search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும்.
    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு பொதுச் செயலாளர் அருணாசலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ, கவிஞர் சினேகன், ஸ்ரீதர், முரளி அப்பாஸ், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் சினேகா மோகன் தாஸ், மயில்சாமி, ஜான்சன், மயில்வாகனன், மண்டல செயலாளர்கள் ஸ்ரீபதி, கோபிநாத், அழகர் பிரேம், ரங்கநாதன், அருண், நாகராஜ், வைத்தீஸ்வரன், அனுஷா, மூகாம்பிகை, ராதா, காந்தி கண்ணதாசன், அர்ஜுனர், ராகேஷ், சைப், பிரதீப் குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி அமைத்து நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும். செயல்படாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக துணை தலைவர் மவுரியா கூறும்போது, "பாராளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரசார வியூகம் மற்றும் தலைவரின் சுற்றுப் பயணம் ஆகியவை பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
    • தமிழகம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-


     பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றியும் இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும்.
    • அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும்.

    அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் கமல்ஹாசன் இருந்து வருகிறார். இது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.

    • ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
    • 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, 3 தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தென் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 பாராளுமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த 3 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார்கள்.

    மதுரை, கோவை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ள நிலையில் இந்த கட்சிகளுக்கும் அவர்கள் கேட்கும் சீட்டை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.

    தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே கூட்டணி கட்சிகள் கேட்பதால் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவை அறிவிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. அப்படி ஒதுக்கப்படும் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.

    • எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.
    • இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.

    சென்னை:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் யாரும் எதிர்பாராத வகையில் பெருமழை பெய்துள்ளது.
    • இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இப்போது வந்தது பேரிடர்.

    சென்னை:

    சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் யாரும் எதிர்பாராத வகையில் பெருமழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் 56 செ.மீ. அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதுபோன்ற இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இப்படிப்பட்ட நேரங்களில் நமது தேவைகளையும், தேவையான முன்னேற்பாடுகளையும் நாமே செய்து கொள்ள வேண்டும்.

    அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு, களத்தில் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இப்போது வந்தது பேரிடர்

    அரசை அப்புறமாக விமர்சிக்கலாம். இதுபோன்ற பாதிப்பு இனி ஏற்படாது என்று யாராலும், எந்த அரசியல்வாதியாலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் செய்ய வேண்டியதை மேற்கொள்ள வேண்டும்.

    வேளச்சேரியில் பெரிய சமையல் கூடத்தை நிறுவி அதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக 5,000 பேருக்கான நிவாரண உதவிகளை மக்கள் நீதி மய்யம் செய்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் மவுரியா, பொதுச்செயலாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், கவிஞர் சினேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
    • மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.

    கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத்தக்கது.

    17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

    தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின்.

    தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நான்கு சதவீத வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த கட்சி பெற்றது.

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறார். இதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினருக்கு பல்வேறு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

    கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று தனது பிறந்தநாளில் அவர் கட்சியினர் மத்தியில் பேசினார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார். இப்படி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கமல்ஹாசனுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் கமல்ஹாசன் உடன் கைகோர்ப்பது தி.மு.க. கூட்டணிக்கு வலுசேர்க்குமா என்பதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு பலன் அளிக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

     அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் அவருக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் இரண்டு இடங்களை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வேகம் காட்டி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகளும் கிடைக்கும்பட்சத்தில் அது எங்களது கூட்டணிக்கு பலமாகவே இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சங்ககிரி:

    கோவை தெற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக கோவை புளியகுளத்தைச் சேர்ந்த வட்டச் செயலாளர் வாசுதேவன்(47) உள்பட 20 பேர் நேற்று இரவு கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி சொகுசு பஸ்சில் சென்றனர்.

    பஸ்சை கோவை துடியலூரைச் சேர்ந்த டிரைவர் சங்கர் (40) ஓட்டிச் சென்றார். இரவு 1:45 மணிக்கு சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டாரஸ் லாரியின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பகுதி முழுவதும் சிதைந்து சேதம் அடைந்தது. விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவை புளியகுளத்தை சேர்ந்த மல்லேஸ்வரி (23), வெங்கடேஷ் (26), மாரிமுத்து (44), பவன்சாய் (44), தீனதயாளன் (45), ஜோசி (48), பிரகாஷ் (43), சுரேந்திரபாபு (35), ஐயப்பன் (48), வெங்கட்ராஜ் (49), ஜான்சன் (52), வாசுதேவன் (46), சசிகுமார் (46), சீனிவாசன் (48), ராஜ்குமார் (47) ஆகிய 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் அவசரக்கால மருத்துவநுட்பர் ராமச்சந்திரன், பைலட் சரவணகுமார் ஆகியோர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இடுபாட்டில் சிக்கி இருந்த பஸ் டிரைவர் சங்கரை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் எந்திரத்தை 'கமல் பண்பாட்டு' மையத்தின் சார்பில் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    இன்று முக்கியமான ஒரு நல்ல நாள்; நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா; நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

    ராஜ்கமல் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக இந்த எந்திரத்தை வைத்து ஆரோக்கியமாக குடிநீர் அருந்தி வருகிறேன். அதேபோன்ற ஒரு எந்திரத்தை இந்த மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறோம்.

    காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். மாசு இல்லாத ஒரு குடிநீரை இந்த எந்திரம் மூலம் மக்கள் பெற முடியும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    பின்னர் கமல்ஹாசனிடம் தி.மு.க. கூட்டணிக்கான அடித்தளம் போல இந்த நிகழ்ச்சி காணப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "அரசியல் கடந்து மனித நேயம் எங்களை இணைத்துள்ளது. எல்லோருக்கும் தனிகட்சி உள்ளது. அவர்களுக்கென விசுவாசம் உள்ளது. ஆனால் மனிதநேயம் முக்கியம் அதுதான் இணைத்துள்ளது. இந்த மனிதநேயத்துடன் இது தொடரும். இங்கு அனைவரும் அரசியல் கடந்து மனிதம் சார்ந்து வந்துள்ளோம்" என்றார்.

    • பிறந்தநாள் விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும் நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.
    • தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா சென்னையில் வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம்மவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான வருகிற 7-ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும் நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

    ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பல கோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், பாராளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×