள் விற்பனைக்கு கிடைகிறது. வேண்டுபவர்கள் தங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்தி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தை இருக்கைக்கையை பொருத்தி கொள்வதற்கான கொக்கியை வழங்குகிறது.

     அதுமட்டுமின்றி, குழந்தைகள் இருக்கைகள் பொருத்தப்படும் முன்பும், அதற்கு பின்னரும் இருக்கைகளுக்கு மத்திய பகுதி எந்தவொரு காரிலும் விபத்தின்போது குறைவாகவே பாதிப்பை சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரப்படி, இத்தகைய இருக்கைகள் விபத்துகளின்போது சுமார் 54 சதவீதம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை குறைப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    • அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.
    • குழந்தைகளின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையுடன் ஒரு வலுவான, வெளிப்படையான உறவை உருவாக்குவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பதும் அவசியம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நண்பராக இருப்பது எப்படி.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    உங்கள் குழந்தை உங்களிடம் அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள். ஆனால் சில நேரங்களில் வேலை உள்ளிட்ட பல காரணங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளி உருவாகலாம்.

    ஆரம்பத்தில், உங்கள் குழந்தையின் கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி கூறும்போது முன் கூட்டியே நீ இப்படித்தான் செய்திருப்பாய் என்று கருத்து சொல்லாமல், அவர்கள் கூறுவதை கவனமாக கேளுங்கள்.

     பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிசெய்ய வேண்டும். இது குழந்தை பெற்றோர் இடையே சிறந்த தொடர்பை வளர்க்கிறது, பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை அனுமதிக்கிறது.

    அன்பாகவும் அனுதாபமாகவும் இருப்பது நேர்மையான உரையாடலை ஊக்குவிக்கும். உங்கள் குழந்தைக்கு நம்பகமானவராக இருப்பதன் மூலமும், தொடர்ந்து உதவி வழங்குவதன் மூலமும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க முயற்சியுங்கள், அவர்களுக்கு தேவைப்படும்போது உங்கள் ஆதரவையும் அக்கறையையும் தயங்காமல் காட்டுங்கள்.

    உண்மையான ஆர்வத்துடன் உங்கள் குழந்தையின் பொழுதுபோக்கு மற்றும் விருப்பமான செயல்களில் அவர்களுடன் ஈடுபடுங்கள். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்கும். தேவைப்படும் போது வழிகாட்டுதலை வழங்கும் போது அவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நம்பகமான நபராக குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதற்கும் ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தை தவறு செய்தால், உடனடியாக ஆலோசனை வழங்காமல், அவர்கள் தரப்பு கருத்தை கூறும் போது பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒன்றாக இருக்கும் போது தரமான நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சிரித்துப் பேசி, கதைகளை பகிர்வதன் மூலம் நீடித்த நினைவுகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பது என்பது அவர்களைப் பற்றி அறிந்திருப்பது, அவர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொள்வதையும் குறிக்கிறது. இது உறுதியான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்குவதுடன், இந்த நட்பை வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆதரவாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் உறவுக்கான அடித்தளத்தையும் நீங்கள் அமைக்க முடியும்.

    உங்கள் குழந்தையின் சிறு முயற்சிகளை பாராட்டுவது, அவர்களின் வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கிறது, விடாமுயற்சி மற்றும் வெற்றி மற்றும் தோல்விக்கான ஆரோக்கியமான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. குழந்தைகள், குழந்தைகள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் நடத்தைக்கு உடனடி எதிர்வினைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கான உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குங்கள். இது நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான பெற்றோர்-குழந்தை உறவுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.

    • குழந்தைகள் முதல் பருவ வயது குழந்தைகள் வரை காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர்.
    • காய்கறிகளில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    பலவித வண்ணங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பற்றிய விளம்பரங்களை நிமிடத்திற்கு ஒரு தரம் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் கைவண்ணத்தில் சிறு குழந்தைகள் முதல் பதின் பருவ குழந்தைகள் வரை சத்தான காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    சத்து இல்லாத பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் குப்பை உணவுகளை உண்டு அந்த ருசிக்கு அடிமையான பின்பு காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவை பிள்ளைகளுக்கு பிடிக்காமலேயே போய் விடுகிறது. ஆனால், அதற்காக அப்படியே அவர்களை விட்டுவிட முடியாது. உறுதியான உடலுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் அவசியம். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

     1. முதலில் பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். தனக்கு பசி இல்லை என்று சொன்ன பின்பு அவர்களை வற்புறுத்த வேண்டாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. சாப்பிடும்போது, முக்கியமாக டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டோ அல்லது செல்போனை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை முதலில் இருந்தே ஊக்கப்படுத்தக் கூடாது. தட்டை பார்த்து சாப்பிடும்போதுதான் உணவின் சுவை தெரியும்.

