search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோல்"

    • வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
    • செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

    இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.

    அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.

    தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.

    நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.

     

    அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.

    2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்துவைத்தார்.
    • மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.


    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.

     


    • தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது.
    • பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது. கோவில் என்பது தாயின் கருவறை போன்றது. அந்த கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    தமிழகத்தில் 6-ல் 4 பாகம் நிலங்கள் ஆதீனத்திற்கும், திருக்கோவில்களுக்கும் உள்ள நிலங்கள் ஆகும். அவற்றிற்கு ஆர்.டி.ஆர். என்கிற உரிமை உண்டு. அந்த உரிமையின் பேரில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், அடிமனை வாடகை, தென்னை மர குத்தகை போன்ற பல வகையான நிலங்கள் உண்டு. அவற்றில் 90 சதவீதம் வருவாய் வரக்கூடிய ரீதியில் தான் உள்ளது.

    பெரும்பாலான கோவில்கள் அதற்குரிய இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சில கோவில்கள் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும் பயன்படாத இடத்தில் கட்டப்படும் போது அதற்கு கோர்ட் அனுமதியுடன் தான் அரசு அவற்றிற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இன்று நடைபெற்ற மாநாட்டில் கோவில்களை சிறந்த முறையில் வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும். இந்து கோவில்களான சிவம், வைணவம், சைவம், சமணம், பவுத்தம் போன்ற கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 வரையிலும் கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. அவற்றை குறைத்து கட்டணம் வசூலிக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    1947-ம் ஆண்டு சுதந்திரம் பெறப்படும் போது யாரிடம் இருந்து சுதந்திரம் பெறுவது என்ற கருத்தானது வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சோழவள நாட்டிலே திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக பெறலாம் என்கிற யோசனையை ராஜகோபாலாச்சாரியார் முன்வைக்கிறார். 70 ஆண்டுகளாக நேருவின் அலகாபாத் இல்லத்தில் இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வைத்து தமிழ் ஆதீனங்களுக்கும், தமிழ் சைவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    மத்தியில் கூட்டாட்சி தத்துவம், மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் தான் நமது கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

    ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
    • ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    குத்தாலம்:

    இந்திய சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நிறுவப்பட்டது.

    இதுகுறித்து திருவாவடு துறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது:-

    1947-ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோலை அளிக்கும் நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.

    பின்னர், அந்த செங்கோல் திரும்பப் பெறப்பட்டு, கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. நிறைவாக, பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.

    அண்மையில் பதிப்பிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில், 'செங்கோல் சிறப்பு' என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து விவரமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், அப்போதைய ஆதீனர்த்தர் 20-வது மகா சன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்த மாசிலாமணிப் பிள்ளை (96), இந்த நிகழ்வு குறித்து நேரடி சாட்சியாக உள்ளார்.

    மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்து வாங்கிய பணியை ஆதீன குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதையும், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கியதையும், மூதறிஞர் ராஜாஜி ஏற்பாட்டில் இது நடைபெற்றதையும், மதராஸ் ஆட்சியர் ஆதீனத்துக்கு வருகை புரிந்ததையும், செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதையும் மாசிலாமணிப்பிள்ளை நினைவு கூர்கிறார்.

    ஆதீன குழுவினர் புகைப்படக் கருவியோடு செல்லாத காரணத்தால், மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக, மங்கல நாதமும், திருமுறைத் தமிழும் ஒலிக்க, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆதீன குழுவினர் முறையாக நிறைவேற்றினர்.

    இவையெல்லாம் பல இடங்களில், ஊடகங்கள் உள்பட பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றைத் திரித்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.

    • கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிற செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

    இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விடுதலையின்போது, கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், " இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டபோது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், "தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்துவதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன்படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று கூறினாராம். அதன்படியே சென்னையில் செங்கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ந் தேதி தெரிவித்தார்.

    ஆனால் அப்போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலமாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆக, பா.ஜ.க.வின் போலித்தகவல் மூட்டை வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.

    இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஊர் எல்லையில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை கிடைத்துள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதின திருமடமான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.

    நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மவுன்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை கொடுத்து அதனை ஆதீன தம்பிரான் சடைச்சாமி என்கிற திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு. அந்த செங்கோல் தற்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக திருவாவடுதுறை ஆதீன 24- வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மத்திய அரசின் மூலம் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிவிட்டு மீண்டும் ஆதினத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை அதிகம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஊர் எல்லையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    யானை, அலங்கார குதிரை சகிதமாக மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாக்கியங்கள் முழங்க நான்கு குதிரைகள் பூட்டிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஆதீன கர்த்தரை ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்து சென்றனர். வழியெங்கும் கண்கவர் வானவேடிக்கை பட்டாசுகளால் ஜொலித்த நிலையில் கோலகலமாக ஆதீனகர்த்தர் ஆதீன திருமடம் வந்தார். தொடர்ந்து ஆதின குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்வான்களோடு சேர்ந்து இசை ஆராதனை நடத்தினர்.

    குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக உள்ள வந்தே மாதரம் என்ற தாரக மந்திர சொல்லின பாடலை இன்னிசை கலைஞர்கள் ராகத்தோடு வாசித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் தெய்வபக்தி பாடல்களை இசைக்க ஆதீன திருமடம் இசையால் அதிர்ந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில் இந்தியா சுதந்திரம் பெற்றதின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பொதுமக்கள் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

    • 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.
    • ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அருங்காட்சியகத்தில் கைத்தடியாக இருந்ததை செங்கோலாக நிறுவி பிரதமர் மோடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி புகழாரம் சூட்டினார்.

    பல்லடத்தில் இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து இன மக்களும் வாழும் நம் நாட்டில் அனைத்து மத பிரார்த்தனைகளுடன் 21 குரு மஹா சன்னிதானங்கள் ஆசி வழங்க பாரத பிரதமர் கரங்களால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் செங்கோல் நிறுவப்பட்டது.செங்கோல் மேல் பகுதியில் பசு சின்னம் உள்ளது. இந்துக்கள் தர்ம தேவதையாக பசுவை வழிபடுகின்றனர்.தமிழகத்தில் இருந்து 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.அது அருங்காட்சியகம் ஒன்றில் 'கைத்தடி' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று நம் பாரத பிரதமர் மோடி நம் மண்ணின் மைந்தர்களால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.செங்கோல் முன் பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது பெருமிதம் கொள்ளும்படியாக உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும், ஒரே இடத்தில் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து நாடு வளம் பெற வேண்டி அனைத்து குரு மஹா சன்னிதானங்களும் ஒரே இடத்தில் கூடி வழிபாடுகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    அவிநாசியிலுள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- இந்து தர்மத்தை பின்பற்றும் இந்தியாவின் பெருமை இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.அதிகாரம் பொருந்திய பிரதமர், செங்கோல் சகிதமாக வந்து ஆதீனங்களிடம் தனித்தனியே ஆசிபெற்று நிறுவியிருக்கிறார்.

    நாட்டில் செம்மையான ஆட்சி நடப்பதை உணர்த்தும் வகையில் பாராளுமன்ற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதும், மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என ஒலித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.இந்தியாவில் செம்மையான ஆட்சி நடக்கிறது என்பதன் அடையாளமாகவும், உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது.
    • பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்த போகர் சித்தரின் சீடர் புலிப்பாணி சுவாமிகளின் பாரம்பரியத்தில் 13-வது போகர் ஆதீனமாக விளங்குபவர் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்.

    இவர் கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து சோழர் காலத்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தொடர்ந்து பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை ஆசீர்வாதம் செய்தார். இதையடுத்து பழனிக்கு திரும்பிய புலிப்பாணி ஆதீனத்துக்கு திருஆவினன்குடி கோவில் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவர் சன்னதி வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரத பிரதமருக்கு செங்கோல் வழங்கிய நிகழ்ச்சி மறக்க முடியாது. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கியபோது பிரதமர் மிக எளிமையாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

    பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது. எங்களை பிரதமர் அவரது வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்தார். பழனி மக்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பெருமை அனைத்தும் பழனி முருகனையே சேரும்.

    பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும். பிரதமரை சந்தித்தபோது சித்தர் பீடங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
    • தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும்.

    புதுக்கோட்டை :

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

    செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.

    வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.

    அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.

    அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைகதைகள். அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

    மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.

    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

    அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

    எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

    • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

    புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×