குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?

குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.
குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
Published on

ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 நீச்சல்

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கராத்தே

பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

 இசை

4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

பரத நாட்டியம்

பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com