    3. இரண்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனி தட்டு கொடுத்து குடும்பத்தினருடன் சேர்த்து அமர வைத்து உணவு தர வேண்டும். அப்பா, அம்மா மற்றும் பெரியவர்களின் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் காய்கறிகளை பார்த்து குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.

     4. சில காய்களின் சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காது. காய்களின் வண்ணங்கள் மற்றும் அவை செய்திருக்கும் முறையை பார்த்தாலே அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். கேரட், பீட்ரூட் போன்ற இனிப்பான காய்கறிகள் மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போன்றவற்றை சுலபமாக பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான முறையில் அது இருக்க வேண்டும்.

    5. தட்டில் காய்களை பரிமாறும்போது நிறைய அளவு வைக்காமல் கொஞ்சமாக முதலில் வைக்க வேண்டும். அவற்றை சாப்பிட்டு முடித்த பின்பு அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    6. சில அம்மாக்கள், 'நீ இந்த காய் சாப்பிட்டா சாக்லேட் தருகிறேன். பாப்கார்ன் தரேன். பிஸ்கட் தரேன்' என்று அவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பார்கள். கடமைக்கு அந்த காய்கறிகளை விழுங்கி விட்டு நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு குழந்தைகள் நிற்கும். அந்த காய்களை பிடிக்காமல் போய்விடும்.

    7. சரியான நேரத்திற்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த நொறுக்கு தீனியும் குளிர்பானங்களும் கொடுக்கக் கூடாது. சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    8. காய்கறிகள் கூட்டு போன்றவற்றை பரிமாறும்போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டு விட்டு காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    9. காய்கறி வாங்க கடைகள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும்போது உடன் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களையே காய்கறிகளை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். காய்கறிகளை கண்களால் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு, விருப்பம் உருவாகலாம்.

    10. ஏழெட்டு வயது குழந்தை என்றால் அதை காய்கறிகள் நறுக்கும்போது உதவிக்கு அழைக்கலாம். மேல் தோல் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கச் சொல்லி ஊக்கம் தரலாம்.

    11. கதை சொல்வது போல அதில் உள்ள சத்துக்களை பற்றி எடுத்துச் சொல்லலாம். கேரட் சாப்பிட்டால் நல்லா கண்ணு தெரியும். உன் முகம் பளபளப்பாகும். கீரை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யும், முடி வளரும் என்பது போல சொல்லலாம்.

    12. காய்கறிகள் செய்யும்போது இரண்டு விதமான காய்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு காய் பிடிக்காவிட்டால் கூட, இன்னொன்றை சாப்பிடச் சொல்லி சொல்லலாம்.

    13. காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர காய்கறிகளை அவர்கள் உண்ணும் உணவில் சேர்த்து விட வேண்டும். பீட்ரூட், கேரட், கீரை பொரியல்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். தோசை ஊற்றும்போது பீட்ரூட் பொரியலையோ கேரட் பொரியலையோ தூவி தோசை செய்து கொடுக்கலாம். பார்க்க வண்ணமயமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

    14. வெரைட்டியாக காய்களை செய்து கொடுக்கலாம். காய்களை சூப்பில் போட்டுத் தரலாம். சப்பாத்தி ரோலில் காய்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.

    • ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
    • தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.

    சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.

     அரவைணப்பு:

    குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.

    பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.

     மசாஜ்:

    தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சூடான நீரில் குளிக்க வைத்தல்:

    குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.

    ஆடை:

    குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தடுப்பூசி:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

    தாய்ப்பால்:

    பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    டயப்பர் மாற்றுதல்:

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    ×