search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone"

    • ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது.
    • குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது.

    கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்பு ஏற்படுத்திய தாக்கம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து மாணவர்களை மீள முடியாமல் வைத்துவிட்டது. தொடக்க கல்வி பயிலும் குழந்தைகளின் கைகளில் கூட சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்த பெற்றோரே கையில் ஸ்மார்ட்போனை கொடுக்கும் நிலைமை உண்டாகிவிட்டது

    அதனால் ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது. அப்படி குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்த்தலோ அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் ஏற்பட தொடங்கிவிடும். அது நாளடைவில் வலியை அதிகப்படுத்திவிடும்.

    குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது. அது சட்டென்று கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி உண்டாகுவதற்கும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. செல்போன் பார்க்கும்போது நேராக அமர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இப்போது கல்வி சம்பந்தமான அப்ளிகேஷன்கள் ஏராளமான அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுவது கழுத்து வலிக்கு வழிவகுப்பதோடு மட்டுமில்லாமல் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். அதன் தாக்கமாக தேவையற்ற வலி, வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும்.

    • ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராய்ப்பூர் :

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.

    இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.
    • இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    திருச்சூர் :

    கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

    இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த மாதம் 24-ந்தேதி இதே திருச்சூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார்.

    இதைப்போல கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து காயமடைந்தார்.

    இவ்வாறு அடுத்தடுத்து செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் கேரளாவில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    • ஆண்டனி பிலிப் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஆண்டனி பிலிப் (வயது 36). இவர் வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய அவர் நேற்று கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருந்த செல்போன்கள், புளூடூத் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொரு ட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக ஆண்டனி பிலிப் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுவுக்கு அடிமை, மாதுவுக்கு அடிமை, புகைக்கு அடிமை, சூதாட்டத்துக்கு அடிமை என்று நாம் இதுவரை பார்த்து வந்த அடிமைகளுடன் நவீன இணையதள அடிமையும் இணைந்து வருகிறது.
    • அடிமையாகாமல் மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் நம் கைகளில்தான் உள்ளது.

    சென்னை:

    செல்.... செல்...

    என்று செல்பவர்களே ஒரு நிமிடம் நில்லுங்கள்...

    பொதுவாக ஆஸ்பத்திரிகளில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை, முட நீக்கியல், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல் என்று பலவகையான நோய் சார்ந்த துறைகளை பார்த்து இருப்போம்.

    ஆனால் இங்கு மட்டும் இணையதள சார்பு மீட்பு மையம் என்று ஒருதுறை தனியாக செயல்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

    இணையதள சார்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. சுருக்கமாக சொன்னால் வாழ்க்கையே இணையத்தோடு இணைந்து விட்டது. அதிலும் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது இங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அளிக்கிறது.

    சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி இருக்கைகளில் அமர்ந்து இருந்த இளம்பெண்களை பார்த்ததும் பார்ப்பதற்கு லட்சுமிகரமாக நன்றாகத்தான் இருந்தார்கள்.

    ஆனால் ஒவ்வொருவரிடமும் கேட்ட போதுதான் இன்றைய தலைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறது என்பதை புரிய முடிந்தது.

    தயவுசெய்து பெயர்களை வெளியிடாதீர்கள். எங்களால் நாலுபேர் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சொல்கிறோம் என்றார்கள். இதனால் அவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

    ஒருவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர், நர்சிங் படித்து வருகிறார். அவர் கூறியதாவது:-

    படிப்பதற்கு, செல்போன் உதவிகரமாக இருக்கும் என்றுதான் ஆசைப்பட்டு வாங்கினேன். ஏதோ அவசர தேவைகளுக்கும், தேடலுக்கும் மட்டுமே என்றிருந்த நிலை மாறி விட்டது. தோழிகள், நண்பர்கள் மெசேஜ் அனுப்ப தொடங்கினார்கள்.

    அதன்பிறகு சாட்டிங், அப்புறம் முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தின் இனிமையான பக்கங்கள் ஒவ்வொன்றும் என்னை கவர்ந்தன.

    மெல்ல மெல்ல இணையத்தோடு இணைந்து பொழுதெல்லாம் இணையத்தின் வசமானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    செல்லும் கையுமாகத்தான் எப்போதும் இருப்பேன். வீட்டில் திட்டத்தான் செய்தார்கள். ஆனாலும் எப்போதும் செல்போனைத்தான் நோண்டி கொண்டிருப்பேன்.

    குறைந்தபட்சம் தினமும் 12 மணி நேரம் செல்போன் பார்த்தேன். பார்க்கும் போது ஜாலியாகத்தான் தெரிந்தது.

    ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும், கோபம், எரிச்சல் வந்தது. யாரை பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் கோபம்... கோபம்... எதற்குதான் இப்படி கோபம் வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. அதன்பிறகுதான் சிகிச்சை பெற வந்தேன் என்றார்.

    மற்றொரு இளம்பெண் கல்லூரி மாணவி கூறும்போது, "நான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லுக்கே அடிமையாகி விட்டேன் என்பது எனக்கே புரியவந்தது.

    எப்போது செல்போனில் அதிகமாக மூழ்க தொடங்கினேனோ அதன் பிறகு எனது படிப்பும் மூழ்க தொடங்கியது. அரியர் விழ தொடங்கியது. கேரியர் கேள்விக்குறியானது.

    செல்போனால் சீரழிகிறோம் என்பது தெரிந்தும் அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். அதன்பிறகுதான் இந்த மையத்தை நாடி வந்தேன் என்றார்.

    இந்த மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர் மலர் மோசஸ் கூறியதாவது:-

    இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் அவசியமான தீமையாகவே இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் வகுப்பு, குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஆன்லைன் உரையாடல் என்று எல்லாமும் இணையத்தை சுற்றியே சுழல்கிறது. இயற்கையான மனித சுபாவங்கள், உணர்வுகள், மகிழ்ச்சி எல்லாமே மழுங்கடிக்கப்படுகிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தின் அடிமையாகிவிட்டால் தங்கள் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், தூக்கம் எல்லாவற்றையும் துறந்து செல்போனிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து உடல் பருமன் என்று பல நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை கொடுப்போம்.

    ரிலாக்ஸ் தெரபி, குரூப் தெரபி ஆகியவற்றை கொடுப்போம். குரூப் தெரபி என்பது ஏற்கனவே சிகிச்சை பெற்று மீண்டவர்கள் மூலம் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வைப்போம். இதன் மூலம் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.

    யோகா பயிற்சி உண்டு. தேவைப்பட்டால் மட்டும் மருந்து வழங்குவோம்.

    சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நவீன மாற்றங்கள் வளரும் தலைமுறைக்கு ஏமாற்றங்களை தருவதாகவும் மாறி இருப்பது ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டியது. சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த மையம் உருவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோரது வழிகாட்டுதல்படி இந்த மையம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

    மதுவுக்கு அடிமை, மாதுவுக்கு அடிமை, புகைக்கு அடிமை, சூதாட்டத்துக்கு அடிமை என்று நாம் இதுவரை பார்த்து வந்த அடிமைகளுடன் இந்த நவீன இணையதள அடிமையும் இணைந்து வருகிறது.

    அடிமையாகாமல் மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் நம் கைகளில்தான் உள்ளது.

    • பாலசுப்பிரமணியம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
    • தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). இவர் அவினாசி கோவை புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டனர். அப்போது பாலசுப்பிரமணியன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார் .அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மதுரை திருவிடாகம் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராமன் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடை உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது.

    கோவை,

    செல்போனில் பல ரகங்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், போன் கவர் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து வருகிறது.

    இதனை வாங்குதற்கு கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது. இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சிலர் போலியான ஆப்பிள் முத்திரையை பயன்படுத்தி செல்போன் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இந்த தகவல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி குமரவேல் என்பவருக்கு தெரியவந்தது. அவர் இது குறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி முத்திரையை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவன செல்போன் உதிரிபாகங்களை சில கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர்கள் மதுரை காமராஜ புரத்தை சேர்ந்த முகமத் அப்சர்கனி (வயது 24), ராஜஸ்தானை சேர்ந்த வர்தம் சவுத்ரி (23), மகேந்திரசிங் (28), கேரளா பாலக்காட்டை சேர்ந்த நவுசாத் (39), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கடைகளில் இருந்து போலி முத்திரையுடன் கூடிய 1000 செல்போன் கவர்கள், 25 இயர்போன், 25 யூ.எஸ்.பி கேபில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.
    • சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர்.

    பூரி :

    கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பிரசித்திபெற்ற ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலிலும் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்( ஜனவரி) 1-ந் தேதி முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜெகநாதர் கோவிலின் தலைமை நிர்வாகி வீர் விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • செயலிகளின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
    • செல்போன் செயலிகளில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை காண்போம்.

    உள்ளங்கையில் உலகம்...

    இது தான் தகவல் தொழில்நுட்ப

    வளர்ச்சியின் சாதனை...

    ஆம்! இன்று நம் கைகளில் தவழும் அறிவியலின் குழந்தையான செல்போன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் என்றே சொல்லலாம். 6-மாத குழந்தை முதல் 60-வயது முதியவர்கள் வரை சாதாரணமாக அனைவரது கைகளில் இருக்கும் செல்போனானது மனிதர்களின் வாழ்வை சிகரம் தொட வைத்ததோடு, சிந்திக்கும் அறிவாற்றலையும் பெருக செய்கிறது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்தவொரு நபரிடமும் சில நொடிகளிலேயே தகவல்களை பரிமாறும் பரந்தவொரு சேவையை செல்போன்கள் அளித்து வருகின்றன.

