search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jairam ramesh"

    • மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றோ அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை.
    • காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது.

    இந்நிலையில் மே மாதம் அங்கு நடைபெற்றதாக கூறப்படும் ஒரு கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் மணிப்பூரின் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் மற்றொரு இனத்தை சேர்ந்த இரு பெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். 'வலியாலும், கோபத்தாலும் என் மனம் கொந்தளிக்கிறது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. மணிப்பூர் மகள்களுக்கு நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்கள், ராஜஸ்தான், சட்டிஸ்கார், மணிப்பூர் என எந்த மாநிலத்தில் நடந்தாலும் அதற்கெதிராக அனைத்து மாநில முதல்வர்களும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்', என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:

    மணிப்பூர் குறித்து இத்தனை நாட்கள் பேசாமல் இருந்து விட்டு தற்போது நிலைமை கை மீறி போனதும் பிரதமர் பேசுகிறார். புரிந்து கொள்ள முடியாத வகையில் 1800 மணி நேரம் பேசாமல் இருந்து விட்டு தற்போது 30 வினாடிகள் பேசுவது மன்னிக்க கூடியது அல்ல. மணிப்பூரில் நடைபெற்ற குற்றங்கள் போல் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிலையில் பிற மாநிலங்களை அதனோடு ஒப்பிட்டு பேசுவது திசைதிருப்பும் முயற்சி. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றோ அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், மணிப்பூர் சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 64 நாட்கள் கழித்துதான் முதல்வர் பிரேன் சிங் கைது நடவடிக்கை குறித்து பேசுகிறார். இது மிகவும் தாமதமான நடவடிக்கை. வெறும் வார்த்தைகள் இனி பலன் அளிக்காது, செயல்களில் காட்ட வேண்டும். பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிற செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

    இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விடுதலையின்போது, கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், " இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டபோது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், "தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்துவதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன்படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று கூறினாராம். அதன்படியே சென்னையில் செங்கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ந் தேதி தெரிவித்தார்.

    ஆனால் அப்போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலமாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆக, பா.ஜ.க.வின் போலித்தகவல் மூட்டை வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.

    இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல என ஜெய்சங்கர் கருத்து
    • பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தியாவை விமர்சிப்பது ராகுலுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று. தேர்தலில் ஒரு முறை ஒரு கட்சி வெல்வதும் மற்றொரு முறை வேறொரு கட்சி வெல்வதும் யதார்த்தமானது. உலகமே நம்மை கூர்ந்து கவனித்து வரும் வேளையில், உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல. இதன் மூலம் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை வளராது", என கூறியிருந்தார்.

    மேலும், "2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு சக்திகளின் உதவிக்காக அங்கே சென்று விளம்பரப்படுத்தப்படுகிறது" எனவும் கூறினார்.

    இந்த கருத்துக்கள் காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்க காரணமாயிருந்தவர்தான். இதை தாங்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்", என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.

    மற்றொரு தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா, "பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிக்கிறார். அவர் வேறு புது கதையை சொல்வது நல்லது. பிரதமர் மோடி, நாட்டின் 70-ஆண்டு கால வரலாற்றை எள்ளி நகையாடியிருக்கும் பொழுது, இந்திய அரசியலமைப்புக்கான ஆதார அமைப்புகளின் அழிவை குறித்து வெளிநாட்டில் ராகுல் கவலை தெரிவித்திருப்பது ஒன்றும் தவறல்ல", என கூறினார்.

    • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ் கட்சி தாவினார்.
    • யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகெந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

    மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும், இந்த வெற்றி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ், திடீரென ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெய்ரோன் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்திருருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், இது அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் ஆணைக்கு முற்றிலும் துரோகம் செய்வதாகும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் மீறுவதாக கூறியது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். மாநில கட்சிகளுக்கென சில கடமைகள் உள்ளன என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மேகாலயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது. அப்போது, நாங்கள் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தோம்" என்றார்.

    தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சுகெந்து சேகர் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மேலும் சில தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில், முக்கியமான இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

    • பிரதமர் மோடி அரசு 2014-ம் ஆண்டு மே 26-ந்தேதி பதவி ஏற்றது.
    • பிரதமர் மோடி 9 ஆண்டு கால ஆட்சியை நேற்று நிறைவு செய்துள்ளார்.

    புதுடெல்லி :

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது.

    அந்த வகையில் பிரதமர் மோடி 9 ஆண்டு கால ஆட்சியை நேற்று நிறைவு செய்துள்ளார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, எழுப்பிய முக்கிய பிரச்சினைகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் மூத்த தலைவர்கள் பவன் கெரா, சுப்ரியா ஸ்ரீனேட் ஆகியோருடன் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் பிரதமர் ஆனார். அவரிடம் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகள் எழுப்ப விரும்புகிறது. அந்தக் கேள்விகள்:-

    1. இந்தியாவில் விலைவாசி உயர்வும் (பணவீக்கம்), வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்து வருவது ஏன்?

    2. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும் ஏன்?

    3. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், பொதுச்சொத்துகளை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை செய்வது ஏன்?

    4. 3 வேளாண்மைச் சட்டங்கள் ரத்தானபோது, விவசாயிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றாதது ஏன்? விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படாதது ஏன்? 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு ஆக்கப்படாதது ஏன்?

    5. மக்கள் சிரமப்பட்டு சம்பாதித்து எல்.ஐ.சி.யிலும், பாரத ஸ்டேட் வங்கியிலும் சேமித்த பணத்தை பிரதமர் தனது நண்பர் அதானி பயன் அடையும் வகையில் பணயம் வைப்பது ஏன்?

    6. திருடர்களை தப்பி ஓட விடுவது ஏன்? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் பெருகியும் நீங்கள் அமைதி காப்பது ஏன்? இந்தியர்களை கஷ்டப்பட வைப்பது ஏன்?

