search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும்.
    • ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது.

    பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் குழந்தையின் சருமம் மஞ்சள்நிறமாக மாறுவது 'நியோநேட்டல் ஜாண்டிஸ்' (Neonatal jaundice ) எனப்படுகிறது. நிறை மாதத்தில் பிறக்கும் 60 சதவிகிதக் குழந்தைகளுக்கும், குறைமாதத்தில் பிறக்கும் 80 சதவிகிதக் குழந்தைகளுக்கும் இதற்கான அறிகுறிகள் தென்படலாம்.

    முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் என்ற மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது. இதை கல்லீரல் உருமாற்றம் செய்து மலத்துடன் சேர்த்து குடல்வழியாக உடலைவிட்டு வெளியேற்றுகிறது. மலத்துக்கு மஞ்சள் அல்லது பிளெயின் நிறத்தைத் தருவது இதுதான்.

     குழந்தை, தாயின் கருவில் இருக்கும் வரை தாயின் கல்லீரல் இந்த வேலையைச் செய்கிறது. எனவே குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரம்வரை பிலிருபின், மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை. குழந்தையின் கல்லீரல் மற்றும் குடல், திறம்பட இந்த வேலையைச் செய்ய சில நாள்கள் ஆகும்.

    குழந்தை பிறந்த 24 முதல் 72 மணி நேரத்தில் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரிக்கும். பிறகு கல்லீரலும் குடலும் நன்கு செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு வாரத்தில் இந்த அளவு தானாகக் குறைந்துவிடும். இதற்கு 'பிசியலாஜிகல் நியோநேட்டல் ஜாண்டிஸ்' என்று பெயர்.

    மாறாக மிக வேகமாக பிலிருபின் அளவு அதிகரித்து குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது அதை 'எக்ஸாஜிரேட்டடு பிசியலாஜிகல் ஜாண்டிஸ்' என்கிறோம். இந்த அளவு உடனடியாகக் குறைக்கப்படாவிட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். குழந்தைக்கு மூளை பாதிப்பும், வலிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது.

    இந்த சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதை சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

     பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலோ, அது ஒன்றிரண்டு வாரங்கள் தொடர்ந்தாலோ. வேறு காரணங்கள் கண்டறியப்பட்டாலோ, பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதித்து முழுமையான பரிசோதனையும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    • அறிவு திறன் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள் உள்ளது. உங்கள் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையின் திறனையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

     விளையாட்டுகள்:

    ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு வேடிக்கையான மற்றும் சவாலான பிரைன் கேம்கள் தேவைப்படுகின்றன. இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும். அத்துடன் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தை வழங்க வேண்டும், மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. எனவே உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பள்ளிப் பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    தூக்கம்:

    குழந்தைகளின் நினைவாற்றலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்கள் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம், மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெற்றிருப்பார்கள்.

    நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் ப்ரோசீடிங்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர்.

     பச்சை காய்கறிகள்:

    பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சிறந்த காய்கறிகளாகும். உங்கள் குழந்தை தினமும் இவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான குழம்புகளிலும் பயன்படுத்தலாம்.

     நட்ஸ்:

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

    முட்டை:

    நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது. இவை பெரும்பாலும் முட்டை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
    • தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.

    சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.

     அரவைணப்பு:

    குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.

    பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.

     மசாஜ்:

    தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சூடான நீரில் குளிக்க வைத்தல்:

    குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.

    ஆடை:

    குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தடுப்பூசி:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

    தாய்ப்பால்:

    பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    டயப்பர் மாற்றுதல்:

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    • பெண் குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது.
    • குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    பெண் குழந்தையின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தையுடன் அதிக பாசப்பிணைப்போடு வளரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிய தெளிவும், புரிதலும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ப்பில் பெரும்பாலும் தாயே அதிக பங்கு வகிக்கிறார். குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ற பொறுப்பு வகிக்கும் தந்தையின் பிம்பம் கண்டிப்பானவர் என்றே குழந்தைகளுக்கு உருவகப் படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையையும் ஈடுபடுத்தும் வழிகளை இங்கு பார்ப்போம்.

    நேரடித் தொடர்பு:

    குழந்தை பிறந்தது முதலே அதன் வளர்ப்பிலும். பராமரிப்பிலும் தந்தையின் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். டயப்பர் மாற்றுவது. குழந்தையுடன் விளையாடுவது. குழந்தைவைத் தூங்க வைப்பது ஆகிய செயல்பாடுகளில் தந்தையையும் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் மகளுக்கும், தந்தைக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்த முடியும் குழந்தை வளரும் பருவத்தில், அதன் சிறு சிறு தேலை களை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்தையி வசமே ஒப்படைப்பது அவசியமாகும்.