    தகவல்கள் மட்டுமின்றி வணிகம், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு, பண பரிமாற்றம், அறிவியல் மற்றும் வரலாற்று தரவுகள் உள்ளிட்ட அனைத்து துறை செயல்பாடுகளையும் இணையம் மற்றும் செயலிகள் மூலம் அவை வழங்குகின்றன. 1ஜி, 2ஜி, 3ஜி, 4ஜி என்று இருந்த தொலைத் தொடர்பு சேவையின் 5-வது தலைமுறையான 5ஜி-யும் தற்போது வந்துவிட்டது. 4-தலைமுறைகளில் இல்லாத அளவில், வினாடிக்கு 1 ஜிகா-பைட் என்ற வேகத்தில் இணையத்தின் செயல்பாடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற செல்போன்களை தமது இன்னொரு இதயமாக கருதி, அனைவரும் அதனை பாதுகாக்கின்றனர்.

    இத்தகை செல்போன்களை மூளையாக இருந்து செயல்பட வைப்பது செயலிகள்தான்(ஆங்கிலத்தில் அப்ளிகேஷன்). வெவ்வேறு விதமான செயலிகளின் உதவியோடு தமது அன்றாட பணிகள் மற்றும் தேவைகளை அனைத்து தரப்பு மக்களும் நிறைவேற்றுகின்றனர். அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் செயலிகளின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சில நபர்கள் போலியான செயலிகளை உருவாக்கி அதன் மூலம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் பணத்தை இழந்ததோடு, உயிரையும் மாய்த்து வரும் சோகமும் நடந்தேறி வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் செயலிகளில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை காண்போம்.

    மோசடி போன்கால்:

    செயலிகள் வருவதற்கு முந்தைய காலத்திலும் செல்போன் மோசடி என்பது இருந்தது. அதாவது நமக்கு தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் சில குறிப்பிட்ட அழைப்புகளில் பேசும் முகம் தெரியாத நபர்கள் பொய்யான நிறுவனத்தின் பெயரைக் கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் உங்களது செல்போன் எண்ணிற்கு விலை உயர்ந்த பரிசு பொருள் கிடைத்துள்ளது. தபால் மூலம் பரிசுப் பொருள் உங்களை வந்து சேரும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்க வேண்டும் என்று தெரிவித்து, எதுவும் இல்லாத பார்சலை அனுப்பி பணத்தை அபகரித்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

    அதுபோல, சமூக ஊடகங்களில் அறிமுகமாகும் சில நபர்கள் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், உங்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாகவும் கூறி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட்டாலும், இன்னும் சில நபர்கள் இந்த மோசடியில் சிக்கி கொள்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது இதையெல்லாம் மிஞ்சும் வண்ணம் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

    முதலீட்டில் அதிக வருமானம்:

    இன்றைய நவீன உலகில் அனைத்து தரப்பு மக்களும் தங்களது வருங்கால சேமிப்பிற்காக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட மோசடி கும்பல் வங்கி மற்றும் பிசினஸ் செயலி என்று பல்வேறு விதமான போலி முதலீட்டு (இன்வெஸ்மெண்ட்) செயலிகளை உருவாக்கி, அதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி மற்றும் நிலையான வருமானம் தொடர்ந்து வழங்குவதாக கூறி ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். தொடக்க காலத்தில் சிறிய முதலீடு செய்யும் நபர்களை கவரும் வண்ணம் அவர்களுக்கு பணப்பலன்களை அளித்துவிட்டு, பின்னர் அவர்கள் செய்யும் பெரிய அளவிலான முதலீட்டின் போது பணப்பலன் வழங்காமல் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன முதலீட்டு செயலி மூலம் நடைபெற்ற ரூ.150 கோடி மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கும்பல் பண மோசடி செய்தது அம்பலமானது. இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட மோசடி கும்பல் சீன முதலீட்டு செயலியைக் கொண்டு ரூ.900 கோடி அளவில் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு பல்வேறு போலி முதலீட்டு செயலிகளின் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பண பரிமாற்றம்:

    பண பரிமாற்றத்தில் உள்ள நேர விரையம் மற்றும் நேரடி வங்கி பயன்பாடு ஆகியவற்றை எளிதாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப உருவாக்கப்பட்டதே ஆன்லைன் பண பரிமாற்ற செயலி. இந்த செயலியின் மூலம் வங்கிகளுக்கு செல்லாமலேயே, ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு நாம் பண பரிமாற்றம் செய்ய இயலும். இவ்வாறு எளிதாக்கப்பட்ட முறையினை தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த செயலிகளைப் போன்று போலியான பெயர்களில் பல செயலிகள் ஊடுருவி வருகின்றன. இந்த செயலிகளானது, நாம் அளிக்கும் தரவுகளின் மூலம் பண பரிமாற்றம் நிகழ்ந்தது போல போலியான சான்றுகளை அளிக்கும். ஆனால் சம்பந்தப்பட்டவரின் கணக்கிற்கு பணம் செல்லாது. இதனை பயன்படுத்தி சில நபர்கள் பண பரிமாற்றம் செய்தது போல மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி சம்பவங்களில் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

    விளையாட்டில் விபரீதம்:

    மைதானத்தில் விளையாடிய காலங்கள் கடந்து, தற்போது செல்போன் திரையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய தலைமுறையினர். செல்போன் செயலிகளில் பொழுது போக்குக்காக தொடங்கப்பட்ட விளையாட்டுகள் தற்போது முதலீடு என்ற கவர்ச்சிகரமான வலைபின்னலில் பலரை சிக்க வைத்து மோசடி செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலரும் தங்களது பணத்தை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நாம் அறிந்த ஒன்றே. நாள்தோறும் விளையாட்டின் மூலமும் விபரீதங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடன் முறைகேடு:

    இவ்வாறு அணிவகுத்து கொண்டிருக்கும் மோசடி செயலிகளின் வரிசையில், தற்போது பெரும்பான்மையான மக்களை பதம் பார்த்து கொண்டிருக்கும் ஒரு செயலி தான் கடன் செயலி. அவசரத் தேவைக்காக பணம் கிடைக்காத சில நபர்கள் உடனடியாக பணம் கிடைப்பதால் இந்த செயலிகளை நாடுகின்றனர். குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி, பின்பு அதிக பணம் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். பணம் பெறும் நபர்களின் செல்போன் தரவுகளை இந்த செயலிகளின் மூலம் மோசடி நபர்கள் சேகரித்துக் கொள்கின்றனர். பின்னர் அதிக பணம் கேட்டு மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதையடுத்து அதிக பணம் தர மறுக்கும் நபர்களை பற்றி, அவர்களின் செல்போனில் இருந்து பெறப்பட்ட எண்களுக்கு அவதூறான செய்திகளை பரப்புகின்றனர். மேலும், இதன் அடுத்தகட்டமாக அவர்களது செல்போன் தரவுகளின் மூலம் சேகரித்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் பகிரும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பாதிப்படைந்த சிலர் மனமுடைந்து விரக்தியில், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

    இதைப்போல, மோகத்தினால் சிலர் டேட்டிங் செயலியில் போலியான கணக்கு வைத்திருக்கும் நபர்களை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

    பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதர்களின் செயல்பாட்டை எளிதாக்குதல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட செயலிகளை சிலர் தவறாக உபயோகித்து அதனை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். முறையற்ற இந்த செயல்பாட்டினால் பல்வேறு மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். வெவ்வேறு விதமான மோசடி சம்பவங்கள் செல்போன் செயலிகள் மூலம் அரங்கேறி வருவதால், அதில் சிக்காமல் இருப்பது என்பது சவால் மிகுந்த ஒன்றாகவே தற்போது வரை இருந்து வருகிறது.

    • சிறுவர், சிறுமிகள் தற்போது செல்போனுக்கு அடிமையாகி விட்டனர்.
    • இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

    யவத்மால் :

    இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலதரப்பட்ட வயதினரையும் வசீகரம் செய்துள்ளது. பலர் அதற்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டிய சிறுவர்களின் கையில் ஸ்மார்ட் போன்கள் உலாவுகின்றன.

    இதனை பெற்றோர் கண்டிக்கும் பட்சத்தில் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

    இந்த நிலையில் யவத்மாலில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பன்சி கிராம பஞ்சாயத்தில் தான் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கஜானன் டேல் கூறியதாவது:-

    சிறுவர், சிறுமிகள் தற்போது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும், சமூகவலைத்தளங்களில் உலாவுவதற்கும் அடிமையாகி விட்டனர். இதனால் சிறிய குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க கிராம சபையில் முக்கிய முடிவு எடுத்தோம். இதன்படி 18 வயதுகுட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த முடியாது.

    இந்த முடிவை செயல்படுத்தும் போது தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். அதன்பிறகும், சிறுவர்களுக்கும் செல்போன் பயன்படுத்துவதை பார்த்தால் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை மீண்டும் படிக்க செய்ய வேண்டும், செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான் முதல்முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வர வேண்டும்" என்றார்.

    • பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.

    நெல்லை:

    பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்றார். வி.எம்.சத்திரம் சோதனைசாவடி அருகே சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கி உள்ளார்.

    அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் - செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    ×