search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation"

    • சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
    • மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.

    சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.

    • மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.
    • மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை கிழக்கு மாவட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்தில் உள்ள விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் ஏற்பாட்டில் நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் புழல் பெ.சரவணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ஒன்றிய தலைவர் செல்வ மணி, துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், தங்கராஜன், காமராஜ், மல்லி ராஜா, பரிமளச் செல்வம், எழிலன், கபிலன், அருண், ராமு, திருநாவுக்கரசு, அப்போஸ், டில்லி பாபு, கோவிந்தராஜ், சதிஷ், நாகராஜ், வெங்கடேசன், அஜித்குமார், ராஜேஷ், சீனிவாசன், சீனு, இளைஞர் அணி தனுஷ் சரவணன், ரோகேஷ், சரவணன், செல்வகுமார், விமல், பிரேம்குமார், வார்டு உறுப்பினர் சத்யசீலன், ரதி சீனிவாசன், நிலவழகி இனியன், அருணாதேவி, சீனு, ஆனந்தி நாகராஜன், தர்மிரவி, நாம தேவன், அசோக், அப்பன் ராஜ், மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    • சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாதித்தது. மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதியிலும் வெள்ளம் நீர் சீராக செல்லவில்லை. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால் 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு பல பகுதிகளில் தண்ணீர் வடிய பல நாட்கள் நீடித்தது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாமல் சிறிது சிறிதாக வடிந்தது.

    இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். மழைநீர் வடிகால் இருந்த போதிலும் பரவலாக வெள்ளம் சூழ்ந்து நின்ற பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

    தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 363 பகுதிகளில் 2 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. அந்த பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் இனி தேங்காமல் இருக்க என்ன வழிமுறைகள், மாற்று திட்டங்களை கொண்டு செயல்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


    நகரின் மையப் பகுதிகளில் பல நாட்களாக வெள்ளம் தேங்கி நின்றது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றாலும் கூட இந்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றததற்கான காரணம் என்ன? மழை கால்வாய்கள் இணைப்பு முறையாக உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுபற்றி மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 363 பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் நின்றதற்கான காரணம் என்ன?

    எவ்வளவு நேரத்தில் எத்தனை செ.மீ. மழை பெய்தது என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மழைக்காலம் முடிந்த பிறகு தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ்நர், டெமெல்லோஸ் சாலை, புளியந்தோப்பு அருகில் உள்ள தெருக்கள், ரெட்டேரி ஏரிக்கு பின்புறம், மாதவரம், எம்.ஜி.நகர் சாலை, மணலியில் உள்ள சி.பி.சி.எல். நகர் உள்ளிட்ட சில பகுதிகள் இதில் அடங்கும்.

    அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் பெய்யும் மழை தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரிக்கு பிறகு தான் சில பகுதிகளில் வெள்ளம் ஏன் புகுந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
    • திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி-கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 2 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் புயல்-வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிது சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதால் எந்தெந்த ஏரியா கடுமையாக பாதிக்கப்பட்டது என்ற விவரம் தாலுகா அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளும் மழைநீரில் தத்தளித்ததால் அந்த பகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதில் தென் சென்னையில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 858 குடும்ப அட்டைதாரர்களும் வடசென்னையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 22 லட்சத்து 18 ஆயிரத்து 121 குடும்ப அட்டைகள் உள்ளது.

    இதே போல் திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்களில் சென்னையையொட்டி உள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    மொத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களுக்கு 60 சதவீதம் பேர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளது. அதில் யார்-யாருக்கு பணம் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படும். அரசாணையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 16 தாலுகா அலுவலகம் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ரூ.6 ஆயிரம் கிடைத்து விடும்.

    குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும் தொழில் அதிபர்கள் தவிர்த்து மற்ற பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் அதில் வசிக்கக்கூடிய மக்கள் மட்டுமே புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேல் மருவத்தூர், உத்தரமேரூர் போன்ற உள்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே அதுபோன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. எனவே யாரெல்லாம் உண்மையாக பாதிப்புகளை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எந்தெந்த பகுதிகள், தெருக்கள், பாதிக்கப்பட்டவை என வி.ஏ.ஓ., தாசில்தார்கள் பட்டியல் எடுத்து கலெக்டர்களிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

    எந்த தேதியில் பணம் கொடுக்கப்படும் என்ற விவரம் விரைவில் அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்ட போதிலும் கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டே இருந்ததால் மீட்புப் படையினர் கடும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டனர்.