    நேரம் செல்விடுவது:

    வளரும் பருவத்தில் மகளுக்கு தந்தையின் அரவணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். தந்தை, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லது, வீட்டுப்பாடங்களை சொல்லிக் கொடுப்பது, இருவரும் இணைந்து தங்களுக்குப் பிடித்த உணவை சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகும். அதன்மூலம் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    பொறுப்பை ஏற்க வைப்பது:

    பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. அதை தவிர்த்து குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். குழத்தை வளர்ப்பு தொடர்பான முடிவை எடுப்பதில் தந்தையையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை, அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை தரலாம். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை தந்தையிடமே முழுமையாக ஒப்படைக்கலாம். இதன்மூலம் மகளின் நலன் மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களையும் தந்தை கவனித்து செய்ய முடியும்.

    உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். தனிப்பட்ட பல விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதில் தந்தை மகளுக்கு இடையே தயக்கம் இருக்கும். ஆனால் மகளின் உணர்வு சார்ந்த விஷயங்களில் கட்டாயம் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்கள் வளரும்போது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள் அந்த நேரத்தில் தந்தையின் வழிகாட்டல் இருந்தால், மகள் சமூக ரீதியான மாற்றங்களை எளிதாக அணுக முடியும்.

    • குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
    • உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.

    சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

     சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.

    புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    இயற்கை வழிமுறைகள்:

    1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.

    2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.

    3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.

    5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.

    6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.

    7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    • குழந்தைகள் தனித்துவத்தோடு பிறக்கிறார்கள்.
    • 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும். அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயகட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு முளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும். அவற்றை பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக...

     சதுரங்கம்:

    நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த விளையாட்டு, அன்று முதல் இன்று வரை உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்ககும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

    வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும். அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும். அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

    • 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர்.
    • தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுகிறது.

    ஹெபடைட்டிஸ் பி வைரசால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக அளவில் சுமார் 30 கோடி பேர் ஹெபடைட்டிஸ் பி வைரசால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருடம்தோறும் 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர். ஹெச்ஐவி வைரசை போலவே ஹெபடைட்டிஸ் பி வைரசும் ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியை பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்குத் தொற்று என பிறருக்குப் பரவுகிறது. எனினும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் பி தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருந்தால், குழந்தைக்கு பெரும்பாலும் பிரசவத்தின்போது நிகழும் தாய்-சேய் ரத்தக் கசிவினால், தாயின் ரத்தத்துடன் தொடர்பு ஏற்பட்டு, குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படுகிறது. தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று, கர்ப்பகாலத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு 10 சதவிகிதம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    மாறாக, கர்ப்ப காலத்தின் இறுதி 3 மாதங்களிலோ, பிரசவ காலத்துக்கு மிக அருகிலோ ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்குத் தொற்று ஏற்பட 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

    எனவேதான், கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனை பாசிடிவ் எனில், தாய்க்கு கல்லீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் 28 -30-வது வார கர்ப்பகாலத்தில் ஹெபடைட்டிஸ் பி எவ்வளவு உள்ளது போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். வைரஸ் லோடு மிக அதிகமாக இருப்பின் தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிராக சிகிச்சைத் தொடங்கப்படும்.

    தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் உடனடியாக ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோ குளோபுலின் ஊசியும் போட வேண்டும்.

    குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று பெரும்பாலும் பிரசவத்தின் போது நிகழும் தாய் - சேய் ரத்தக் கசிவின் போதுதான் ஏற்படுகிறது என்பதாலும், கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி வழியாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று 4 சதவிகிதத்துக்கு கீழாகவே ஏற்படுகிறதென்பதால், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் பிறந்தவுடன் உடனடியாக போடப்பட்டு விட்டால், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்றை 95 சதவிகிதத்துக்குக் குறைத்துவிடலாம்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலினில் ஹெபடைட்டிஸ் பி வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளதால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் போடப்பட்டுவிட்டால், தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்கு பிரசவ நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி கிருமி சென்றிருந்தால்கூட, அதை அழித்துவிடும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியை முடிந்தவரை பிறந்த 12 மணி நேரத்துக்குள்ளும், அதிகபட்சமாக 48 - 72 மணி நேரத்துக்குள்ளும் கட்டாயமாகப் போட வேண்டும்.

    ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியின் விலை ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படுகிறது.

    • பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது.
    • ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள்.

    பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.

    கர்ப்ப காலத்தில், சிசுவின் ஆற்றல் குளுக்கோசால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவுக்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்கு தடைப்படுவதால், தன் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க, தன் கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

    எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்துக்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள், தாழ்வெப்பநிலை, பிறக்கும்போது மூச்சுத் திணறல், ரத்த ஓட்டக் குறைவு மற்றும் சுவாசக்கோளாறு இருக்கும் பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அட்ரீனல் பற்றாக்குறை, ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு, குளுக்ககான் குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

     பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம்.

    நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    பிறக்கும்போது மூச்சுத்திணறல், மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    ×