search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scepter"

    • வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
    • செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

    இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.

    அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.

    தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.

    நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.

     

    அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.

    2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
    • ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    குத்தாலம்:

    இந்திய சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நிறுவப்பட்டது.

    இதுகுறித்து திருவாவடு துறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது:-

    1947-ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோலை அளிக்கும் நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.

    பின்னர், அந்த செங்கோல் திரும்பப் பெறப்பட்டு, கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. நிறைவாக, பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.

    அண்மையில் பதிப்பிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில், 'செங்கோல் சிறப்பு' என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து விவரமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், அப்போதைய ஆதீனர்த்தர் 20-வது மகா சன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்த மாசிலாமணிப் பிள்ளை (96), இந்த நிகழ்வு குறித்து நேரடி சாட்சியாக உள்ளார்.

    மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்து வாங்கிய பணியை ஆதீன குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதையும், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கியதையும், மூதறிஞர் ராஜாஜி ஏற்பாட்டில் இது நடைபெற்றதையும், மதராஸ் ஆட்சியர் ஆதீனத்துக்கு வருகை புரிந்ததையும், செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதையும் மாசிலாமணிப்பிள்ளை நினைவு கூர்கிறார்.

    ஆதீன குழுவினர் புகைப்படக் கருவியோடு செல்லாத காரணத்தால், மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக, மங்கல நாதமும், திருமுறைத் தமிழும் ஒலிக்க, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆதீன குழுவினர் முறையாக நிறைவேற்றினர்.

    இவையெல்லாம் பல இடங்களில், ஊடகங்கள் உள்பட பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றைத் திரித்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.

    • கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிற செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

    இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விடுதலையின்போது, கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், " இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டபோது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், "தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்துவதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன்படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று கூறினாராம். அதன்படியே சென்னையில் செங்கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ந் தேதி தெரிவித்தார்.

    ஆனால் அப்போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலமாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆக, பா.ஜ.க.வின் போலித்தகவல் மூட்டை வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.

    இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஊர் எல்லையில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை கிடைத்துள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதின திருமடமான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.

    நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மவுன்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை கொடுத்து அதனை ஆதீன தம்பிரான் சடைச்சாமி என்கிற திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு. அந்த செங்கோல் தற்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக திருவாவடுதுறை ஆதீன 24- வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மத்திய அரசின் மூலம் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிவிட்டு மீண்டும் ஆதினத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை அதிகம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஊர் எல்லையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    யானை, அலங்கார குதிரை சகிதமாக மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாக்கியங்கள் முழங்க நான்கு குதிரைகள் பூட்டிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஆதீன கர்த்தரை ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்து சென்றனர். வழியெங்கும் கண்கவர் வானவேடிக்கை பட்டாசுகளால் ஜொலித்த நிலையில் கோலகலமாக ஆதீனகர்த்தர் ஆதீன திருமடம் வந்தார். தொடர்ந்து ஆதின குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்வான்களோடு சேர்ந்து இசை ஆராதனை நடத்தினர்.

    குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக உள்ள வந்தே மாதரம் என்ற தாரக மந்திர சொல்லின பாடலை இன்னிசை கலைஞர்கள் ராகத்தோடு வாசித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் தெய்வபக்தி பாடல்களை இசைக்க ஆதீன திருமடம் இசையால் அதிர்ந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில் இந்தியா சுதந்திரம் பெற்றதின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பொதுமக்கள் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

    • 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.
    • ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அருங்காட்சியகத்தில் கைத்தடியாக இருந்ததை செங்கோலாக நிறுவி பிரதமர் மோடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி புகழாரம் சூட்டினார்.

    பல்லடத்தில் இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து இன மக்களும் வாழும் நம் நாட்டில் அனைத்து மத பிரார்த்தனைகளுடன் 21 குரு மஹா சன்னிதானங்கள் ஆசி வழங்க பாரத பிரதமர் கரங்களால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் செங்கோல் நிறுவப்பட்டது.செங்கோல் மேல் பகுதியில் பசு சின்னம் உள்ளது. இந்துக்கள் தர்ம தேவதையாக பசுவை வழிபடுகின்றனர்.தமிழகத்தில் இருந்து 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.அது அருங்காட்சியகம் ஒன்றில் 'கைத்தடி' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று நம் பாரத பிரதமர் மோடி நம் மண்ணின் மைந்தர்களால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.செங்கோல் முன் பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது பெருமிதம் கொள்ளும்படியாக உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும், ஒரே இடத்தில் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து நாடு வளம் பெற வேண்டி அனைத்து குரு மஹா சன்னிதானங்களும் ஒரே இடத்தில் கூடி வழிபாடுகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    அவிநாசியிலுள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- இந்து தர்மத்தை பின்பற்றும் இந்தியாவின் பெருமை இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.அதிகாரம் பொருந்திய பிரதமர், செங்கோல் சகிதமாக வந்து ஆதீனங்களிடம் தனித்தனியே ஆசிபெற்று நிறுவியிருக்கிறார்.

