search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளரிளம் பருவத்தினர்"

    • வளரிளம் பருவம் மிக முக்கியமானது.
    • இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    பள்ளியிலிருந்து உங்கள் குழந்தையின் ஆசிரியர், உங்கள் மகள் அல்லது மகனை பற்றி புகார் கூறும் நிலை பல பெற்றோர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். இவ்வளவு நாளாக நன்றாக இருந்த உங்கள் மகன் இப்பொழுதெல்லாம் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை.

    எப்பொழுதும் மற்ற பிள்ளைகளிடமே பேசிக்கொண்டிருக்கிறான். கண்டித்தால் உடனே அழுது விடுகிறானே தவிர மாறுவது இல்லை.

    அவன் நண்பர்களிடமும் அடிக்கடி சண்டை போடுகிறான், அடித்தும் விடுகிறான் என்று குறை கூறுவார்கள். இதை கேட்ட பெற்றோர்களுக்கு தன் மகன் ஏதோ பெரிய பிரச்சினையில் இருப்பதாக நினைத்து பயந்து போவார்கள். இது பயப்பட வேண்டிய ஒன்றில்லை. ஆனால் இந்த வளரிளம் பருவம் பற்றி புரிந்து கொண்டால் இந்த காலத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

    டீன் ஏஜ், அடலசன்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் தான் குழந்தையாக இருக்கின்ற நாம் பெரியவர்களாக மாறுகின்ற காலம். இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    அசட்டு துணிச்சல் இருக்கும், நாம் யார் என நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோம், கனவுகள் அதிகம் வளரும், கூடவே குழப்பங்களும் பயமுறுத்தும், நண்பர்களோடு பயணிக்க ஆசைப்படும், பொழுதுபோக்குகளில் கவனம் செல்லும், பெற்றோர்களின் ஆசிரியர்களின் அதிகப்படியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனம் மறுக்கும், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ரகசியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

    இந்த பருவத்தை பெரியவர்களாகிய நாம் கடந்து வந்தாலும், நம் வீட்டு குழந்தைகள் இப்பருவத்தை கடக்கும் போது அவர்கள் நிலையிலிருந்து பார்க்காமல், அவர்களிடம் கண்டிப்பாக நாம் நடந்து கொள்வது சரியா? மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர்கள் கூறுவது என் பையன் அல்லது என் பெண் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாள்.

    எதை சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள். தான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறாள். மரியாதை இல்லை என்பதுதான்.

    உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த வளரிளம் பருவத்தில் குழந்தைகள் தங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களிடம் தங்களின் மன அலை சூழலை அப்படியே வெளிப்படுத்துகின்றனர். அதாவது தங்களுக்கு உள்ள குழப்பம், உலகை அறிந்து கொள்வதில்

    இருக்கின்ற ஆர்வம், கோபம் எரிச்சல் போன்றவற்றை பெற்ற தாய் தந்தையர்களை தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்? எனவே புரிந்து கொள்ளுங்கள்.

    அதேபோல் இந்த வயதில் நண்பர்களே பிரதானமாக தெரிவார்கள். அவர்கள் சொல்வதெல்லாமே சரியென்று தோன்றும். தன் நண்பன் சொன்னதை கேட்டு உங்களிடம் சண்டை போடுவார்கள். இது எதனால் என்றால் தன்னை பற்றி மதிப்பிடாமல் தன்னை அந்த நண்பன் ஏற்றுக்கொள்வதால்தான்.

    மற்றவர் தன் மேல் கொள்ளும் மதிப்பீட்டை பற்றி அதிகம் கவலைப்படும் வயது இது என்பதால் தன்னைப் போலவே இருக்கும் தன் நண்பர்கள் கூறுவதும் செய்வதும் இவர்களுக்கு தேவ வாக்காக இருக்கும்.

    உங்கள் குழந்தைகள் மேற்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இயல்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறில்லாமல் மிக அமைதியாக இருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த குழந்தை தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அல்லது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயந்து அடக்கி கொண்டுஉங்களுக்கு ஏற்றது போல் நடிக்க வேண்டும்.

    குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடாது. இந்த வயதில் ஏற்படும் எந்த பழக்கமும் பொதுவாக தொடராது. பல மாதங்களாக எதிர்மறை நடத்தை இருந்தாலோ அல்லது அது தவறான விளைவுகளுக்கு வழிவகுத்தாலோ மட்டுமே அதை நாம் மாற்ற வேண்டும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சரியாக புரிந்து கொண்டால் எப்படி சண்டித்தனம் பண்ணும் குழந்தையையும் மிக இயல்பாக வழிக்கு கொண்டு வர முடியும்.

    ×