search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya"

    • ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதி.
    • அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோதிக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

    இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

    மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.


    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற்றது.
    • ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.

    இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது.
    • கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன.

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழக கோயில் வளாகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவும், இந்து அமைப்புகளும் முயற்சி செய்தது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என அன்றைய தினம் உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பதில் மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன.

    கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22-ந் தேதி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மறுநாள் 23-ந்தேதி முதல் பாலராமரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பால ராமரை தரிசிக்க அயோத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் திரண்டனர். 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இன்று காலை அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடிகிறது.

    இன்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்கள் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை பணத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
    • பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

    ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.

    பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.

    பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
    • அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

    கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

    அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.

    அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.

    ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

    வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.

    ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.

    அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர்.

    அயோத்தி:

    அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ராம பிரானை தரிசித்து வருகின்றனர்.

    இதில் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர். அன்றைய தினத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்கள் ரூ.3 கோடியே 17 லட்சம் செலுத்தி உள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    • அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
    • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ஐந்து வயது பாலகனாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. ஆனால், முதல்நாள் சூரிய உதயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை 3 மணி முதல் கோவிலில் குவியத் தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆறு மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையிலும் எந்தவித அசாம்பாவிதம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

    நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அனைத்து பக்கதர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகக்ப்படுவார்கள். பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.

    • பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.
    • கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    திருப்பதி:

    குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்தவர் பாவிகா மகேஸ்வரி (வயது 14). தீவிர ராம பக்தரான பாவிகா மகேஸ்வரி தனது அறிவு கூர்மையால் 10 வயதில் ராமாயண கதை முழுவதும் கற்றுத் தேர்ந்தார்.

    பொதுமக்கள் இடையே ராமாயணம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவு பொதுமக்களிடையே பிரபலமானது. பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.

    2011-ம் ஆண்டு அங்குள்ள ஜெயிலுக்கு சென்று கைதிகளிடையே சொற்பொழிவு ஆற்றினார்.


    இதையடுத்து கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவு செய்வதில் சிறுமிக்கு ரூ.52 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.


    இந்த நிலையில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை அறிந்த பாவிகா மகேஸ்வரி தனக்கு சொற்பொழிவு மூலம் நன்கொடையாக கிடைத்த ரூ.52 லட்சத்தை சிறப்பு நன்கொடையாக வழங்கினார்.

    அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    • ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன.
    • ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும்.

    இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள் உள்பட நவரத்தினங்களும் இடம் பெற்றுள்ளன. 18,567 சிறிய வட்ட வடிவ வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் சுமார் 3 ஆயிரம் நவரத்தின கற்கள் அந்த மாலையில் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    அதுபோல 5 அடுக்கு கொண்ட நெக்லசும் ராமரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்தது தவிர அயோத்தி ஆலய நிர்வாகம் சார்பிலும் ராமருக்கு பல்வேறு நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர் இந்த நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெற்றிசுட்டி, இரண்டு கைகளிலும் அணியும் அணிகலன்கள், இடுப்பில் கட்டப்படும் அலங்கார நகைகள், கிரீடங்கள் என ராமருக்கு விதவிதமான நகைகளை தயார் செய்து உள்ளனர். 500 கிராம் எடை கொண்ட சிறிய நெக்லஸ் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ராமருக்கு அணிவிக்கப்படும் தங்க மாலைகளில் விஜய்மாலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தங்க மாலை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும்.

    ராமர் கையில் வைத்திருக்கும் அம்பு-வில் ஒரு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையில் போட்டுள்ள வளையல்கள் 850 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அவை 560 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ராமருக்கு கையில் அணிவிக்கப்படும் மோதிரங்களும் பல்வேறு வகையான நவரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளன.

    • அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல.
    • இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!"-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.

    மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.


    உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

    அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.


    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.

    ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.

    இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×