search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radha Ravi"

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நயன்தாரா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். #Nayanthara #RadhaRavi
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

    இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



    தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு  முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும். 

    சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

    எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Nayanthara #RadhaRavi #NadigarSangam #KolaiyuthirKaalam

    நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KolaiyuthirKaalam #Nayanthara
    ராதாரவியின் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்கள்:-

    நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘சமீபத்துல நீங்கள் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்கள் பெயரை ‘ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது”.


    ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ‘இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வீடியோவை முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்’’.


    ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

    மீ டூ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப்போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் வி‌ஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.


    திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

    கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

    ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’.

    இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் வி‌ஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி.

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.


    ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ், ராதாரவியை இனிமேல் தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

    ‘கொலையுதிர் காலம்‘ படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ‘மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். அவர் அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை.

    இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார். #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi

    நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    சென்னை:

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குவதாகவும், கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்தமானவராக இருந்தால் நாட்டுக்கு நன்மை என்றும் ராதாரவி கூறியுள்ளார். #RadhaRavi #KamalHaasan
    மதுரை:

    நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இது குறித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது ‘நான் அரசியலை பற்றி மட்டும்தான் பதில் அளிப்பேன்’ என பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த அவர் ‘ரஜினி நல்ல மனிதர். ஏற்கனவே கூறியது போல், ‘லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும்.

    கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் நல்ல நடிகர். நடித்துக்கொண்டே இருந்து இருக்கலாம்.

    நடிப்பில் முடியாததால், வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார். தி.மு.க.,வை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’.

    இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #KamalHaasan
    ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக் - மீரா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவதார வேட்டை' படத்தின் விமர்சனம். #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.



    கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.



    உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

    மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `அவதார வேட்டை' கோட்டைவிட்டது. #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak #RadhaRavi #MeeraNayar #Sona

    டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, ரூ.1.5 லட்சம் கட்டி, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தான் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்ற யூனியன் நிர்வாகிகளின் அழைப்பை சின்மயி நிராகரித்துள்ளார். #Chinmayi #DubbingUnion
    தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    சின்மயியின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனின் துணைத்தலைவர் வீரமணி, பொருளாளர் ராஜ்கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

    ‘டப்பிங் கலைஞர்களிடமிருந்து 10 சதவீத சம்பள பணத்தை பெற்றுக் கொள்வது உண்மைதான். ஆனால் இதில் இன்சார்ஜ் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 சதவீதமும் மீதம்உள்ள 5 சதவீதம் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது. 10 சதவீத பணத்தையும் முழுமையாக சங்க நிர்வாகமே வைத்துக் கொள்கிறது என்று சின்மயி கூறுவது கண்டனத்திற்குரியது.

    நடிகர் ராதாரவி இல்லை என்றால் இந்த சங்கம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்காது. டப்பிங் பேசினால் மட்டுமே பணம் என்று இருந்த நிலையில், டப்பிங் பேசினாலும், பேசவில்லை என்றாலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தாலே ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலைமையை கொண்டு வந்தது ராதாரவி தான். ஆனால் சின்மயி, ராதாரவி பற்றி பேசுவது தவறானது.



    இந்த சங்கத்தில் இருந்த தேர்தல் அதிகாரிதான் 90 ரூபாய் சந்தா கட்டாததால் சின்மயியை நீக்கினார். ராதாரவி இல்லை.

    சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்று விளக்கம் அளித்தனர்.

    இந்த செய்தியை மேற்கோள்காட்டி சின்மயி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ‘தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது.



    ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன்.

    யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

    டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி, அடுத்ததாக சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டி போட இருக்கிறார். #RadhaRavi
    தமிழ் சினிமாவில் டப்பிங் யூனியன் தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் அடுத்து வர இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போடியிட இருப்பதாக செய்தி வருகிறது.

    டி.வி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு உறுப்பினர்களாகப் பதிவு செய்தால் மட்டுமே தொடர்களில் நடிக்கமுடியும்.

    அவர்கள் வாய்ப்புகள் கிடைத்த பின் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள வேண்டும். சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது.

    நடிகர் போஸ் வெங்கட் செயலாளராக உள்ள தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து டிசம்பர் 25-ந்தேதி, இப்போதைய நிர்வாகத்தின் கடைசிப் பொதுக்குழு கூட இருக்கிறது.

    அதில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நாளை அறிவிக்க உள்ளார்கள். 2019 ஜனவரி 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். 
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கனா ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரியோ நாயகனாக நடிக்கிறார். #Sivakarthikeyan #RioRaj
    சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார்.

    படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். 



    இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.

    விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் ரியோ துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakarthikeyan #RioRaj

    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    சர்கார் படத்தை மிகப்பெரிய வெற்றி பெறவைத்த அதிமுக-வுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ராதாரவி, நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுவதாக கூறினார். #Sarkar #RadhaRavi #Vijay
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது,

    சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த காட்சிகள் உண்மையாகிவிட்டது. எதிர்ப்பு வந்ததால் தான் சர்கார் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனவே சர்காரை வெற்றி பெற செய்த அ.தி.மு.க.வுக்கு நன்றி என்று கூறிக்கொள்கிறேன்.

    அந்த காட்சிகளை தி.மு.க எதிர்க்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை. அவரது பெயர் ஜெயலலிதா என்பது தான் எனக்கு தெரியும். திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரைப்படத்தை பார்ப்பார்கள். இதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் வந்த கட்சி அ.தி.மு.க. என்பதால், நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு அக்கட்சியினர் பயப்படுகின்றனர். ஆனால் தி.மு.க.வுக்கு யாரையும் கண்டு பயமில்லை. ரஜினி, கமல், விஜய், என யாராக இருப்பினும் அரசியலுக்கு வரலாம். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும்.