    7. 2020-ம் ஆண்டில், சீனா எதையும் ஆக்கிரமித்து விடவில்லை என்று நீங்கள் நற்சான்று அளித்தும், அவர்கள் தொடர்ந்து இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிப்பது ஏன்?

    8. தேர்தல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து வேண்டுமென்றே வெறுப்பு அரசியல் செய்வதும், சமூகத்தில் பயம் நிறைந்த சூழல் தூண்டப்படுவதும் ஏன்?

    9. பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர். சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகளில் அமைதி காப்பது ஏன்? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை கண்டுகொள்ளாதது ஏன்?

    இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பினார்.

    பிரதமர் மோடி தனது மவுனத்தைக் கலைத்துக்கொண்டு இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

    • பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில்.
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் (28-ந்தேதி) திறந்து வைக்க உள்ளார். நாட்டின் தலைவரும், முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 கட்சிகள் புதிய பாராளுமன்றக்கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிக்கின்றன.

    இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

    இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    மோடி அவர்களே, பாராளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில். இது மக்களால் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகம், பாராளுமன்றத்தின் முதல் அங்கம் ஆகும். உங்கள் அரசின் அகந்தை, பாராளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதில் ஜனாதிபதியின் சிறப்பு உரிமையைப் பறித்து எடுத்துக்கொள்வதின்மூலம் நீங்கள் காட்ட விரும்புவது என்ன? இதைத்தான் 140 கோடி இந்தியர்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ராஞ்சியில் நேற்று நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜார்கண்ட் ஐகோர்ட்டு வளாகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார். ஆனால் ஒற்றை மனிதரின் எல்லாமே நானே என்ற அகந்தையும், ஆசையும்தான் டெல்லியில் 28-ந் தேதி பாராளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி திறந்து வைக்கும் அரசியல் சாசன சிறப்புரிமையை மறுக்கிறது.

    அசோகா மாபெரும் மன்னர். அக்பர் மாபெரும் மன்னர். மோடி திறப்பாளர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • 2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்.

    புதுடெல்லி

    ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

    இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று வர்ணித்துள்ளார்.

    • அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தானே சம்பளம் கொடுப்பதுபோல் மோடி நடந்து கொள்கிறார்.
    • நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்தாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார். இந்த வேலைவாய்ப்புகளை அவரே உருவாக்கியது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவரே சம்பளம் கொடுப்பது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் தனக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் அவர் நடந்து கொள்கிறார்.

    ஆனால், அரசு மற்றும் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அழித்தவரே பிரதமர் மோடிதான் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் அறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது.
    • ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது. ஆனால், சீனா, அதானி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கர்நாடகா போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல், பா.ஜனதாவுடன் மோசடியாளர்களுக்கு உள்ள நெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் 'மவுனத்தின் குரல்' ஆக அவர் இருந்து விடுகிறார்.

    ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    ஆனால், அதன் இயக்குனரின் கல்வித்தகுதி பற்றி மத்திய கல்வி அமைச்சகமே கேள்வி எழுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
    • பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.

    பெங்களூரு :

    பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ஆகியோருக்கு அடுத்ததாக பிரதமர் மோடி தற்போது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். வருகிற 10-ந் தேதி 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள். ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போல் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களில் காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்.

    கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கவிழ்ப்பதற்கு முன் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். நிலையான ஆட்சியை நடத்தினோம்.

    261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதனால் காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். ராஜஸ்தானில் நாங்கள் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்திரா காந்தி நகர வேலை உறுதி திட்டம், சுகாதார உரிமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.

    சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சத்தீஷ்காரில் ரூ.9 ஆயிரத்து 270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    • 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்கு சந்தையில் முறைகேடுகள் செய்ததாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது.

    இந்த நிலையில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாங்கள் எங்கள் கோரிக்கையை தொடர்வோம்' என திட்டவட்டமாக கூறினார்.

    அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்தவித தகவல் பரிமாற்றமும் இலலை என கூறிய அவர், அதற்காக ஆளுங்கட்சி முயற்சிக்கவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2023 குறித்த கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கையில், 'வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் எனது தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனச்சட்டங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரல் அரசுக்கு இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.

    அதானி விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதன் மூலம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    • ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
    • பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99 கேள்விகள் கேட்டுள்ளோம். இறுதியாக 100-வது கேள்வி கேட்கிறோம்.

    விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, தேசநலனுக்காக செயல்படுவீர்களா? என்று கேட்கிறோம். அதானி விவகாரத்தில், கடந்த 2-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், அக்குழுவுக்கு விசாரணை குழுக்கள் மீது முறைப்படியான அதிகாரவரம்பு கிடையாது.

    நண்பர்களுடனான நெருக்கம் பற்றியோ, நண்பர்களை செழிப்பாக்க ஆட்சியை பயன்படுத்தியது பற்றியோ விசாரிக்க நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. அக்குழு, அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும்.

    நீங்கள் எதிர்க்கட்சிகள் மீதும், சிவில் அமைப்புகள் மீதும், சுதந்திரமான தொழில் நிறுவனங்கள் மீதும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறீர்கள். அதே தீவிரத்துடன், 1947-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த பெரிய ஊழலான அதானி ஊழலை விசாரிக்க அந்த விசாரணை அமைப்புகளை பயன்படுத்துங்கள் என்று கேட்கிறோம்.

    எனவே, இந்த ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுதான் தேவை. முந்தைய பங்குச்சந்தை ஊழல்களை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுவைத்தான் காங்கிரஸ் அரசுகளும், பா.ஜனதா அரசுகளும் அமைத்தன.

    ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கைவிட்டால், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சொல்கிறது.

    ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×