    கட்டுமான பணி நடைபெற்ற இடத்திற்கு அருகே செயல்பட்டு வந்த கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்த 4 பேரும், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கண்டெய்னரில் அமர்ந்திருந்த சிவில் என்ஜினீயர் ஜெயசீலனும் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த 5 பேரில் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    2 பேர் மட்டும் 40 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்கள். என்ஜினீயர் ஜெயசீலன் மற்றும் நரேஷ் என்ற வாலிபர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.

    இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் மீட்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை. எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து நேற்று இரவு விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் 40 அடி பள்ளத்தில் தேடினர். இன்றும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

    • வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.
    • பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள்.

    பேசும் வார்த்தை சரியாக இருந்தால் கூட இடம், பொருள் பார்த்து பேச வேண்டும். இல்லாவிட்டால் சரியாகவே பேசி இருந்தாலும் சிக்கலில் மாட்டிவிட நேரிடும். அப்படி தான் வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானாவும் சிக்கி இருக்கிறார். வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.

    இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னையின் மொத்த தண்ணீரும் வேளச்சேரி பகுதி வழியாக தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் கடல் உள்வாங்க வில்லை. இதனால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியது என்பதோடு அங்கு நடந்த ஒரு விபத்தை பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு பெரிய பேரிடர்கள் வரும்போது இப்படி பட்ட விபத்துக்களும் ஏற்படுவது சகஜம் தான் என்று சாதாரணமாக சொல்லி உள்ளார்.

    இது தான் இப்போது அவரை சிக்கலுக்குள் கொண்டு விட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களும், ஆத்திரப்பட்டது மட்டுமல்ல தி.மு.க.வினரே கோபம் அடைந்து உள்ளனர். இப்படியா பேசுவது? அவருக்கென்ன அடுத்த தேர்தலில் வேறு தொகுதிக்கு சென்று விடுவார். நமக்குத் தானே சிக்கல் என்று தி.மு.க. தரப்பும் கொந்தளிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மிச்சாங் புயல் காரணமாக பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆரணி ஆறு உடைந்தது. புயல் காற்று மழையால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, பருப்பு, போர்வை ஆகியவற்றை வழங்கினர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் பழவேற்காட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணூரில் எண்ணெய் கசிவு தொடர்பாக துறை அமைச்சர் ஆய்வு செய்வார். அது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.


    புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்று முடிவடையும். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், மிச்சாங் புயலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகர், டிஜே.கோவிந்த ராஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    • 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து விட்டதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' செலுத்தப்படுகிறது. மேலும் மேல்நிலை தொட்டிகள், சம்புகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு சுகாதாரத்துறை மூலம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.

    வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற மழை நீர் மற்றும் நோய் கிருமிகளால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.


    பொதுமக்கள் இந்த சமயத்தில் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. தொற்று நோய்களை தடுக்க சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    வெள்ளத்தில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தனியார் டேங்கர் லாரி, திறந்த வெளி குளங்கள், கிணறுகளில் வெள்ள நீர் கலந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை குடிப்பது பாதுகாப்பானது அல்ல.

    சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. எலி காய்ச்சல், காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். "டாக்னிகள்" என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை சாப்பிட்டால் காய்ச்சல், தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அனைத்து மருத்துவ முகாம்கள், சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. பொது மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றினால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது.
    • மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    புயல், மழை வெள்ளத்தில் சிக்கி தலைநகர் சென்னை தத்தளித்தது. இன்னும் முழு அளவில் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் 3 பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் சந்தித்து பெரும் துயரை அனுபவித்து உள்ளார்கள். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பல கோடிகளை செலவிட்டு உள்ளதாக அரசு கூறினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக அரசை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடை பெறும் 3000 மழைக்கால மருத்துவ முகாமில் சென்னையில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.


    அப்போது அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது. இதில் நாங்கள் செய்தது தான் சரி. 20 செ.மீட்டர் மழையை தாங்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. ஆனால் ஒரே நாளில் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அது மட்டுமல்ல 4-ந்தேதி அடையாறு முகத்துவாரத்தை நேரில் பார்த்தேன். மழை தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை.

    மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    வெள்ளத்தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு எதிலும் கோட்டை விடவில்லை. எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்பட யாருடனும் நான் நேரில் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

    வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

    தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×