    நாட்டில் செம்மையான ஆட்சி நடப்பதை உணர்த்தும் வகையில் பாராளுமன்ற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதும், மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என ஒலித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.இந்தியாவில் செம்மையான ஆட்சி நடக்கிறது என்பதன் அடையாளமாகவும், உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

    புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
    • இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்பட்டது.


    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம் என்று பதிவிட்டுள்ளார்.

    • உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?
    • கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.

    3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

    • பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 21 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
    • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    டெல்லியில் திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து பிரதமர் மோடி நேற்று செங்கோலை பெற்றுக்கொண்டார்.

    புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் இன்று வைக்கப்படுகிறது. இதேபோல், தருமபுரம் ஆதீனம் நினைவு பரிசும், மதுரை ஆதீனம் வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசிய தாமரை மலரையும் பிரதமர் மோடிக்கு வழங்கினர்.

    பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 21 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

    மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    பின்னர், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்த செங்கோல் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தனக்கான அங்கீகாரத்தையும், இடத்தையும் செங்கோல், தற்போது பெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்தியா எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துவார்கள்.

    இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆன்மீகம் பலம் என்று நான் நம்புகிறேன்.

    இது எல்லா சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும். சுதந்திரத்திற்குப் பிறகு புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவியை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த பவனில் கைத்தடியாக (வாக்கிங் ஸ்டிக்) வைக்கப்பட்டு இருந்தது. உங்கள் 'சேவகரும்' எங்கள் அரசாங்கமும் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
    • தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.

    #தமிழன்டா

    தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார்.
    • 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    சென்னை:

    ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு 1947-ம் வருடம் சுதந்திரம் கிடைத்து நேரு பிரதமராக பதவியேற்றபோது அவரது கையில் செங்கோல் ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது. அந்த செங்கோலை சென்னையைச் சேர்ந்த உம்மி பங்காரு சகோதரர்கள் உம்மி டி. எத்திராஜ், உம்மிடி சுதாகர் ஆகியோர் செய்தனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த செங்கோல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமரால் வைக்கப்படுகிறது. இந்த விழாவில் சென்னையில் இருந்து உம்முடி சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் டெல்லி சென்று கலந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து தியாகராய நகரில் உள்ள அவர்களது கடையில் உம்மிடி சுதாகர் அவரது மகன் பாலாஜி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார். மூன்றாம் தலைமுறையான நானும் எனது சகோதரன் மற்றும் 12 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டோம்.

    அவர்கள் கூறிய டிசைனில் இதை தயார் செய்தோம் செய்து முடிக்க ஒரு மாதம் ஆனது. முழுக்க முழுக்க கைத்தொழிலாகவே இதை செய்தோம். மெஷின் பயன்படுத்த விடவில்லை. அப்போது அதன் மதிப்பு ரூ.15,000 ஆகும். இப்போது மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இந்த செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் இருந்ததை கண்டுபிடிப்பதற்கு 4 மாதங்கள் ஆனது.

    75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    இந்த பெருமைமிக்க விழாவில் எங்கள் குடும்பத்தினர் 15 பேர் பங்கேற்கிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மிகப்பெரிய ஒரு வரலாற்றை இந்த சம்பவம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    எங்களது நிறுவனத்தின் சார்பில் பல செங்கோல்களை செய்துள்ளோம். ஆனால் இதில் கிடைத்த பெருமை கவுரவம் எங்களுக்கு வேறு இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர்.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் 14-ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட திருவா வடுதுறை ஆதீனம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடி, முதல்பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலே அடையா ளப்படுத்தியது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுதந்திர தின வாழத்துகளை கூறினார்.

    திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கான செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரவுவிடமிருந்து பெற்று நேருவிடம் அளித்தபோது செங்கோல் வைத்துக்கொண்டு நேரு வுடன் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்கிற குமாரசாமி தம்பிரான் எடுத்துக்கொண்ட புகைப்பட கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆதீனம் சார்பில் 1500 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடியை ஆதீனம் முன்னிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் கைகளில் உயர்த்தி பிடித்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கமிட்டு ஊர்வலமாக சென்றது காண்போருக்கு சுதந்திரத்தின் பெருமையை அடையாளப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×