search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    • கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.
    • வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன.

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன..

    இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.

    நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.

    இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன" என்றார்.

    • நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
    • கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.

    நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது.

    இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.

    நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.

    கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

    • கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு.

    இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     


    "புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.

    கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
    • ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஜெ.என்-1 என்ற வகை கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தபோதிலும் தினமும் ஏராளமானோருக்கு தொற்று பாதித்து வருவதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,634 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதே நேரத்தில் கேரளாவில் தற்போதைய கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்நிலையில் ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

    கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
    • உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது

    கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.

    கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.

    மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

    உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

    சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:

    புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை, தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வானதி சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ‘பி.டபிள்யூ. என். 0001’ என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.
    • தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது.

    புதுடெல்லி:

    கொரோனா கால கட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அவர்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

    இந்நிலையில் 81.5 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பி.டபிள்யூ. என். 0001' என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா சோதனையின் போது சேகரித்த தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அந்த ஹேக்கர் கூறும்போது, திருடப்பட்ட தகவல்களில் ஆதார், பாஸ்போர்ட் விவரங்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் பெயர்கள், போன் எண்கள், தற்காலிக, நிரந்தர முகவரிகள் உள்ளன. கொரோனா சோதனையின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சேகரிக்கப்பட்ட தகவலில் இருந்து இந்த தரவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது. இந்திய குடிமகன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல் உள்பட 81.5 கோடி பதிவுகள் கிடைக்கும் என்று ஹேக்கர் விளம்பரப்படுத்தி உள்ளார்.

    இதில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு லட்சம் கோப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கொரோனா சோதனை தகவல்கள், தேசிய தகவல் மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுகாதார அமைச்சகம் போன்ற பல்வேறு அரசாங்க அமைப்புகளில் உள்ளன. இதனால் இந்த தகவல்கள் எங்கிருந்து கசிந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    • கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.
    • ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.

    "குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்," என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

     

    நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத துவக்கத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.

    • முதலில் அக்டோபர் முதல் வாரத்தில் இப்பணி தொடங்குவதாக இருந்தது
    • தகுதியுள்ளவர்கள் தாங்களாக முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்

    இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இன்றே துவங்கி விட்டது. இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது.

    "முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்" என பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ஃப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    "கொரோனா வைரஸ் BA.2.86 மாறுபாட்டின் பரவும் தன்மை, தாக்கும் தீவிரம் மற்றும் மருந்துகளுக்கு எதிராக போரிடும் சக்தி ஆகியவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததால், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது," என பிரிட்டனின் தேசிய சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ரேணு பிந்த்ரா கூறியுள்ளார்.

    "வைரஸ்-இன் புது மாறுபாடு குறித்து பரவும் கவலை கொள்ள செய்யும் தகவல்களால், தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தாங்களாகவே அதனை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என தேசிய சுகாதார சேவை அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குனர் டாக்டர். ஸ்டீவ் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

    "வயதானவர்களும், நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க தடுப்பூசி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தகுதியுள்ள தங்களின் அன்புக்குரியவர்களையும் செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்" என பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு சக்தித்துறை தலைவர் டாக்டர். மேரி ராம்சே கூறினார்.

    இரு தினங்களுக்கு முன் இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்த 38 பேரில் 33 பேருக்கு இந்த புது தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இருப்பினும், இதுவரை இப்புது தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    கொரோனா பெருந்தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டதற்காக உலக சுகாதார அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    • புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
    • கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும்.

    சென்னை:

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

    நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில் புதிய வகை கொரோனா தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா குறித்து எடுக்கப்பட்டு உள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கொரோனா பாதிப்பு கூட 1,2 கேஸ்கள்தான் வருகிறது.

    அனைத்து மாவட்டத்திலும் ஏதாவது மாறுபாடான கேஸ் வருகிறதா என்பதை கண்காணித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தீவிரமான தாக்கம் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை இதுபற்றி வேறு எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதில் எதுவும் மாற்றம் உள்ளதா? என ஆய்வு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அதேவேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

    இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர்.

    இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×