search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    • கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை
    • ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது - அண்ணாமலை

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், "ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கோவையில் 'எங்கள் ஓட்டை காணவில்லை' என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    தேர்தலில் ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

    • எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்
    • நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்

    கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

    எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.

    கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.

    நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.

    விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.

    தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இத்துட் ஹோடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,

    "தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும்.

    சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.
    • பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் இன்று (ஏப்ரல் 11) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.

    பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.

    ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். 

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர்.

    இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.

    இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
    • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

    பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

    இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

    மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
    • இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது பேசிய அண்ணாமலை, "கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள் பாஜகவை தேர்வு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    இந்நிலையில், குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை பாஜக மீறி இருக்கிறது. அதேபோல், தேர்தல் நன்னடத்தை 8 விதிகளின் படி மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என்ற விதியையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்ட மீறல்களுக்காக, மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    கடந்த 16-ம் தேதி ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா ஊடக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதில், "இந்த கூட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால், இந்து மதத்தையே ஒழிப்பேன் என்று கூறுவதையும், அதை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடுவதையும் என்ன சொல்வது.. இதை கூறியதற்கே நாம் சீறியிருக்க வேண்டாமா?

    எல்லா மதங்களையும் ஒழிப்பேன் எனக் கூற அவர்களுக்கு தைரியம் கிடையாது. ஆன்மீகத்திற்கு எதிரான எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியாக வரக்கூடாது. நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டி தின்னக்கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்" என்று பேசியிருந்தார்.

    கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணியில், பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது
    • இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணியத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த புகாரில், "நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்திருந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இவர் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுப்பணித் துறை வளாகத்தை அவர் பயன்படுத்தியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 மாணவர்கள், சில ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரங்களில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

    விதிமீறலில் ஈடுபட்டுள்ள வேட்பாளரை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார்.
    • இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.

    கோவை:

    பிரதமர் மோடி கோவையில் நேற்று ரோடுஷோ மேற்கொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் முன்பிருந்து அவர் வாகன பேரணியை தொடங்கினார். இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார். இதனால் மோடியின் வாகனம் மெதுவாக வந்தது. 2 ½ கிலோ மீட்டர் தூரமுடைய ஆர்.எஸ்.புரம் வந்தடைய சுமார் ஒரு மணி நேரம் ஆனது. ரோடு ஷோ முடிந்த பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோவை சுற்றுப்பயணம் குறித்து பதிவிட்டார். அந்த பதிவு தமிழில் அமைந்திருந்தது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    கோவை மக்கள் என் மனதை வென்று விட்டார்கள். இன்று (நேற்று) மாலை நடந்த ரோடு ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன் ரோடுஷோ நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
    • சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×