search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் காலூன்ற நினைக்கிறார்கள்- சீமான்
    X

    பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் காலூன்ற நினைக்கிறார்கள்- சீமான்

    • தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார்.
    • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அரசாங்கமே டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.

    தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    அவர்கள் தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×