search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு
    X

    குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு

    • குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும்.
    • குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்திச் செல்வது அவர்களை சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்.

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாகக் கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடை முறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    சமூக வளர்ச்சி

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை களைப் பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைத்தான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மன வளர்ச்சி

    பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களைப் பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பிடூ

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

    நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச்சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.

    Next Story
    ×