search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் பாலம்"

    • பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.
    • கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    திருப்பதி:

    குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்தவர் பாவிகா மகேஸ்வரி (வயது 14). தீவிர ராம பக்தரான பாவிகா மகேஸ்வரி தனது அறிவு கூர்மையால் 10 வயதில் ராமாயண கதை முழுவதும் கற்றுத் தேர்ந்தார்.

    பொதுமக்கள் இடையே ராமாயணம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவு பொதுமக்களிடையே பிரபலமானது. பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.

    2011-ம் ஆண்டு அங்குள்ள ஜெயிலுக்கு சென்று கைதிகளிடையே சொற்பொழிவு ஆற்றினார்.


    இதையடுத்து கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவு செய்வதில் சிறுமிக்கு ரூ.52 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.


    இந்த நிலையில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை அறிந்த பாவிகா மகேஸ்வரி தனக்கு சொற்பொழிவு மூலம் நன்கொடையாக கிடைத்த ரூ.52 லட்சத்தை சிறப்பு நன்கொடையாக வழங்கினார்.

    அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    • அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல.
    • இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!"-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.

    மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.


    உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

    அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.


    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.

    ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.

    இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
    • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    சென்னை:

    ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி அரசு வங்கிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் வங்கிகள் இன்று முழுமையாக செயல்பட்டன.

    இதனால் அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு சென்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் முழு அளவில் செயல்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    • ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
    • வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    தருமபுரி:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நல்லானூரில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

    அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதால், கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாளில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவுள்ளேன் என்றார்.

    திராவிட மாடல் ஆட்சி என்று சொல்பவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.


    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 94 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி செய்வதாக அறிவித்து உள்ளார்கள்.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை.

    வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர்.
    • சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் புனித யாத்திரை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவர் பத்தாவது நாள் விரதத்தில் உள்ளார். இந்த பதினோரு நாள் பிரதமர் விரதத்தில் கடைசி நாட்கள் தமிழகத்திற்கு வந்திருப்பது மிக சிறப்பாக உள்ளது.

    பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் முதல்வர் இல்லம் உள்ளிட்ட 126 சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வார்கள் என்று நினைக்கிறேன்.


    கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட 55 மத வழிபாடு தளங்களை நாளை தமிழகத்தில் சுத்தம் செய்கிறோம். அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ராமர் என்ற உணர்வு தமிழக மண்ணில் கலந்திருக்கிறது. ராமரை தமிழக மண்ணில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

    சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம். இதனை யார் எதிர்க்கிறார்களோ அப்போது அதன் பெருமை மேலும் அதிகரிக்கும். ராமேசுவரம் கோவிலுக்கு பிரதமர் வருகையொட்டி முழுமையாக அறநிலை துறை ஒத்துழைப்பு தந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீ ராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.
    • மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. நம் நாட்டில் புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகளுக் கும்மேலான போராட்டம். இதற்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். அயோத்தியின் சரயு நதியில் ரத்தம் ஓடியதெல்லாம் வரலாறு.

    அயோத்தியில் ராமர் கோவிலை தம் வாழ்நாளில் பார்த்து விடமாட்டோமா என கோடிக்கணக்கான மக்கள் ஏங்கினார்கள். ராமர் கோவிலை பார்க்காமலேயே போய்விடுவோமோ என பலர் கலங்கினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் என்பது சாத்தியமே இல்லை என பலர் நினைத்தார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, யாருக்கும் பிரச்சினையின்றி அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.


    இந்த நாள் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைப் போல மிகமிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. எது நடக்கவே நடக்காது என நினைத்தார்களோ அதை அனைத்துத் தரப்பினரும் மகிழும் வகையில் நடத்திக் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.