    கடந்த 50 ஆண்டு கால பாரம்பரியமும், உண்மையான தொண்டர்களை கொண்ட கட்சியாகவும் தி.மு.க திகழ்கிறது. நாங்கள் நடிகர் சங்கத்தில் இருந்தபோது, 6 நடிகைகள் மீது விபசார வழக்கு போடப்பட்டது. அந்த நடிகைகளுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளித்து அந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.



    ஆனால் தற்போது மீ டூ விவகாரத்தில் நடிகர் சங்கம் ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு என யாராவது ஒரு தரப்பினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது அவர்களை சமரசம் செய்து வைக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நடிகர் சங்க தலைவர் நாசர் போன்றவர்கள் சங்க நிர்வாகியாக இல்லாமல் வெறும் நடிகராகவே இருந்து விட்டு செல்லலாம்.

    ஆளுங்கட்சியின் ஆட்சி காலம் இன்னும் 2½ ஆண்டு காலம் மீதமுள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. தற்போது நாடகங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது நான் ஒரு நாடகத்தில் இ.பி.கோ. கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.

    டிராபிக் ராமசாமி போன்ற பொதுநல தொண்டன் கதாபாத்திரத்தினை கொண்ட நகைச்சுவை மற்றும் கருத்து நிறைந்த நாடகத்தை காண அதிக ரசிகர்கள் வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி காரணமாக நாடகக்கலை நலிவுறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sarkar #RadhaRavi #Vijay

    ‘மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். #MeToo #RadhaRavi #ChinmayiSripada
    வைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பத்திரிகையாளர்கள் காலை பிடித்து கேட்கிறேன். எது உண்மையோ அதை மட்டும் எழுதுங்கள். நாம் எல்லோரும் ஒண்ணு இல்லையா?. யாராவது புகார் கொடுத்தால் அதைப் பற்றி விசாரித்து பதிவு செய்யுங்கள்.

    சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது. எங்க டப்பிங் யூனியன்லகூட அந்தப் பொண்ணு உறுப்பினராக இருக்கு.

    சின்மயி இப்போது பாடுறதை விட்டுட்டு பேசுறதுக்கு ஆரம்பிச்சிருச்சு போல. இது இப்படியே வளர்ந்தால் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும். சம்மதம் இல்லாமல் எந்த குற்றமும் நடப்பது இல்லை. ‘மீ டூ’ வை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் ‘பிளாக்மெயில்’ செய்வார்கள்.



    இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அர்ஜூனும் நல்ல பையன்தான். அவர் மேல போய் இப்படி சொல்லியிருக்காங்க. நான் கெட்டவார்த்தை பேசுறேன்னு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. நான் அதற்காக வெற்றிமாறனை பாராட்டுகிறேன். அந்த படமே வடசென்னை மக்களை பற்றிய படம். அந்த மக்கள் பேசுவதை அப்படியே தான் காட்ட முடியும்.

    எப்போது நடந்தது என்று கேட்டால் சின்மயிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் காணாமல் போனது என்பதை ஒரு காரணமாக சொல்கிறார். இன்று இருக்கும் டெக்னாலஜிக்கு ஒரு சில நிமிடங்களிலேயே நாம் எந்த நாட்டுக்கு எப்போது போனோம் என்பதை கூற முடியும்.

    சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு சங்கத்தில் பொறுப்புகளில் இருக்கும் விஷால் முன்வர வெண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சினிமா என்றாலே இப்படித் தான் என்று ஆகிவிடும். மீடூவை வைத்து பிளாக் மெயில் பண்ண தொடங்கிவிடுவார்கள். இப்போதே தொடங்கி விட்டார்கள். உடனடி நடவடிக்கை வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #MeToo #TimesUp #RadhaRavi #ChinmayiSripada

    தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் விமர்சனம். #AanDevathaiReview #Samuthirakani
    சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது.

    இதையடுத்து சமுத்திரக்கனி தனது வேலையை விட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ரம்யா தனது பணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சொந்தமாக வீடு, கார் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல செல்ல, தனது நட்பு வட்டாரத்துடன் பார்ட்டிக்கு செல்ல தொடங்குகிறார்.



    ஒருநாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுதி ஒன்றில் தங்குகிறார். அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள். 

    கடைசியில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? அவர்களது குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரக்கனிக்கு என்ன வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுகிறார். மனைவியிடம் பொறுமை, குழந்தைகளிடம் கனிவு என்று வழக்கம் போலவே பொறுப்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறார். ரம்யா பாண்டியனுக்கு சற்று நெகட்டிவ் கலந்த வேடம். சராசரி பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்.

    சுஜா வருணி, அபிஷேக், ராதாரவி, காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் அனைவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா, கவின் இருவரும் சிறப்பான பங்களிப்பு தந்திருக்கிறார்கள். 



    இன்றைய இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமிரா. தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் சண்டையால் சிலர் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும். ஆடம்பரத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்க்கையையே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்ல வருகிறார் இயக்குநர்.

    திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் எளிதில் காட்சிகளை கணிக்க முடிவது பலவீனம். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்ற சுவாரசியமான ஒருவரிக் கதைக்கு இன்னும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இருந்தால் ஆண் தேவதையை இன்னும் கொண்டாடி இருக்கலாம். குடும்ப அமைப்பின் அவசியத்தை உணர்த்தியதற்காக ஆண் தேவதையை பாராட்டலாம்.

    ஜிப்ரானின் இசையும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஆண் தேவதை' தேவை. #AanDevathaiReview #Samuthirakani

    ×