"திரைக்கதை திலகத்திற்கு கோவை செலுத்தும் அஞ்சலி!"-மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சி

பாக்கியராஜின் நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார் அவரது பிரம்மாண்ட உருவப்படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்துகிறார்.
Coimbatore Pays Tribute to Director K.Bhagyaraj
Published on

தமிழ் சினிமாவின் 'திரைக்கதை திலகம்' என்று போற்றப்படும் மறைந்த புகழ்பெற்ற இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் கே.பாக்கியராஜின் வாழ்க்கை மற்றும் சினிமா சாதனைகளை நினைவு கூரும் வகையில், கோவையில் பிரம்மாண்ட நினைவேந்தல் மற்றும் மலரஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி மாரடைப்பால் காலமான கே.பாக்கியராஜின் மறைவு, இந்தியத் திரை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக மாறியுள்ள நிலையில், கோவையின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பாக்கியராஜ் ரசிகர் மன்றம் இணைந்து இந்த மாபெரும் அஞ்சலி கூட்டத்தை நடத்துகின்றனர்.

கோவை நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் தியேட்டர் அரங்கில், இன்று மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த உருக்கமான நிகழ்வில் கே.பாக்கியராஜின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் அவரது மகன் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.

திரைப்படம் மற்றும் உருவப்படம் திறப்பு:

பாக்கியராஜின் நெருங்கிய நண்பரும் மூத்த நடிகருமான சிவகுமார் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கே.பாக்கியராஜின் பிரம்மாண்ட உருவப்படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்துகிறார்.

நினைவு உரை:

கே.பாக்கியராஜின் ஆரம்பகாலத் திரையுலகப் பயணத்தில் அவரோடு பயணித்தவரும், அவரது சிறுவயது நண்பருமான பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கலந்துகொண்டு, பாக்கியராஜுடனான தனது திரைக்கால நினைவுகள் மற்றும் சுவாரசியமான நட்பைப் பகிர்ந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த நினைவேந்தல் கூட்டத்தை அன்னபூர்ணா குழுமத் தலைவர் டி.ஸ்ரீனிவாசன், கோவையின் முன்னாள் மேயர் வி.கோபாலகிருஷ்ணன், ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், லயன்ஸ் கிளப் முன்னாள் சர்வதேச இயக்குநர் கே.ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி மற்றும் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தினர் இணைந்து மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்துள்ளனர்.

"திரைக்கதைக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்து, எளிய மனிதர்களின் கதைகளை உலகறியச் செய்த மாபெரும் கலைஞனுக்குக் கோவை மக்கள் செலுத்தும் இந்த அஞ்சலி கூட்டத்தில், பொதுமக்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com