    அகிம்சை வழியில் போராடி சாதித்த மகாத்மா காந்தி, 'ராம ராஜ்ஜியம்' என்பதை தனது கனவாக, கொள்கை முழக்கமாக முன்வைத்தவர். மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

    ராமர் கோவில் திறப்புக்கு முன்பாக நம் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்து பிரதமர் மோடி தரிசனம் செய்து உள்ளார். ராமர் கோவிலுக்காக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ந் தேதி முதல் தரையில் படுத்துறங்கி கடுமையான விரதம் இருந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செயற்கரிய செயலை செய்து முடித்த பிரதமர் மோடியின் புகழ் வரலாற்றில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இல்லங்கள் தோறும் விளக்கேற்றி புதிய விடியலை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். நேற்று அக்னி தீர்த்த கடல், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய அவர் கோவிலில் ராமநாதசுவாமி-பர்வ தவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைபணி மேற்கொண்டார்.

    இதில், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்டத்தலைவர் தரணி ஆர்.முருகேசன், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் ஆறுமுக லிங்கம், ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.

    • அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
    • பிரதமரின் வருகையொட்டி 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு.

    ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தனுஷ் கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடி உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி செல்லாமல் ஊர் திரும்புவதில்லை.

    தனுஷ்கோடிக்கு எளிதாக சென்று வரும் வகையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது. 

    அதாவது, இலங்கையை ஆண்ட ராவணன் சீதா தேவியை சிறைபிடித்து சென்றபோது, அவரை மீட்க ராமர் முதலில் தனுஷ்கோடி வந்தார். முன்னதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதரிடம் வில், அம்பு பெற்றார் என்றும் பின்னர் அரிச்சல்முனையில் இருந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும் ராமாயண காவியம் கூறுகிறது.

    மேலும், அந்த பகுதியில் ராமர் மணலால் சிவனை உருவாக்கி வழிபட்டார். அதேபோல் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்த பின்னர் இதே அரிச்சல்முனையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை நடத்தியுள்ளார்.

    எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீரை தெளித்து செல்வது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் வருகை தரும் பிரதமர் மோடி நாளை காலை தான் தங்கியிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை செல்கிறார்.

    அங்கு கடலின் அழகை ரசிப்பதோடு, கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவ லிங்க பூஜையில் கலந்து கொள்கிறார். 

    பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்கிறார். இலங்கையை ஆண்ட ராவணின் தம்பியான விபீஷணன் ராமபிரான் மீது கொண்ட பற்று காரணமாக அண்ணனுக்கு எதிராக போரிட்டார்.

    இறுதியில் ராவணன் இறக்கவே அவரது தம்பியான விபீஷணனை ராமர் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அது நடந்த இடம் இந்த கோதண்டராமர் கோவில் என்பதால் ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த கோவிலில் பிரதமர் மோடி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.

    பிரதமர் கடற்கரை பகுதிக்கு வருவதையொட்டி இந்திய கடலோர காவல் படை, கடற்படையினர் உள்பட 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார்.
    • பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.

    நாமக்கல்:

    பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார்.

    அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளையராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சாமி தரிசனம் செய்த மனீந்தர் ஜீத் பிட்டாவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் நினைவு பரிசாக ஆஞ்சநேயர் படம் வழங்கப்பட்டது.

    பின்னர் மனீந்தர் ஜீத் பிட்டா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்காக நாமக்கல் வந்துள்ளேன். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் செல்கிறேன். சில அரசியல் கட்சிகள், ராமர் கட்டிய பாலம் இல்லை என சொல்கின்றனர்.

    அது கற்பனை. அவ்வாறு இருந்திருந்தால், அந்த பாலம் உடைந்து விட்டது என கூறுகின்றனர். ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன். இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில், நான் அதை நிரூபித்துவிட்டுத்தான் செல்வேன்.

    இலங்கைக்கு செல்ல சேது பாலம் கட்டும்போது, ராமருக்கு ஆஞ்சநேயர் எப்படி உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல், பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
    • மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.

    புதுடெல்லி :

    ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.

    அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

    இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.

    ''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    • மத்திய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

    புதுடெல்லி:

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது,

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இழுத்தடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றனர்.

    இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் மத்திய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

    • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

    வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

    தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×