search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma Subramanian"

    • மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்.
    • தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகரில் கொசுத்தொல்லை இல்லாத வண்ணம் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்-மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும்.

    இவர்கள் உணவு மற்றும் குளிர்பானங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 56 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

    தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்களுடன் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 500 ஆஸ்பத்திரிகள் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

    இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை மாவட்ட சுகாதார அமைப்பு என்கின்ற அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைகளை தேர்ந்தெடுத்து இருபுறமும் மரங்களை நட்டு மக்கள் தினந்தோறும் நடை பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.

    60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது.

    5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.

    தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
    • புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டில் மதுரவாயல், மதுரவாயல் வடக்கு பகுதி 147-வது வட்டம் புஷ்பா கார்டன் பகுதியில் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

    வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது-பொருளே, புகழே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பொருளே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், அருள்பிரகாஷ் ஆகியோரும், புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம். எல். ஏ., மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 11-வது மண்டல குழு தலை வருமான நொளம்பூர் வே. ராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆலப் பாக்கம் கு.சண்முகம், 147-வது வட்ட செயலாளர் எஸ்.ஜி.மாதவன், பகுதி நிர்வா கிகள் பாலாஜி, செந்தில் சுரேஷ், உதயகுமார், அண்ணாதாசன், சசிகுமார், ஸ்டாலின், ஆலன், ரூபன், மதியழகன், கவுன்சிலர்கள் மாலினி, ரமணி மாதவன், பாரதி அண்ணா வேலன், செல்வி ரமேஷ், ஹேமலதா கணபதி, நிர்வாகிகள் ரமேஷ் ராஜ், ரமேஷ், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன் வரவேற்றுப் பேசினார்.
    • வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு. க. சார்பில் செம்மஞ்சேரி 200-வது வட்ட செயலாளர் இரா. நாகராஜ் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவிந்த ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன், வரவேற்றுப் பேசினார்.

    பகுதி துணை செயலாளர் வி.தனசேகரன், பொருளாளர் பி. ரவி, மாவட்ட பிரதிநிதி ஹரி, சங்கர், செந்தில்குமார், புஷ்பா, ராஜேந்திரன், ஆர். தேவேந்திரன், சேகர், எஸ். தேவேந்திரன், முனுசாமி, ராஜி, அருண், பிரகாஷ், பிரவீன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், மா. சுப்பிரமணியன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் மு. மனோகரன், 14 -வது மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடேசன், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே. ஏழுமலை, தா. பஷீர், ஆ. அரிகிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சி. பிரதீப், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் என். குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    • இதுவரை 14000 ரூபாய் தற்காலிக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும்.
    • தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை

    சென்னை:

    சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

    அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த நிலையில் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில், ஒரு மாற்று யோசனையின்படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் டிபிஎச்இ மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலி பணி இடங்களை இவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என அறிவுத்தினார். அந்த வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதுவரை 14000 ரூபாய் தற்காலிக பணிநியமனத்திற்காக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும், அது மட்டுமல்லாது ஏற்கனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம் அவர்களில் பெரும் பகுதியானவர்கள் தலைமை மருத்துவமனைகளில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள்கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்தார்கள். தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டு, மிகப்பெரிய அளவு பணி பாதுகாப்பு இருக்கும் என்கிற அளவில் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போல் DMS ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். தொடச்சியாக இரண்டு நாட்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள். இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு தனித்தனியே கொடுக்கப்பட்ட வேலைக்குரிய ஆணையையும் எங்களிடம் காட்டினார்கள். அதிலே மிக தெளிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தற்காலிகமாக பணி ஆணை தரப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் நானும் துறையின் செயலாளரும் என்எச்எம் இயக்குனர், திட்ட இயக்குனர், டிபிஎச், டிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் அவர்களிடம் பேசினோம். அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தின் பணி நியமனங்கள் வேண்டாம். இங்கு டிஎம்எஸ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி அது, இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அது முடியாது என்ற வகையில் அலுவலர்கள் எடுத்து சொன்னார்கள். அவர்களும் பிடிவாதமாக மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக வேண்டாம் என்று சொன்னார்கள்.

    அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதில் இருக்கிற சட்டப்பூர்வான விஷயங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
    • நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரச்செய்வது என்கிற வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    நீட் விலக்குக்கான அந்த கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்து. அப்போது குடியரசு தலைவர் மூலம், அவரது அலுவலகத்தின்மூலம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு விளக்கங்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். அது சம்பந்தமாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் விளக்கங்கள் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை தெரிவித்தோம். அதை அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டு, தங்களால் முடிந்ததை பரிசீலிப்போம் என தெரிவித்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல், சுற்றுச்சுவருடன் மட்டுமே இருக்கும் அந்த பணியை விரைந்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    எங்கள் கோரிக்கையை அமைச்சர் கேட்டார்.  எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1400 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது ரூ.1900 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கான கன்சல்டன்ட் நியமிக்கவேண்டும், வரைபடம் தயாரிக்க வேண்டும். அதற்காக ஒப்பப்புள்ளி கோரப்பட்டுள்ளது, விரைவில் அந்த பணியை தொடங்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

    கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது மதுரையில் பணிகள் தொடங்கியபிறகு, கோவையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என அமைச்சர் கூறினார்.

    மேலும், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கவிருப்பதாகவும், அதற்குப் பிறகு நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

    30 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இது நல்ல யோசனை, கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய அமைச்சர், இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் கலந்து பேசி முடிவடுத்து சொல்கிறாம் என சொன்னார்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • யோகி பாபு தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்.
    • இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


    அதில், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக கட்டணத்தை ரத்து செய்கிறோம்.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் அதிகமாக வருகின்ற திருத்தலங்களில் அவர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட ஏதுவாக கோவில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றைக்கு பார்த்தசாரதி கோவிலில் 2.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தோம்.

    அந்த வகையில் கோவிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் மாட வீதியில் 50 மீட்டர் தூரம் நடந்து வந்து இறை தரிசனம் செய்வதற்கும், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதியோர் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர்கள் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வரிசை முறையினை நீட்டித்து எவ்வித சச்சரவுமின்றி பக்தர்கள் அதிக அளவிற்கு விரைவில் தரிசனம் செய்திட திட்டமிட்டு இருக்கின்றோம்.

    வாகனத்தில் வருபவர்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயகன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் ரோடு, சுங்குவார் தெரு ஆகிய இடங்களில் பார்க்கிங் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நோக்கமிருந்தாலும், கோவில் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை ரூ.100 ஆக குறைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

    சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக ரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைசார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் எந்தெந்த கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த கோவிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சி.எம்.டி.ஏ.வை பொறுத்த அளவில் கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் முழுமையாக தவறுகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற நடைமுறையில் இன்னும் என்னென்னல்லாம் மாற்றங்களை செய்தால் விரைவாக பணிகள் நடைபெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆலோசித்து அம்மாற்றங்களை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், செயல் அலுவலர் கவெனிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பி.ஏ.4, பி.ஏ.5 தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
    • பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    நாவலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    தமிழகத்தில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ அல்லது தீவிர சிகிச்சை தேவையோ என்ற அளவிலான பாதிப்புகள் இல்லை. என்றாலும் இப்போது பி.ஏ.4, பி.ஏ.5 என்ற தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாதிக்கிறது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் கூடுபவர்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். முககவசங்கள் அணிந்து கொள்வதன் மூலமே தொற்றின் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டு கொள்ள முடியும்.

    முதல் தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்காகவும், தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிற வகையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதம் 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது நம்மை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, நமக்கு வந்தால் நமது குடும்பத்தாரையும், ஒட்டுமொத்தமாக அக்கம் பக்கத்தில் இருக்கிற அனைவரையுமே பாதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை.

    செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×